Showing posts with label ஆலோசனை. Show all posts
Showing posts with label ஆலோசனை. Show all posts

Nov 15, 2010

பிணந்தின்னும் சாத்திரங்கள்

மதுரை இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறது. பின்னே, மத்திய அமைச்சரின் மகனுக்கல்லவா திருமணம்?

ஒரு சராசரி பணக்காரனின் திருமணம் என்றாலே அந்தப் பகுதி கொஞ்சம் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகத்தான் செய்யும். (எல்லாம் ஒரு விளம்பரம்தான்!) மதுரை இளவரசருக்குக் கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும்?

தயாநிதியை மதுரை இளவரசர் எனச் சொல்வதற்கு எனக்குக் கொஞ்சமும் கூச்சமில்லை. ஏனெனில் மதுரை மன்னருக்கு மகன் என்றால்... நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர் இளவரசர்தான்.

மதுரையில் (நான் பார்த்தவரை)ரயில்வே பாலம் மற்றும் மேயர் முத்து பாலங்கள் முழுவதும் சீரியல் லைட் அலங்காரம். மேலும், யானைக்கல் பாலம், விக்டர் ஆல்பர்ட் பாலம் முழுவதும் சீரியல் லைட்டுகள், சூரிய வடிவ டியூப் லைட்டுகள், கொடிகள், தோரணங்கள்.

என் நண்பன் சொன்னான்: வேற வீட்டுக்குக் கல்யாணத்துக்கு இவர்கள் வருவதாக இருந்தாலே அலங்கார வளைவுகள், தோரணங்கள், பேனர்கள் வானையும் நம் மூச்சையும் முட்டும்... இவர்களின் வீட்டுத் திருமணம் என்றால் என்னென்ன நடக்கப் போகுதோ?

ஆனால் அப்படியொன்றும் பெரிய அளவில் பேனர், தோரணங்கள் இல்லைதான் என முதலில் ஆறுதலடைந்தேன். ஆனால் இப்போது அப்படியிருந்தால் கூடப் பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

மதுரை உள்ளிட்ட தமிழக நகரங்கள் முழுவதும் மின்பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஆனால் 13ஆம் தேதியிலிருந்து மதுரை நகர் இரவு முழுவதும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு பாலங்கள் முழுவதும் டியூப் லைட்டுகள், சீரியல்கள் அத்துடன் தமுக்கம் மைதானம் போகும் வழியெங்கும் ஃபோகஸ் லைட்டுகள் எரிக்கப்படுவதற்காக நாம் பகலெல்லாம் புழுங்கிச் சாகிறோம். பிறகு இந்தியாவில் இரண்டாவது பணக்கார அமைச்சரின் பணத்தை செலவளிப்பதற்கு வேறு நியாயமான காரணம் வேண்டாமோ?
சூரியனுக்கு வெளிச்சம் காட்டும் பல்பு

பாதை மறிக்கும் சூரியக்கூட்டம்
நோ கமண்ட்ஸ் (இடம் மதுரை கல்லூரி)

ஆனால் நமது கேள்வியெல்லாம் ஒன்றுதான்... சூரிய குடும்பம் என்று தமிழகமே உங்களைப் போற்றுகிறது. உங்கள் பேனர்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. சேகுவெரா, ஜார்ஜ் புஷ், சத்ரபதி சிவாஜி போன்ற உலக ஆளுமைகளின் பிம்பங்கள் எல்லாம் உங்கள் உடல்களில் பிரதி செய்யப்படுகின்றன... ரொம்ப மகிழ்ச்சி...

உங்கள் சூரிய குடும்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து இரண்டு மணி நேரம் மின்வெட்டை நிறுத்தினால் உங்களையும், திருமணம் செய்யப் போகும் இளவரசரையும் நாடு போற்றும். உங்கள் கட்சியினர் மட்டுமல்ல, கட்சி சாராத பொது மக்களும் போற்றுவார்கள்.

மதுரை மக்கள் மணமக்களைப் போற்றுவதற்கு மேலும் சில ஆலோசனைகள்

1. உடனடியாக மதுரை முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை புதிதாகப் போட்டால் அதற்குக் காரணமான மணமக்களை மதுரை மக்கள் மனம் நிறைவாகப் பாராட்டுவார்கள். வாழ்த்துவார்கள்.
2. கல்யாண விளக்குகள் எரியும் நாளிலிருந்து ஒரு மாதத்துக்கு மதுரை மக்களுக்கு மின்வெட்டு இல்லை.
3. திருமணத்திற்கு முன்னும் பின்னும் மொத்தம் மூன்று நாட்கள் மதுரை நகருக்குள் பேருந்தில் எங்கு சென்றாலும் இலவசம். (ஒரு நாளைக்காவது ஷேர் ஆட்டோ தொல்லையிலிருந்து மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.)
4. யாரோ எம்.எல்.ஏ ஆவதற்காக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தவர், மகன் திருமணத்துக்கு ஒரு வீட்டுக்கு ஆயிரம் ரூபாயாவது தருவார் என எதிர்பார்க்கலாம்.
5. திருமணத்தையொட்டி பெட்ரோல் விலையை சட்டென்று பாதியாகக் குறைக்கலாம்.
6. திருமணத்தன்று வாழ்த்துச் செய்தி அதிகமாகப் பரிமாறிக் கொள்ளப்படும் என்பதால் அன்று அனைத்து மொபைல் சர்வீஸும் எஸ்.எம்.எஸ் இலவசமாக்கப்படும்.
7. அன்று பிறக்கும் குழந்தைகளில் தயாநிதி பெயர் சூட்டுவோருக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்படும்.
8. அன்று மதுரை நகர் முழுவதும் மையங்கள் நிறுவி மக்களுக்கு விருந்தளிக்கப்படும்.

சட்டமன்ற தேர்தல் வெகு அண்மையில் இருப்பதால் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள மேற்கண்ட ஆலோசனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜோக்ஸ் அபார்ட், உண்மையில் தற்கால அமைச்சர் மகனுடைய திருமணம் என்கிற ஆடம்பர விதிகளின்படி திருமணம் நடந்தது எனில் ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணம் ஏற்படுத்திய விளைவையே தி.மு.க.வும் சந்திக்கும். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாதபோது விதி எல்லோருக்கும் ஒன்றுதான், அது நியூட்டன் ஆனாலும் சரியே!

மறுபுறம், ஜெயலலிதாவை விமர்சித்த அளவுக்கு திமுகவை விமர்சிக்கும் நெஞ்சுரமோ துணிச்சலோ அஞ்சா நெஞ்சமோ தமிழகத்தின் பிழைப்புவாத ஊடகங்களுக்கு இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

`பேயாட்சி செய்யும் நாட்டில் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று சொன்ன பாரதியின் பாடல் இன்று எவ்வளவு கனகச்சிதமாய்ப் பொருந்துகிறது. பிறகு, எவ்வளவு அராஜகம் நடந்தாலும் வேறு வழியேயில்லாமல் முதலமைச்சரும், காவல்துறையும், அமைச்சர்களும், வணிக நிறுவனங்களும், பொதுமக்களும் இந்தத் திருமணத்தை வாழ்த்தித்தானே ஆக வேண்டியிருக்கிறது.

(சம்பந்தமில்லாத ஒரு குறிப்பு: நேற்று சி.டி.யில் மனோகரா திரைப்படம் பார்த்தேன். கதை, வசனம்: மு.கருணாநிதி)

May 28, 2010

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு - புதிய வலைப்பூ

நண்பர்களுக்கு,

மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு நான் இங்கே மீண்டும். (வெல்கம் பேக்கு ;) அதுவும் என் புதிய வலைப்பக்கத்தை அறிமுகம் செய்யவே.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக புதிதாய் ஒரு வலைப்பக்கத்தை திறந்துள்ளேன். பயனர்களுக்கு பயன்பெறத்தாருங்கள். உங்களிடம் இருக்கும் வேலைவாய்ப்புகளையும் அனுப்பித்தாருங்கள்.

அங்கு புதிய பதிவு...

http://nafjobs.blogspot.com/2010/05/urgent-recruitments-netsol-ibm.html

நன்றி

Dec 25, 2009

டைம் மேனெஜ்மண்ட்

சென்ற மாதம் நான் கலந்துகொண்ட ஒரு ஓரியண்டேஷனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பதிவு. டைம் மேனெஜ்மண்ட் -  இதை நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் நடைமுறைப்படுத்தி பயனடையலாம் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

டைம் மேனெஜ்மண்ட் - சமய | கால | நேர மேலாண்மை என்று பெயர்த்தெடுக்கலாமா? இல்லை டைம் மேலாண்மை? எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும், எந்த மொழியில் இருந்தாலும் நம் தினசரி வாழ்வில் நமக்கான நேரத்தை திட்டமிட்டு செயல்படுத்துவதை டைம் மேனெஜ்மண்ட் எனலாம்.

டைம் மேனெஜ்மண்ட் ஏன்?
தினசரி வாழ்வில் நம்முடைய செயல்களை முறையாக திட்டமிடவும், பகுக்கவும். முக்கிய வேலைகளை கண்டறிந்து செயல்படுத்தவும்,
நம்முடைய மற்றும் நம் குழுவுடைய வேலைகளை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்கவும், செயல்திறன் மற்றும் எண்ணிக்கையை வளர்த்துக்கொள்ளவும் டைம் மேனெஜ்மன்ட் அவசியமாகிறது.
காலம் - சேமித்து வைக்க முடியாது, வெகு விரைவில் அழிந்து போகக்கூடியது. இறந்து போகக்கூடியது, அளவானது. அதனால் தான் அதை சரியாக திட்டமிடுவதும் பகுப்பதும் மிக அவசியமாகிறது.

பொதுப்பிரச்சனைகள்
தெளிவற்ற எதிர்பார்ப்புகள், குறிக்கோள்கள்.
போதிய தொடர்பின்மை.
வீணாகும் முயற்சிகள்.
முறையற்ற திட்டமிடல், முக்கியப்படுத்தல்.
மன அழுத்தம்.

சரியான திட்டமிடல் என்பது; ஆற்றல் மிக்கதாகவும், பயிற்சிக்குகந்ததாகவும், வலைவுதன்மை மிக்கதாகவும், இலகுவானதாகவும், எளிதில் நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

நேரத்தை திட்டமிடும் போது கவனிக்க வேண்டியவை;
சந்திப்புகள், தொடர்புகள்
காலாவதி தேதி குறிக்கப்பட்டவை
நடந்து கொண்டிருக்கும் வேலைகளில் தற்போது செய்யவேண்டியவை
குறிப்புகள், எண்ணங்கள், ஆலோசனைகள்
நிதி நிலைகள்
சொந்த வேலைகள்
சமுதாய வேலைகள்
பொழுது போக்கு

குறிப்பாக நேரத்தை திட்டமிடும் போது, அவற்றை முடிக்க வேண்டிய காலத்தையும் வரையருக்க வேண்டும். உதாரணமாக செய்து முடிக்க வேண்டிய வேலை, ஒரு மணி நேரத்திலா, ஒரு நாளிலா அல்லது ஒரு வாரத்திலா என்பதையும் வரையருக்க வேண்டும். அவை அலுவலக வேலையா, சொந்த வேலையா, சமுதாய வேலையா என்பதை பொருத்து அவற்றிற்கான முக்கியத்துவத்தையும் வகைப்படுத்தலாம். இவை ஒவ்வொன்றிலிருந்தும் அவசரமாக செய்து முடிக்க வேண்டியதையும் பகுக்க முடியும். உதாரத்திற்கு; அலுவலகப் பணியில் நமக்கு அவசரமானதையும் முக்கியமானதையும் முதலில் செய்து முடிக்கவேண்டும்.

மேலாளருக்கு செய்து தரவேண்டிய பணிகள் = முக்கியம் ஆனால் அவசரமில்லை. (அது அவருக்கு அவசரமாகவும் முக்கியமானதாகவும் கூட இருக்கலாம்... நமக்கில்லை) இதற்கான முக்கியத்துவத்தை இரண்டாவதாக்கலாம். இதே போல ஒவ்வொறு பணியையும் வகைப்படுத்தி திட்டமிடலாம்.

கீழிருக்கும் மேட்ரிக்ஸ் பாருங்கள்.


ஒரு பதிவர் என்ன வகையில்...
  1. அலுவலகப் பணி = முக்கியமானது+அவசரமானது - முதலில் செய்து முடிக்கப்பட வேண்டியது.
  2. சொந்த மடல்கள் வாசிப்பது = முக்கியமானது ஆனால் அவசரமில்லை - அடுத்ததாகச் செய்யலாம்.
  3.  பதிவு எழுதுவது = அவசரம் ஆனால் முக்கியமில்லை - மதியத்திற்கு மேல் வைத்துக்கொள்ளலாம்.
  4. பின்னூட்டம் | கும்மி | ஜங்க் மெயில் ஃபார்வட் = அவசரமுமில்லை முக்கியமுமில்லை - நேரமிருந்தால் செய்யலாம்.
[யாருப்பா அது... தீர்ப்ப மாத்தி எழுதச் சொல்றது :)]
  • ஒரு வேலையை செய்து முடிக்க நம்மிடம் இருக்கும் காலமும் இன்னபிற சாதனங்களையும் பொருத்து அவற்றிற்கான திட்டத்தை பகுக்க வேண்டும். - ஆள், பொருள், பண பலம்
  • ஒரு வேலையில் நமக்கான பங்களிப்பை பொருத்தே அவற்றின் முக்கியத்துவத்தை அமைக்க வேண்டும் - பணியிடம், குடும்பம், சமூகம்
  • ஒரு வேலையில் நமக்கான பொறுப்பு - மேலாண்மை, உறவு, பொதுநலன்
  • ஒரு வேலையை செய்து முடிக்கும் போது அதற்கிருக்கும் மதிப்பையும் கவனத்தில் கொண்டே நேரத்தையும் திட்டமிட வேண்டும்.
குறைந்தபட்சம் நம்முடைய அன்றாட வேலைகளை ஒரு வாரத்திற்கேனும் சரியாக திட்டமிட்டுச் செய்தால், அடுத்துவரும் வாரத்தில் முந்தைய (திட்டமிட்ட) வார பலன் கண்கூடாகத்தெரியும்.

ஆயிரம் மைல்களுக்கான பயணம் முதல் ஒரு அடியில் இருந்தே ஆரம்பிக்கிறது என்று யாரோ சொல்லியிருக்கிறார். நமக்கான பலன் தரக்கூடிய நம் வாழ்வின் திட்டமிடுதலை இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்.




Oct 29, 2009

குவைத்தில் சென்றவார இரண்டு நிகழ்வுகள்

ஆன்லைன் மோசடிகளில் பலவற்றை பல தளங்களில் வாசித்திருக்கிறேன். என்னைத்தெரிந்த நண்பர்களுக்கும் எனக்குத்தெரிந்தவரை மோசடிக்காரர்களின் வகை நுட்பங்களை அவ்வப்போது சொல்லிவருகிறேன். ஆனாலும் அறிமுகமானவரோ அல்லாதவரோ ஏமாற்றப்பட்டதாக அவ்வப்போது வரும் செய்திகள் வேதனையளிக்கிறது. ஏமாற்றுபவர்களும் புதிது புதிதாக யோசிக்கிறரார்கள். நமக்கு தோன்றாத, கற்பனைக்கு எட்டாத வகையில் எல்லாம் ஏமாற்றுகிறார்கள், ஏமாறுகிறவர்களும் அவ்வாறே.
நமக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத புதியவர்களின் ஆசை வார்த்தைகளை, தொடர்பு முயற்சியை மோசடி என்று உறுதியாக அனுமானிக்காவிட்டாலுமே அவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது என்று பலராலும் அறிவுருத்தப்படுகிறது. இவற்றை நாம் தெரிந்திருந்தாலும் சில வேளைகளில் அதிமேதாவித்தனமாக நடந்துகொள்வதுண்டு. உதாரணமாக, இணையத்தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் ஒரு முறையாவது இப்படியான மின்னஞ்சல் வந்திருக்கும்.
Congratulations, it's your lucky day! You've just won $5,000!
இதை படிக்கும் அனைவருக்கும் சபலம் தட்டும், இருந்தும் ஷிஃப்ட் டெலிட் செய்பவர்கள் யதார்த்தவாதிகள். இதற்கு ஒரு பதில் அனுப்பினால் என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது என்று ரிப்ளையை தட்டுபவர்கள் யதார்த்தவாதியாக தன்னை நம்பிக்கொல்’பவர்கள். மெயில் அனுப்பியவன் பார்வையில் இவர்கள் ‘வலையில் அருகே வந்துவிட்ட மீன்’ அதை எப்படி வலைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்பதும் வலை வீசியவனுக்குத் தெரியும். லாட்டரியில் கிடைத்திருக்கும் பணத்தில் உனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மீதியை எனக்கு அனுப்பு’ என்பது போன்று பலரும் மெயில் செய்ததாக சொல்லக்கேட்டிருக்கேன். எனக்குத்தெரிந்த பலர் மெயில் ரிப்ளை செய்துவிட்டு அவன் கேட்ட பணம் அனுப்பாவிட்டாலும் அவர்களோடு போனில் பேசியே பணத்தை விட்டிருக்கிறார்கள்.  ஆனால் சென்ற வாரம் நான் கேட்டறிந்த ஒரு புதிய செய்தி மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
தென் ஆர்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவர், 80 குவைத் தினாருக்கு செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர் பாவிக்கும் மொபைலின் சேவை வழங்கும் வத்தானியாவிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது, பேசியவர் அவ்வாறுதான் சொல்லியிருக்கிறார். அழைப்பின் போது நம்மாளின் பெயர், அவரது சிம் கார்டு சீக்ரட் நம்பர் மற்றும் சிம் கார்டுடைய தனிப்பட்ட நம்பர் ஆகியவற்றை சொல்லி, ‘உங்களுக்கு 30,000 குவைத் தினார் பரிசு கிடைத்திருப்பதாகவும் குவைத்தில் லாட்டரி தடைசெய்யப்பட்டிருப்பதால், குவைத்திற்கு வெளியே நடைபெற்ற குலுக்கலின் பரிசுத்தொகை நேரடியாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படும், எனவே இந்தியாவிற்கு அனுப்புவதற்கான செலவு மற்றும் சில அலுவலக செலவுகளுக்காக 200 குவைத் தினார் அனுப்ப வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார். நம்மாள் இதை யாருக்கும் சொல்லவில்லை. அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் ஐந்தும் பத்துமாக கடன் வாங்கி 160 தினார் வெஸ்டன் யூனியன் மூலமாக அனுப்பியிருக்கிறார். பணம் அனுப்பும் போது வெஸ்டன் யூனியனில் கேட்டிருக்கிறார்கள், ‘நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பவேண்டும்?, ஏதும் தவறான செயலில் ஈடுபடுகிறீர்களா?’ என்பதாக, இவரும் இல்லை.. இல்லை.. என்னுடன் வேலை செய்யும் நண்பர் லீவில் சென்றிருக்கிறார். ஏதோ கஷ்டமாம், அவருக்குத்தான் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.  பாகிஸ்தானில் பணம் கிடைக்கப்பெற்றதும், இன்று மாலை 5 மணிக்கு உங்களது பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும். வீட்டிலிருந்து யாரையாவது வெஸ்டன் யூனியனுக்கு சென்று காத்திருக்கச் சொல்லுங்கள் என்று சொல்லப்பட,  இவரும் வீட்டிற்கு அழைத்து ‘நாம பணக்காரங்களாகிட்டோம், இனி நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்திடும், ஒரு பெரிய பைய எடுத்திட்டு போயி வெஸ்டன் யூனியன்ல வெயிட் பண்ணுங்க. நான் போன் பண்றேன்’ என்று சொல்லிவிட்டாராம். வீட்டிலிருந்து சென்றவர்கள் இரவு வெஸ்டன் யூனியன் கதவு மூடப்படும்வரை காத்திருந்து திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.
மறுநாள் ரஹீம் அறைவாசியிடம் மெதுவாக விஷயத்தை சொல்லியிருக்கிறார். அறைவாசி மூலமாக விஷயம் கசிந்திருக்கிறது. ரஹீமை தெரிந்தவர்கள் அனைவரும் போய் அனுதாபத்தோடு சிலர் திட்டவும் ஆரம்பிக்க, ரஹீம் பாகிஸ்தானுக்கும் சவுதிக்கும் (அங்கிருந்துதான் அழைப்பு வந்திருக்கிறது) மீண்டும் மீண்டும் போன் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நபர், நான் பாகிஸ்தானிலிருந்து உன் வீட்டிற்கு பணம் அனுப்பினால் உன்னை தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் கைது செய்து உன் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விடுவார்கள். குவைத்திற்கு அனுப்பினாலும் நீ ஊர் திரும்ப முடியாது. இப்போது சொல்.. பணம் வேண்டுமா? என்று மிரட்டியிருக்கிறார். இவர் விடாமல் மீண்டும் மீண்டும் போன் செய்து தங்கை கல்யாணம், அம்மா ஆபரேஷன் என அழுதிருக்கிறார். அந்த நபருக்கு மனம் உருகியோ அல்லது ரஹீமுடைய தொந்தரவு தாங்காமலோ சுமார் 150 தினார் இந்தியாவிற்கு அனுப்பி கொடுத்திருக்கிறார். ரஹீம் கொடுத்ததில் மீதி மற்றும் போனுக்கு செலவு செய்தது என சுமார் 5000 ரூபாய் நட்டம், இருந்தாலும் ஆள் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
சாதாரணமாக இம்மாதிரி மோசடிக்காரர்கள் யாரும் பணத்தை திரும்ப தந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. இவர் ஏதோ தொழிலுக்கு புதுசு போல… பாவம். நான் நினைக்கிறேன் வேறு யாரோடமோ ஏமாற்றிய பணத்தை ரஹீமுக்கு நேரடியாக அனுப்பியிருக்கிறார் போல. பணம் கையில் கிடைத்ததும் ரஹீம் அவருக்கு மிரட்டல் அறிவுரை செய்தாராம். :)
இவ்வகை மோசடிகளில் இருந்து காத்துக்கொள்ளவும், அவற்றை பகுத்தறியவும் இங்கே சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக்கொள்ளலாம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பகாலா என்று சொல்லப்படும் அரபு நாடுகளின் சிறு மளிகை கடைகளில் பெரும்பாலும் இந்தியர்கள், பெங்காலிகள் வேலைக்கு இருப்பார்கள். என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு 24 மணி நேர பகாலாவில் பெங்காலி ஒருவர் கல்லாவில் இருப்பார். அன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இரண்டு மூன்று குவைத்தி சிறுவர்கள் வந்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். பெங்காலி தர மறுக்கவே திருப்புளி (ஸ்க்ரூ ட்ரைவர்) யை கொண்டு  அவர் வயிற்றில் குத்தியவாறே திருப்புளியை சுற்றியிருக்கிறார்கள். நிகழ்விடத்திலேயே உயிர் போய்விட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகுதான் யாரோ பார்த்து காவல்துறைக்கு தகவல் சொல்ல, அதற்கடுத்த நாளே கொலைகாரனை பிடித்துவிட்டார்கள்.cctv-poster
பகாலாவிற்கு எதிரில் இருக்கும் அபார்ட்மண்டின் சிசிடிவி  பதிவில் இருந்து கொலைகாரனுடைய வாகன எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்டி கொடுத்த குற்றவாளிகள் பற்றிய பல செய்திகளை படித்திருக்கிறேன். குற்றவாளிகளால் ஊகிக்க முடியாத தடயமாக சிசிடிவி இருக்கிறது என்றாலும் கொல்லப்பட்ட உயிர் திரும்ப வராது.
இன்றும் சில அரபிகள், இந்தியர்கள் (பெங்காலி, நேபாளி, இலங்கையர்) என்றாலே ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். பேருந்தில் பயணிக்கும், தெருவில் நடந்து செல்லும் நம்மவர்களைக் கண்டால் தொல்லைகள் தருவதும் பணம் பரிப்பதும் அன்றாட நிகழ்வே. குவைத்தில் அரபி சிறுவர்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்பதால், மாலை வேளைகளில் குழுவாக பேருந்தில் சென்று விளையாடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இவர்களின் குழுவைக் கண்டால் பேருந்து ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றுவிடுவார். அவ்வாறு நிறுத்தாமல் செல்லும் பேருந்தின் சன்னலில் கல் எறிந்து கண்ணாடி உடைக்கப்படும். அதை பழுதுபார்க்கும் செலவும் ஓட்டுனர் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படுகிறது.
நாம் வேலைக்குச் செல்லும் நாட்டின் குடிகளையும் வேலை வாங்கும் திறமையான வேலைக்குச் செல்பவர்களுக்கே மதிப்போடு மரியாதையும் கிடைக்கிறது என்பதை சவுதியிலும் குவைத்திலும் கண்டிருக்கிறேன். ஏனைய நாடுகளிலும் அவ்வாறே இருக்க வேண்டும். அம்மாதிரி தகுதியான வேலையில் நல்ல ஊதியத்தோடு வெளிநாடுகளில் வேலை செய்பவர்களாலேயே வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்கொள்ள முடிகிறது. குவைத்தை பொருத்தவரை தினார் 250 (1 X 163 இந்திய ரூபாய்) க்கும் அதிகமாக ஊதியம் வாங்குபவர்களே ஓரளவு பணத்தை சேமிக்க முடிகிறது. மற்றவர்களின் வரவுக்கும் குடும்ப செலவுக்கும் சரியாக போய்விடுகிறது. வீட்டு வேலைக்கும், கட்டிட வேலைக்கும் வந்து பல துன்பங்களை சகித்தவாறே நாட்களை கடத்தும் இந்தியர்களை காணும் போதும், அவர்களின் துன்ப நிகழ்வுகளை கேட்டறியும் போதும் மனம் வேதனையடைகிறது. குறைந்த சம்பளத்திற்கு வெளிநாடு வந்து சிரமப்படும் இந்தியர்களை பற்றி அடுத்த வாய்ப்பில் எழுத முயற்சிக்கிறேன். இறைவனை நாடினால்…

Oct 12, 2009

ஓசியில் ஓர் உலகத் தந்தி - ட்விட்டர்

ஓசியில் ஓர் உலகத் தந்தி - ட்விட்டர்

மாலையில் அலுவலகம் சென்று விட்டால், ஒரு காஃபி குடிக்கக்கூட வெளியில் செல்ல முடிவதில்லை. பின்ன.. அந்த கேப்புல நம்ம பசங்க ஏதாவது ட்விட்டுறாங்களே. நேத்து அப்டித்தான் 'சின்ன வேலையா' போயிட்டு வரதுக்குள்ள, நம்ம மேல அபாண்டமா குற்றம் சொல்லிட்டாங்க.. சாரி.. ட்விட்டிட்டாங்க. ஆனாலும் சில உண்மைகள், 'பெண்களுக்கு ரொம்ப பிடிச்சவன்'. அப்டிங்கிற ரேஞ்சில் ட்விட்டினதுனால போனாபோகுதுன்னு விட்டுட்டேன். நான் பொறுமையா இருந்ததால அத்தோட போச்சு இல்லைன்னா.. போன், பார், குத்து, ரத்தம், ஆஸ்பத்திரி அளவுக்கு பெருசா போயிருக்கும்.

அப்போ ட்விட்டர் அவ்ளோ மோசமானதா? இல்லைங்க...  நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி, அக்கம் பக்கம் நடக்கிற விஷயத்தையெல்லாம் நம்ம அடுப்பங்கறையில வந்து சொல்லும். அண்டார்டிகாவில் இருந்து ஆஸ்டின்பட்டி வரை எல்லாமே ட்விட்டருக்கு அக்கம் பக்கம்தான்.
  • தலைமை அலுவலகத்தில் இருந்து மேனேஜர், என் அலுவலகம் வர ஆயத்தமாகிறார்.
  • சென்னையில் இரு முக்கிய பதிவர்களுக்கிடையே கைகலப்பு, ரத்தம்.
  • தேக்கடியில் படகு கவிழ்ந்தது.
  • சோழவந்தானில் பட்டாசுவெடி விபத்து.
  • திருப்பூர் அரசாங்க கடை எண் 214க்கு எதிரில் இருக்கும் பாட்டிக்கு அழகான பேத்தி இருக்கிறாள்.
  • பெங்களூருவில் மழை, விமான நிலையம் செல்ல பேருந்து இல்லை.
  • தமிழில் கிரந்தம் தேவையா?
  • புட்டு என்பதை இலங்கையில் பிட்டு என்று சொல்வார்கள்.
  • பாராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு.
  • அடுத்த நோபல் ஒசாமாவிற்கு வழங்கப்படுமா?
  • சுமத்ராவில் சுனாமி எச்சரிக்கை.
  • அமெரிக்க சூறாவளிக்கு பெயர் கேத்ரீனா என்றால், தமிழக சூறாவளிக்குப் பெயர் புவனா?
  • வெண்பாம்... 
இது போன்ற அவசியமான மொக்கைகளும், அவசியமில்லாத குப்பைகளும் ட்விட்டரில் உடனுக்குடன் பரிமாறப்படும். ஆற்றுநீரில் அனைத்தையும் அள்ளிக் குடிக்க முடியாது, நமக்கு வேண்டியதை எடுத்து பயன்பெறலாம்.

யாரேனும் எனக்கு செய்தி சொல்ல வேண்டும் என்றால், நான் 24 மணி நேரமும் ஆன்லைனில் இருப்பேனே.. சாட்டிங்கில் சொல்லலாமே. என்றால், அங்குதான் ட்விட்டர் மாறுபடுகிறது, இது உங்களுக்கென்று சொல்லப்படும் செய்தியல்ல, ஆனால் உங்களுக்காகவும் சொல்லப்படும் செய்தி. உங்களுக்குத் தேவையானதை நீங்கள் எடுத்துக்கொண்டு மேலே உரையாடலாம்.

ட்விட்டரில் கணக்கு துவங்குவது எப்படி? 

http://twitter.com/ நுழைந்து பயனர் கணக்கு துவங்கி கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களை, உங்களை தெரிந்தவர்களை பின் தொடருங்கள்.  உங்கள் சகோதரனான என்னை பின்தொடர, http://twitter.com/PeerMhd சென்று Follow வை க்ளிக் செய்ய வேண்டியதுதான்.
Follow
இனி எனது ட்விட் (மெஸேஜ்) எல்லாம் உங்களுக்கும் தெரியவரும். உங்கள் (அடுப்பங்கறை) தளத்திற்கே வரும். நானும் உங்களை தொடர்ந்தால், உங்கள் ட்விட்களும் எனக்கு தெரியவரும்.
உங்கள் ட்விட்டர் தளத்தின் Home  சென்றால், கீழுள்ளவாரு பெட்டி வரும்.
twitting
பெட்டிக்குள் உங்களது ட்விட்டை எழுதி அப்டேட் செய்யுங்கள். அவ்வளவுதான்.. உங்கள் ட்விட் உலகத்திற்கு சொல்லப்பட்டுவிட்டது. ஓசியில் ஒரு உலக தந்தி. ம்.. ஒரு விஷயம், ஒரு ட்விட்டில் 140 எழுத்துக்களுக்கே அனுமதி. அதே நேரம், நீளமான சில சுட்டிகள் இணைக்கப்படும் போது, அவை தானாக சுருங்கிக்கொள்கிறது. (அதன் நுட்பம் தெரிந்தவர்கள் சொல்லவும்)

ட்விட்டர் ட்ரிக்ஸ்...
  • ஒருவர் பெயருக்கு முன்னால் @ சேர்த்தால், அது அவருக்கு சொல்லப்படும் செய்தி, ஆனாலும் அனைவரும் படிக்கலாம். எ.கா; @PeerMhd
  • ஒருவர் பெயருக்கு முன்னால் d சேர்த்தால், அது அவருக்கு மட்டும் சொல்லப்படும் நேரடி செய்தி, வேறு யாருக்கும் தெரியாது. (அவரும் நம்மை பின்தொடர வேண்டும்) எ.கா d peermhd (no case sensitive)
  • ஒரு வார்த்தைக்கு முன்னால் # சேர்த்தால் பிற்பாடு தேடி எடுக்க உதவும். எ.கா #Nobel
இவற்றை  செய்யலாம்..
  • எளிதாகவும் சிறியதாகவும் பயனர் பெயர் வைத்துக்கொள்ளலாம் 
  • உங்கள் எண்ணத்தோடு ஒத்துப்போகும் மற்ற ட்விட்டர்களை தொடரலாம்.
  • அடிக்கடி ட்விட்டுங்க..
  • இடையிடையே எதிர்வினைக்கு இடமளிங்க..
  • ஆசுவாசமா இருங்க..
  • ஒவ்வொரு எழுத்துக்கும முக்கியத்துவம் கொடுங்க.. 
  • ஒவ்வொரு ட்விட்டுக்கும் / வார்த்தைக்கும் மதிப்பு கொடுங்க..
  • பீக் அவர்ல ட்விட்டுங்க..
  • நேர்மையா இருங்க, சந்தோசமா இருங்க..
  • எந்தப்பொருளையும் விற்பனை செய்ய முயற்சிக்காதீங்க..
  • ஒரு பொருளுக்கும் நமக்கும் உண்டான தொடர்பை சொல்லலாம், தொடர்பு இல்லாததையும் சொல்லலாம்.
  • சுட்டிகளை பரிமாறலாம்,
  • நேரத்திற்கு ஏற்றாற்போல் சூடான தகவல்களை பரிமாறலாம்.
  • கேள்வி கேட்கலாம், பதில் சொல்லலாம்..
  • என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று சொல்லலாம்..
  • நம்மை பின் தொடருபவர்களையும் மதிக்க வேண்டும்,
இவற்றை தவிர்க்கலாம்...
  • உங்களால் சமாளிக்க முடியாத அளவிற்கான ட்விட்டர்களை பின்தொடரவேண்டாம். 
  •  யாரையும், எதையும் குறை சொல்ல வேண்டாம். 
  •  ஒவ்வொரு ட்விட்டுக்கு முன்பும் கவனம். 
  •  140 எழுத்துக்கள்.. மற்றவருக்கு உதவியாகவோ, காயப்படுத்தவோ, ஆறுதலாகவோ அல்லது தவறான புரிதலாகவோ இருக்க முடியும்.
சரி.. ட்விட்டரினால் கிடைக்கும் லாபம் என்ன?
  • ஒத்த கருத்துக்களுடனான அறிவு பலப்படும். 
  •  மாற்று கருத்து குறித்தான பரவலான மனநிலை அறியலாம் 
  •  சமகால நிகழ்வுகளை உடனுக்குடன் அறியலாம். 
  •  வலைப்பக்கத்தின் தரம் உயரும். 
  •  வலைப்பக்க ஹிட்ஸ் அதிகரிக்கும் 
  •  மற்ற பதிவர்களுடனான தொடர்பு ஏற்படுத்தலாம்.
  •  ஒத்த கருத்துடையவர்களுடனான நட்பு பெருகும். 
  •  ட்விட்டர் விளம்பரத்தின் மூலம் பணமும் பண்ணலாம்.
Firefox நெருப்புநரி பாவிப்பவர்கள் http://twitterfox.net/ Addon இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். TwitterFox இப்போது EchoFon என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

echo

http://www.tweetdeck.com/beta/ இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். TweetDeck ப்ரௌஸர் இல்லாமலேயே இயங்கக்கூடியது. ரிப்ளை ஆல், வியூ ப்ரோஃபைல் போன்ற பல பில்ட்இன் ஆப்ஷன்ஸ் உள்ளது.
TwitterDeck
    ட்விட்டர் தளத்தின் ஸ்டேட்ஸ் தெரிந்து கொள்ள http://tweetstats.com/ செல்லலாம். அங்கு கீழுள்ளது போன்ற விபரங்கள் திரட்டி தரப்படுகிறது.
    tweetstats
    tweetstats1 tweetstats2

    ட்விட்டர் பிரபலங்களின் முகவரி,
    http://twitter.com/PeerMhd – பீர் | Peer [Its Me… :-)]

    http://twitter.com/BarackObama – ஒபாமா
    http://twitter.com/schwarzenegger - அர்னால்ட்
    http://twitter.com/mrskutcher – டெமிமூர்
    http://twitter.com/britneyspears – ப்ரிட்னி ஸ்பியர்ஸ்

    http://twitter.com/SMKrishnaCong – எஸ்.எம். கிருஷ்ணா
    http://twitter.com/ShashiTharoor – சசி தரூர்
    http://twitter.com/chetan_bhagat – சேட்டன் பகத்
    http://twitter.com/PrabhuChawla – பிரபு சாவ்லா
    http://twitter.com/MallyaMan – விஜய் மல்லையா
    http://twitter.com/heshpathi – மகேஷ் பூபதி
    http://twitter.com/mdhoni – ம. சிங் தோனி
    http://twitter.com/Aamir_Khan – ஆமிர்கான்
    http://twitter.com/amitabh_bachan – அமிதாப் பச்சன்
    http://twitter.com/preityzinta – ப்ரீதி ஜிந்தா
    http://twitter.com/DuttaLara லாரா தத்தா
    http://twitter.com/arrahman – ஏ ஆர் ரஹ்மான்
    http://twitter.com/aishwarya_rai - ஐஷ்வர்யாராய்
    http://twitter.com/Shahrukh_Khan – ஷாருக்கான்
    http://twitter.com/R_Khanna – ராகுல் கண்ணா
    http://twitter.com/konkonas – கொங்கனா சென்
    http://twitter.com/priyankachopra – ப்ரியங்கா சொப்ரா
    http://twitter.com/MallikaLA – மல்லிகா ஷெராவத்
    http://twitter.com/Neha_Dhupia – நேஹா தூபியா
    http://twitter.com/kunal_deshmukh – குனால் தேஷ்முக்
    http://twitter.com/emraanhashmi – இம்ரான் ஹாஷ்மி
    http://twitter.com/Asin_Thottumkal – அசின்
    http://twitter.com/chinmayi – சின்மயி
    http://twitter.com/shrutihaasan – ஷ்ருதிஹாசன்
    http://twitter.com/shreyaghoshal – ஷ்ரேயா கோஸல்
     
    http://twitter.com/nramind – ஹிந்து ராம்
    http://twitter.com/maalan – மாலன்
    http://twitter.com/writerpara – பா.ராகவன்
    http://twitter.com/nchokkan - சொக்கன்
    http://twitter.com/luckykrishna – யுவகிருஷ்ணா
    http://twitter.com/snapjudge – பாஸ்டன் பாலா
    http://twitter.com/NagoerRumi – நாகூர் ரூமி
    http://twitter.com/orupakkam – ஒருபக்கம்
    http://twitter.com/bseshadri – கிழக்கு பத்ரி
    http://twitter.com/spinesurgeon – புருனோ
    http://twitter.com/ivansivan – இவன்சிவன்
    http://twitter.com/dynobuoy – டைனோ
    http://twitter.com/jyovramsundar - ஜ்யோவ்ராம்
    http://twitter.com/rozavasanth – ரோஸாவசந்த்
    http://twitter.com/athisha – அதிஷா
    http://twitter.com/elavasam -  இலவசகொத்தனார்

    http://twitter.com/bbcbreaking – பிபிசி
    http://twitter.com/the_hindu – தி ஹிந்து
    http://twitter.com/vikatan - விகடன்
    http://twitter.com/youthfulvikatan – யூத் விகடன்
    http://twitter.com/dinamalarweb - தினமலர்
    ட்விட்டர் உபயோகமில்லாதது என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல், முயற்சி செய்து பாருங்கள். இது ஒரு குழுமம், சமூகம், இங்கிருந்து பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.. ஒவ்வொரு ட்விட்டும் ஒரு நுண் வலைப்பதிவு.
    நன்றி.

    Oct 4, 2009

    தேக்கடி சொல்வதென்ன

    தேக்கடியில் படகு விபத்து செய்தி ஓரளவு தெரியும். எத்தனை பேர், அதே தினம் நடந்த பீகார் படகு விபத்து பற்றிய செய்திகளை தெரிந்திருப்போம். பீகாரிலும் 50 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தேக்கடியில் இன்னும் சில சடலங்கள் மீட்கப்படவில்லை என்பது ஊடகங்களுக்கான தீனி இன்னும் முடிந்துவிடவில்லை என்பதை காட்டுகிறது. கைராளிகளும், ஏசியா நெட்களும் அவற்றை முக்கிய செய்தியாக்கிக்கொண்டிருந்த போது, இங்கு அதுவும் ஒரு செய்தியாக காட்டப்பட்டது. கலைஞருக்கு, ஆளுங்கட்சி தலைவரின் திருவாரூர் பயணம் அதி முக்கிய செய்தி.  வலைப்பூவிலும் கூட அவ்வளவாக இந்த செய்தியை பார்க்க முடியவில்லை. ஹிந்து அதிக தகவல்களை தொகுத்தருப்பது, மலையாளிகள் அதிகம் பணியிலிருப்பது காரணமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு ஏன் முக்கிய செய்தியாகப் படவில்லை. இச்சம்பவம் கேரளத்தில் நடந்தது என்பதாலா? இதை செய்தியாக்கினால் டிஆர்பி / ஹிட்ஸ் 'ல் பெரிய மாற்றம் இருக்காது என்பதாலா? தலைவலி நமக்கு நேர்ந்தால் துன்பம், விபத்து, அதே மற்றவருக்காகும் போது, வெறும் செய்தி என்ற அளவில் கூட முக்கியத்துவம் மாறுபடுகிறது. 

    தேக்கடி துன்பத்தை பகிர்வதால், எனக்கு என்ன கிடைக்கும் என்ற வர்த்தகப் பொதுப்புத்தி நம் அனைவரிடமும் மலிந்து கிடப்பது வருத்தத்திற்குரியது. சுயநலம் கருதா மனிதன் இருக்க முடியாது, இருந்துவிட்டு போகட்டும். சுயநலம் இல்லா போதுநலம் இல்லை. குறைந்தபட்சம் ஒரு நிகழ்வு, விபத்து, துர் சம்பவம், தோல்வி போன்றவற்றிலிருந்து நமக்கு பாடம் இருக்கிறது என்ற அளவீட்டிலாவது இவற்றை அணுகலாம். 
    விபத்துக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
    அ. இயற்கை சீற்றத்தால் நிகழ்வது. உதாரணமாக 'சுனாமி' 'வெள்ளம்' போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றை தடுக்க முடியாது. சரியான விழிப்புணர்வு இருந்தால், இழப்புகளை தவிர்க்கலாம்.  நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால், விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்னும் எளிது.
    ஆ. செயற்கை விபத்து, இவை மனிதர்களின் அறியாமையால், கவனக்குறைவால் ஏற்படுவது. விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், இவ்வகை விபத்துக்களையே தவிர்த்து விடலாம். அல்லது, அதிகபட்ச இழப்புகளை தடுக்க முடியும்.
    511095248_3dfa6ca3f8

    தேக்கடி படகு விபத்து பற்றிய குறிப்புகள்;
    வழக்கமாக தேக்கடி படகு சவாரி நேரம் 07:00, 09:30, 11:30, 14:00, 16:00 மணி என்பதாக ஐந்து முறை செலுத்தப்படுகிறது. இரண்டு தளங்களை கொண்டதாக இருக்கும் படகுகளில், தாழ் தளத்திற்கு 50 ரூபாயும், மேல் தளத்திற்கு 90 ரூபாயும் ஒரு சுற்று சவாரிக்கு வசூலிக்கப்படுகிறது. இவ்விபத்தில் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்டது, தாழ்தளத்த thekkady பயணிகளிடையே. (டைட்டானிக் நினைவு வருகிறதா?)  மலிவு விலை உயிர். தாழ்தளம் ஃபைபர் கொண்டு அடைக்கப்பட்டிருந்ததால், அதை உடைத்துக்கொண்டு வெளியே வரமுடியாது போயிருக்கிறது. படத்தில் காண்பது போன்ற உடைந்த மரங்கள் நீருக்கு அடியிலும் அதிகம் இருப்பதாலும், அடிமட்டம் முழுவதுமாக சேற்று மணலால் நிரம்பியுள்ளதாலும், காப்பாற்றுவது கடினமாகிவிட்டிருக்கிறது. காலை 07:00 மணி சவாரியிலும், மாலை 16:00 மணி சவாரியிலும் வன விலங்குகள் காணக்கிடைக்கும், எனினும் மாலையே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். செப்டம்பர் 30 மாலையிலும், அதே போல பயணிகள் கூட்டம் இருந்திருக்கிறது. விபத்திற்குள்ளான படகில், 2 படகோட்டிகளும், கட்டணம் செலுத்திய 74 பயணிகளும், 5 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 7 பேரும் இருந்திருக்கிறார்கள். மொத்தமிருந்த 84 பேரில், உயிர் பிழைத்திருப்பது 15 பேர், இதுவரை 46 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இனியும் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால். உயிரிழப்பு 68 ஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 
    விபத்திற்கு காரணமாக படகோட்டி சொல்வது, 'ஒரு கரையில் வனவிலக்குகள் வந்ததால், பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கமாக சென்றனர். எனவே, படகு நிலையிழந்து ஒரு பக்கம் in.reuters.com சாய்ந்துவிட்டது'. இதை மறுக்கும் உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான பெங்களுருவை சேர்ந்த சிந்தாமணி என்பவர், 'வழக்கமாக மாலை 4 மணிக்கு கிளம்ப வேண்டிய படகு அன்று 4;30 க்கு கிளம்பியது, படகின் இன்ஜின் ஆன் செய்யும் போதே, வழக்கமான இன்ஜின் சத்தம் இல்லாமல் புதிய இரைச்சல் வந்தது. மெக்கானிகல் இன்ஜினியரான என் மனைவியிடமும் சொன்னேன். அதை, அவளாலும் உணர முடிந்தது. எனவே என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். விபத்திற்கு காரணம், படகில் இருந்த இயந்திரக் கோளாரே' என்கிறார். மட்டுமல்லாது, பயணிகள் ஒரு பக்கமாக சென்றனர் என்பதெல்லாம் பொய் என்கிறார். வேறு சிலரும் இதை ஆமோதிப்பதாக படகின் குறைபாடையும், படகோட்டியின் அலட்சியத்தையும் சொல்கின்றனர். ‘படகு மூழ்கத்தொடங்கியதும், படகோட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. படகு பணியாளர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கவில்லை. போதுமான உயிர் காக்கும் சட்டை இருந்தும் அவற்றை அணிந்துகொள்ளவோ, பாதுகாப்பு சோதனை குறித்த விளக்க அறிவுரையோ சொல்லப்படவில்லை’ என்பதும் பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 
    Preventive is better then cure என்று சொல்வார்கள். அந்த வகையில் விபத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது... நாம் செல்ல இருக்கும் சுற்றுலா படகு,
    1. அதன் இழுவை தகுதி (ஹார்ஸ் பவர்) மற்றும் சுமையின் அடிப்படையில் எத்தனை பயணிகளை ஏற்றிச்செல்ல தகுதி உடையது?
    2. அதன் இருக்கை வசதிக்கும் அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்டுள்ளனரா?
    3. ஏற்றப்பட்ட பயணிகளில் யாரேனும் இருக்கை அல்லாத இடத்தில் அமர்ந்தோ நின்றோ பயணக்கின்றனரா?
    4. பாதுகாப்பு மற்றும் முதலுதவி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா?
    5. உயிர் காப்பு அங்கி, கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். சிறுவர்களுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது.
    6. முடிந்த அளவு காலநிலை தெரிந்து கொண்டு பயணங்களை தொடங்குவது நல்லது. இது அனைத்து பயணங்களுக்கும் பொருந்தும் என்றாலும், நீர் பயணத்தின் போது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
    7. புகைபிடித்தல் மற்றும் மதுஅருந்துதல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். மது அருந்தியவர் படகை செலுத்த அனுமதிக்கக்கூடாது.
    இவற்றில் ஏதேனும் மாறுபாடு தென்பட்டால், நிர்வாகத்தில் முறையிடுவதோடு பயணத்தையும் தவிர்த்துவிடுவது நல்லது. (வேறு பாதுகாப்பு நடவடிக்கை தெரிந்தவர்கள் பின்னூட்டதில் சொல்லலாம்)
    நகரமயமாக்கலின் ஒரு விழைவு, இளைய தலைமுறையினருக்கு நீச்சல் தெரியாமை. நீரில் மட்டுமல்ல, நில வாழ்க்கையிலும். பெருகிவரும் நீச்சல் பயிற்சி மையங்கள் ஓரளவு நீரில் நீத்துவதை சொல்லித்தரலாம். நாளை 'சோறு தின்பது எப்படி' என்பதற்கான பயிற்சி மையங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (ஏற்கனவே இருக்கிறதா?) அது கிடக்கட்டும், காசு கொடுத்து நீச்சல் கற்றுக்கொண்டாலும் பாதகமில்லை. நீச்சல் தெரிந்தவர் தம்மை மட்டுமல்ல, கூட பயணிப்பவரையும் கரை சேர்த்துவிடலாம். தேக்கடி விபத்தில், லண்டனை சேர்ந்த 70 வயது சுற்றுலா பயணி ஒருவர், 7 பேரை காப்பாற்றினாராம். 
    மதுரையில் எங்கே நீச்சல் கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எனக்கும், கூட மிதப்பவர்களை கரை சேர்த்துவிட விருப்பம்.
    Peer Thekkady

    Sep 21, 2009

    மோசடி, பெண்ணியம், தமிழ்மணம் - ஜிகர்தண்டா

    சிட்டி லிமோஸின்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனம், 500 கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பதாக செய்தி.

    குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாய் சொல்லும் எவனும் நேர்மையான தொழிலில் (அல்லது எந்த தொழிலிலும்) முதலீடு செய்திருக்க முடியாது. அவனும் ஏதாவது மோசடி செய்துதான் தன் பங்காளர்களுக்கும் அதன் லாபத்தை பங்கிட்டுத்தர முடியும். மோசடிகள் நீண்ட நாட்களுக்கு நடக்காது. இனிதே ஒருநாள் இடியோடு நிறைவுபெறும். பிறகு சொல்ல வேண்டியது தான், ஸ்டார்டிங்கெல்லாம் நல்லாத்தான் இருந்தது, ஆனா.. ஃபினிஷிங் சரியில்லையேப்பா… என்று. எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ரொம்ப நல்ல வடிவேலுவை விட, ரொம்ப ரொம்ப நல்ல மக்கா… திருந்தவே மாட்டீங்களா? வால் ஸ்ட்ரீட்காரனே வேர் கடல தின்னுக்கிட்டிருக்கான். இந்தியா லிமிடட்னு பேர் இருந்ததால, நம்பி இன்வெஸ்ட் பண்ணிணோம்னு ஒரு பெண் சொல்கிறார்… அளவுக்கு அதிகமா அசைப்படுகிற பெண் மட்டுமல்ல… எவனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல. – வேதனை.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    திருநாவுக்கரசர், காங்கிரசுக்கு தாவுகிறாராம்.

    தவறான இடத்தில் இருக்கும் நல்ல மனிதர் என்று சொல்லப்பட்டவர், திருநாவுக்கரசர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், ராமநாதபுரத்தில், இவருக்கே வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டது. இவருக்கு பயந்து, ரித்தீஷ் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து டிவிஎஸ் நகரில் ரூம் போட்டு விட்டதாக சொல்லப்பட்டது. கடைசியில் திருநாவுக்கரசர் சார்ந்திருந்த கட்சியின் தமிழக எதிர்ப்பு அலை காரணமாக தோற்கடிக்கப்பட்டார். கட்சி மாறும் அவரை வரவேற்போம். – வாழ்த்துக்கள்.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    புதசெவி – பெண்ணியம் என்றால் என்ன? அமெரிக்க பெண்ணியம், இந்திய பெண்ணியம், தமிழ் பெண்ணியம், மதுரை பெண்ணியம் என்று வேவ்வேறு பெண்ணியம் உள்ளதாமே, அமெரிக்கா சென்ற மதுரைப் பெண்ணுக்கானது எந்தப்பெண்ணியம்? அவரே திரும்ப மதுரை வந்தால்? அனைத்து பெண்ணியத்திலும் பொது அம்சமாக இருப்பது ஆண்களை எதிர்ப்பதும், காப்பி அடிப்பது மட்டும்தானா?

    சரி.. ஆணியம் என்றால் என்ன? பெண்ணியத்திற்கு எதிராக பேசுவதா? பெண்ணியவாதிகள் லெஸ்பியன் ரைட்ஸ் கேட்பது போல, ஹோமோ செக்ஸூவல் ரைட்ஸ் கேட்பது ஆணியமா? – புதசெவி.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    திரட்டிகளில் நான் இணைக்காத, இணைக்க விரும்பாத, என் இடுகையை தமிழ்மணத்தில் வேறொருவர் இணைக்கிறார். மற்ற திரட்டிகளில் இணைத்தவர் யாரென தெரிந்து கொள்ள முடிகிறதே? தமிழின் முண்ணனி திரட்டியான தமிழ் மணம் அந்த வசதியை வழங்க முடியாதா? அதே போல… ஓட்டுப்போட்டவர் யாரென தெரிந்து கொள்ளவது, இடுகையை இணைத்தவருக்கு மட்டும் ஓட்டுப்போட்டவர் யாரென தெரிந்து கொள்ளும் வசதி கொடுக்கலாமே. எக்ஸ்ப்ளோரரில், ஓட்டு எண்ணிக்கையும் தெரிவதில்லை. அண்மை காலங்களில் தமிழிஷில் இருந்து பதிவுக்கு வருபவர்கள் எண்ணக்கை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. – ஆலோசனை.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    சென்ற வாரம் வாசித்ததில் மோகன் கந்தசாமியின் போலி டோண்டு விவகாரம் என்ற தொடர் இடுகை (இதுவரை 6 பகுதிகள்), ஒரளவு இந்த விவகாரத்தை புதியவர்களுக்கு புரியவைக்கிறது.

    மூர்த்தியின் தந்தை திரு. மருதமுத்து, கீழ்திருப்பாலக்குடி மண்ணார்குடியில் நேற்று காலமானதாக செய்தி – அன்னாருக்கு அஞ்சலி.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    பால்பொருள் அங்காடியில் ஒருவர் அரைக் கிலோ வெண்ணை வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு கடை பணியாளர், ‘இங்கு ஒரு கிலோ பேக்தான் இருக்கிறது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… மேனேஜர் கிட்ட கேட்டுட்டு வரேன்’ என்று உள்ளே சென்று மேனேஜரிடம் கேட்கிறார். ‘சார்.. ஒரு வெண்ணை வந்து அரைக் கிலோ வெண்ணை வேணும்னு கேட்கிறான்’ என்று சொல்லிவிட்டு திரும்பும் போது வெண்ணை கேட்டவர் பின்னால் நின்று பேசுவதை கவனித்துக்கொண்டிருக்கிறார். உடனே கடை பணியாளர், ‘அதே மாதிரி இந்த ஜென்டில் மேனுக்கும் அரை கிலோ வேணுமாம்’ என்று நிலைமையை சமாளித்தாராம்.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    ஜிகர்தண்டா எழுதுவது எனக்கு எப்போதும் எளிதாக இருக்கிறது. இரண்டு, மூன்று வரிகளை வைத்து பில்ட்அப் கொடுக்கலாம். அதிகம் யோசிக்க வேண்டாம், (மற்ற இடுகைகளுக்கு!?), சமகால நிகழ்வுகளில் நமது கருத்தை சொல்லிக்கலாம். ஒரு வணிகத் திரைப்படம் போல, சென்டிமெண்ட், காமெடி, அதிரடி என எல்லாம் அமையப்பெற்று கமர்ஷியலாக இருப்பது. இப்படியே எழுதுவதால் என்றாவது ஒருநாள் சுவாரஸியமாக எழுதிவிட மாட்டோமா என்று கனவோடு எழுதுவது.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    clip_image001

    Sep 18, 2009

    யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?

    நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்.

    மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். – உரை.

    என் நண்பர், எங்கள் ஊர்காரர், என் முந்நாள் தெருவாசி, கோபக்காரர் திருமிகு வால்பையன் என்ற அருண் அவர்கள், இஸ்லாத்தை பற்றி தெளிவுபடுத்த கேட்டிருந்தார். அவருக்கான ப்ரத்தியேக இடுகை. என் நிலையை அவருக்குத் தெளிவுபடுத்துவதால் எங்கள் நட்பு பலப்படும் என்பதாலேயே இந்த இடுகை. இதன் உள்அர்த்தங்கள் எங்கள் இருவருக்கும் தெரியும் என்பதால் கலகக்காரர்களை கண்டு பயமில்லை. என்ன வால் நான் சொல்றது?

    "இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் விமர்சிக்கும் தகுதிக்காகவாவது படித்து தெரிந்துகொள்ளுங்கள், பின்பு விவாதிக்கலாம்" என்று நான் சொன்னதற்கு...

    வால்பையன், "படித்து தெரிந்து கொள்வதற்கு பதில் இப்போது உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்! படி படி என்று சொல்லமால் நீங்கள் படித்ததை தெளிவுற சொல்லி கொடுங்களேன்!" என்று கேட்டிருந்தார்.

    மிக்க மகிழ்ச்சி வால், இந்த தெளிவு ஒரு பொருளின் மீது விமர்சனத்தை வைக்கும் முன்பு இருந்திருக்க வேண்டும். பிழையான கருத்தை, ஆதாரமில்லாத குற்றச்சாட்டை அவையில் வைக்கும் முன்பு, அதை பாவிப்பவர்களின் புத்தகங்களை படித்தோ அல்லது நண்பர்களிடம் கேட்டோ தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் நான் சொன்னது. இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு, அதை கற்றுத்தேர்ந்த நம் பரஸ்பர நண்பர் அ.மு.செய்யது மற்றும் தேடிப்படித்த நான் இருக்கிறேன். இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை எந்நேரமும் எப்படியும் கேட்கலாம். (இரவு 12 மணிக்கு எழுப்பி, உன் பெயர் என்ன என்றும் என்னிடம் கேட்கலாம். மாத்ருபூதம் மாதிரி கோவப்படமாட்டேன். எனக்கு இப்போ நைட் ஷிஃப்ட் :-) ) உங்களுக்கான சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக எனது தேடல் இன்னும் அதிகமாகும் என்பதில் கூடுதல் மகிழ்ச்சியே. அது கிடக்கும்...

    முஸ்லீம்கள் அரபியில் வழிபாடு நடத்துவதேன்? அல்லாவுக்கு அரபி மட்டும் தான் தெரியுமா?

    முதலில் ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு மொழிக்கும் தனிச்சிறப்பென்பது கிடையாது. அதே போல எந்த மொழியும் தாழ்ந்த மொழி கிடையாது. அது காலத்தால் அழிந்த மொழியானாலும், பன்நெடுங்காலம் வாழ்ப்போகும் மொழியானாலும் சரியே. ஒரு மொழியில் புலமை பெற்றவர்கள், அதன் ஈர்ப்பினால், அம்மொழி மீது பற்று கொள்வது இயல்பே. அதேபோலத்தான் ஒருவர் தாய்மொழிப்பற்று கொள்வதும் இயற்கை, கடமை.

    அரபி மொழி பேசுவர், அரபி அல்லாத மொழி பேசுபவரை விட உயர்ந்தவர் அல்லர். அரபி அல்லாத மொழி பேசுபவர், அரபி பேசுபவரைவிட உயர்ந்தவர் அல்லர் என்பது முஹம்மது நபியின் வாக்கு. (நபி = தூதர்)

    வழிபாட்டிற்கான அழைப்பு அரபியில் 'அல்லாஹூ அக்பர்...' என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதை தமிழில்,' இறைவன் மிகப்பெரியவன்... வழிபாட்டிற்கு வாருங்கள்...' என்பதாக மொழி மாற்றம் செய்யலாம். சரி... இதை தமிழிலேயே சொல்லலாமே.. என்று கேட்பீர்கள். இஸ்லாம், ஒரு குறிப்பிட்ட பிராந்திய மக்களின் மார்க்கம் இல்லை. உலகம் முழுமைக்குமான மார்க்கம். அரபுநாட்டில் இருக்கும் தமிழ், மலையாளம், தெலுகு, பெங்காளி மற்றும் இன்னபிறவற்றை பேச்சு மொழியாக் கொண்டவர்களையும் இறை வழிபாட்டிற்கு அழைக்க ஒரு பொதுமொழியான குர்ஆன் எழுதப்பட்டிருக்கும் அரபியிலேயே 'பாங்கு' எனப்படும் வழிபாட்டிற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. இதைக்கேட்பவர்கள் வழிபாட்டுதளம் சென்று தனது கடமையை நிறைவேற்றுகின்றனர். இறை வழிபாடும் அரபியிலேயே நிறைவேற்றப்படுவதற்கு காரணம் இதுவே. தனிப்பட்ட வேண்டுதல்களை அவரவருக்கு விருப்ப மொழியிலேயே கேட்டுக்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே நிலைதான் மலையாளிகள் அல்லது நைஜீரியர்கள் தமிழ்நாடு வந்தாலும். மேலும், உலகெங்கும் வழிபாட்டை ஏற்று நடத்த, “அரபி கற்றவர், வயதில் மூத்தவர்” என்ற தகுதியே போதுமானது. அரபு நாட்டில் நானும் வழிபாட்டை முன்நின்று நடத்தியிருக்கிறேன். எனக்கு பிறகு வந்த அரபிகள் பின்னால் நின்று, என்னை தொடர்ந்தே இறைவனை வழிபட்டனர். (கருப்பர்கள், வெள்ளையர்கள், அரபிகள், அரபி அல்லாதோர் என்ற பாகுபாடும் இஸ்லாத்தில் இல்லை என்பதற்கும் இதை உதாரணமாக சொல்லலாம்) இறை வழிபாட்டிற்கு மொழி குறுக்கீடாகக்கூடாது என்பதே இதன் சாராம்சம்.

    சரி… குர்ஆன் ஏன் அரபியில் இருக்க வேண்டும்? - முஹம்மது நபி அரபு நாட்டில் வாழ்ந்தார். அரபு மொழி பேசினார். அதனாலேயே அவருக்கு குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டது.

    அன்னிய மொழியான அரபியை தமிழர் ஏன் படிக்க வேண்டும்? - மேற்சொன்ன ஒருமைப்பாட்டிற்குத்தான் அரபியை கற்றுக்கொள்கிறோம். மட்டுமல்லாது, அரபியில் உள்ள குர்ஆனை நேரடியாக விளங்கிக் கொள்வதற்காகவும்தான்.

    அரபி தமிழர்கள் மீது திணிக்கப்படுகிறதே? - இல்லை. இது முற்றிலும் தவறான கருத்து. அரபி எந்த தமிழக பள்ளியிலும் கட்டாய பாடமில்லை. ஹிந்தி திணிப்பை எதிர்த்த நண்பர்கள், “ஹிந்தி தேவைப்படுவோர், விருப்பமுள்ளவர்கள் மட்டும் படிக்கட்டும்” என்று சொன்னது போல, விருப்பமுள்ளவர்கள் மட்டுமே, விருப்ப பாடமாக அரபியை படிக்கிறார்கள். அரபி படிக்கத்தெரியாத முஸ்லீம்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆனை படித்து விளங்கிக்கொள்கின்றனர். (குர்ஆன், பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திலும் கூட) விரும்ப பாடமாக அரபி படிப்பவர்களிடம், ‘அது கூடாது, தமிழில் மட்டுமே படி’ என்று சொல்வதும் திணிப்புதான். அந்த திணிப்பு தவறென்றால், படிப்பதை தடுக்கும் இந்த திணிப்பும் தவறுதான்.

    “இந்துக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற பார்பனீய சிந்தனையை ஒட்டி வருகிறது இது!, நான் பதிவில் கேட்டது போல் இஸ்லாமியர்களுக்கும் பார்பனீய சிந்தனை உள்ளதா?” – வால்பையன்.

    வால், அரபியே முஸ்லீம்களின் பொது மொழியாக இருக்கிறது. அவ்வாறு இருப்பது எந்த ஒரு முஸ்லீமிற்கும் தொந்தரவில்லை என்பதால், அதையே அனைத்து முஸ்லீமும் விரும்புகின்றான். இதில் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு இருக்கிறதா? குறிப்பாக, கடவுளே இல்லை என்று சொல்லும் உங்களுக்கு, அவரை நம்புபவர்கள் எந்த மொழியில் வழிபாடு செய்தால் என்ன?

    வால், நீங்களாக கேட்கும் கேள்விகளை விட, முகம் இல்லாதவர்கள் பத்தவைத்துவிட்டு போகும், முற்றிலும் அடிப்படை அறிவற்ற, ஆதாரமற்ற, கேவலமான கருத்துக்களைத்தான் ‘ஆமாம், எனக்கும் அதே கேள்வி உண்டு, நானும் அதுதான் நினைத்தேன்’ என்பதாக அதிகம் சொல்கிறீர்கள்.

    எந்த சந்தேகம் என்றாலும் நேரடியாக கேட்கலாம். குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்லலாம்.

    முன்பு உங்களுக்கு அதிகமான இஸ்லாமிய நண்பர்கள் இருந்ததாகவும் இப்போது குறைந்து விட்டதாகவும் அதனால் பிரியாணி வருவதில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். ஆம்.. எனக்கும் தான். முன்பு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருந்தார்கள். இப்போது அவர்களுடைய தொடர்பில்லை. வேறென்ன… சோம்பேறித்தனம், அலுப்பு. ஆனால் எனக்கு சிறந்த நண்பர்கள் இப்போது கிடைத்துள்ளார்கள், வால்பையன், கோவியார், டக்ளஸ், கார்த்திகை பாண்டியன், லோகு, பாலா, ஜெகநாதன், மணிகண்டன், அப்துல்லா அண்ணன், செய்யது மற்றும் முகம் தெரியா பலர். உங்கள் குறை பிரியாணிதான் என்றால் நமது அடுத்த சந்திப்பில் என் வீட்டு பிரியாணி சாப்பிடலாம். ;)

    • இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் அபாண்டமாக குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிப்பதே நோக்கம். இவற்றை சொல்லாமல் விட்டால், தவறான எண்ணங்கள் வால்பையன் மனதிலும் உங்கள் மனதிலும் தங்கிவிட சாத்தியமுண்டு என்பதால் மட்டுமே. என் நண்பர்கள் மனதில் என்னைப்பற்றிய தவறாக எண்ணம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனக்கு கலங்கமில்லா நட்பு முக்கியம்.
    • மாற்று மத நண்பர்களின் கடவுள் கொள்கையையோ, அவர்களின் நம்பிக்கையையோ நான் எங்கும் கேள்வி எழுப்பியதில்லை. அது அவர்களின் நம்பிக்கை. என் பார்வையில் படுவதை கேள்வி கேட்க, கருத்து சொல்ல முழு உரிமை இருந்தும், நம் பண்பாடு, நாகரிகம் அதை செய்யச்சொல்லவில்லை.
    • அதற்காக இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பார்பட்ட மார்க்கம் என்றும் சொல்லமாட்டேன். உங்கள் சந்தேகங்களை, தனி மெயிலில் அனுப்புங்கள். பதில் மெயிலிலோ அல்லது நீங்கள் விருப்பப்பட்டால், தனி இடுகையிலோ விவாதிப்போம்.

    நன்றி.

    Sep 1, 2009

    ஸ்விஸ், பதிவர் சங்கம், ஆன்மீகம் - ஜிகர்தண்டா

    ஸ்விஸ் வங்கியிலிருக்கும் இந்திய கருப்பு பணத்தை மீட்க வருகிற டிசம்பர் மாதம் முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படும் – நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

    ஜெஃப்ரி ஆர்ச்சருடைய கதையில் வரும் நைஜீரிய நிதியமைச்சர், தன் நாட்டு கருப்பு பண முதலைகளின் ஸ்விஸ் வங்கி கணக்கு விபரத்தை வெளிக்கொண்டுவர நடத்தும் முயற்சி நினைவு வந்தது. அந்த கதை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பின்னப்பட்டதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதுபோலத்தானா இதுவும்?

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 24 அன்று, 20 மருத்துவர்கள், 14 மார்பக புற்று நோயாளிகளுக்கு, 3 மணிநேரத்தில் செய்த அறுவை சிகிச்சை சர்ச்சையில் சிக்கியுள்ளது.

    அன்று அறுவை சிகிச்சையில் பங்கு பெற்ற ஒரு மருத்துவர் தொலைக்காட்சிக்கு பேட்டி தருகிறார் ‘நாங்கள் 10 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்திருந்தோம். அப்போது உடன் இருந்த மருத்துவர் சொன்னார், இன்னும் 2 செய்தால் ஒரு டஜன் ஆகிவிடும் என்று. எனவே மேலும் இரண்டு பேருக்கு செய்ய தீர்மானித்தோம்’.

    நம் மருத்துவர் இடுகை இன்னும் வரவில்லை. என்ன எழுதுவார்... அந்த அறுவை சிகிச்சை, சாதனைக்காக செய்யப்படவில்லை என்று புள்ளிவிபரங்களையும் ஆதாரங்களையும் அடுக்குவார். அதற்கு போலி மருத்துவர், ‘சாதனைக்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றி’ என்பதாக எழுதுவார். போலி மருத்துவர பார்த்திருக்கிறேன், ஆனா... மருத்துவருக்கு போலிய இப்பதான் பார்க்கிறேன்.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    Body of Lies என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன். சர்வதேச தீவிரவாதத்தைFarahani ஒடுக்க பெரியண்ணன் நடத்தும் திட்டங்களும் நாடகங்களும் என படம் விருவிருவென நகர்கிறது. இடையே ஈரானிய செவிலிப் பெண்ணுடனான (ஃபராஹனி) காதலை ஒரு கோடு காட்டியபோது நினைத்தேன், ஆஹா… தீவிரவாத திட்டங்களுக்கிடையே காதலையும் தொட்டுக்கொள்கிறார்களே என்று. அந்த காதலே கதாவின் தலையை காவு கேட்கும் போது க்ளைமாக்ஸ்…டைட்டானிக் டி’ காப்ரியோ வா இது… அசத்தியிருக்கிறார்.

    கிழக்கு பாட்காஸ்டில் ‘குரு’ பாராவுடனான தீவிரவாதம் பற்றிய ஒலிபரப்பு மனதில் ஓடியது. தீவிரவாதம் குறித்த சரியாக கணித்து சொல்கிறார். தீவிரவாதத்தில் டாக்டர் பட்டம் வாங்கிவிடுவார் போல…

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    வாசிப்பனுபவம் உள்ள சமுதாயம் வாழ்வில் முன்னேறும். அதை சமகால தமிழ் சமுதாயத்தில் காண முடிகிறது. வாசகர்களை கவரும் பல சூடான தலைப்புகளில் புத்தகங்களை அறிமுகப்படுத்திவரும் கிழக்கு பதிப்பகம், கிழக்கு புக் கிளப் என்ற சூப்பர் ஆஃபர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அங்கு பட்டியலிடப்பட்டுள்ள கிழக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களில், 20 (எந்தவிலை) புத்தகங்கள் வாங்கினாலும் அவற்றின் விலை ரூபாய் 1000/- மட்டுமே. நான் 1774 ரூபாய்க்கு வாங்கிய 20 புத்தகங்களுக்கு 1000 ரூபாய் மட்டுமே பில் வந்தது. மேலதிக விபரங்களுக்கு நண்பர் பத்ரி அவர்களின் பதிவு.

    பட்டியலில் மேலும் சில பிரபல புத்தகங்களையும் சேர்த்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. சேர்க்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    சிங்கை செந்தில் நாதன் அவர்களுக்கு தமிழ் வலைபதிவர் மற்றும் நண்பர்களின் நிதி உதவி மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அன்றைய தினம் தூங்கி எழுந்ததும் முதலாவதாக அவருடைய சிகிச்சை என்னானது என்ற எண்ணம் தான் மனதில் ஓடியது. முகம் கழுவாமல் கூட கணிணியை திறந்து நிலையறிந்த பின்பே பதட்டத்தை தணித்து சுவாசிக்க முடிந்தது. நாம் கொடுத்த பணத்தை விட நம்முடைய பிராத்தனையே செந்தில் நாதன் அவர்களை காப்பாற்றியதாக நான் நினைக்கிறேன். மத, கடவுள், மொழி, இன, நாத்திகர், ஆத்திகர் என எந்த பேதமும் இல்லாமல் அவருக்காக அனைவரும் செய்த பிராத்தனையை, கடவுள் நிச்சயம் கேட்டிருப்பார் என்றுதான் நினைக்கிறேன். ஆன்மீகத்திற்கு எப்போதும் எதிர்வினையாற்றும் கோவியாருடைய சில நாள் ஸ்டேடஸ் மெஸேஜ் செந்தில் நாதனுக்காக பிராத்தனை செய்ய சொல்லியது. உயிர் என்று வரும் போது நாத்திகமாவது, சாத்திகமாவது.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    சென்ற வாரம் நான் வாசித்ததில் நண்பர் அப்பாவி முரு எழுதியிருக்கும் மசுரு – உசுரு என்ற எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது. எந்த ஒரு செயலுக்கான எதிர்பார்ப்பை பதிவு செய்யும் போதும் நம்முடைய காலடி முதலாவதாக இருக்க வேண்டும். வெறும் வாய்சவடால்கள் வேலைக்குதவாது என்கிறார். வாசித்து பாருங்கள்.

    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    சமீபத்திய தமிழ் வலைப்பதிவர்களின் முயற்சி ஒரு உயிரை காப்பாற்றியது போலவே இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பு, கல்வி, பயிற்சி மற்றும் பல உதவிகளை செய்ய ”சர்வதேச தமிழ் வலைப்பதிவர் கூட்டமைப்பு” என்ற ஒரு அமைப்பை உருவாக்கினால் என்ன? கூட்டமைப்பாக ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டால், நிச்சயம் அதன் பலன் அபாரமானது. நம்மிடையே சச்சரவுகள் எழாமல் அல்லது எழுந்தவற்றை சுமுகமாக தீர்த்துவைக்கவும் தலைமையால் முடியும் என்பதும் என் கருத்து. வலைபதிவர்கள் வெகுசன ஊடங்களால் வெகுவாக கவனிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் நிச்சயமாக அவசியமான ஒன்றாக கூட்டமைப்பும் தலைமையும் இருக்கிறது. செந்தில் நாதன் விசயத்தில் ஆயிரத்தில் ஒருவனாய் முதலடி எடுத்து வைத்த நண்பர் நர்சிம் அவர்களே இதற்கு தகுதியானவர் என நான் முன்மொழிந்து என் முதல் அடியை எடுத்து வைக்கிறேன். உங்கள் கருத்துகளை அறியவும் காத்திருக்கிறேன்.

    நன்றி!

    Aug 28, 2009

    ஹிந்தி கற்பது பாவச்செயலா?

    அண்மையில் நமது மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ள 'தாய் மொழியுடன் சேர்த்து, ஹிந்தியும் கற்க வேண்டும்' என்ற கருத்து இங்கு மீண்டும் சில அசைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

    எந்த தமிழனும் தமிழை தாழ்த்தி பேசுபவனில்லை. தமிழை தாழ்த்துபவன் தமிழனாக இருக்க முடியாது. தாய் மொழியை தாழ்த்தும் எவனும் பேச தகுதியற்றவன். எந்த மொழியும் பேச தகுதியற்றவன். தாய் பேசும் மொழிதான் தாய் மொழி என்பதில்லை. தாய் நாட்டு மொழிதான் தாய் மொழி என்பேன். இந்தியா பொன்ற பல மொழிகளை தன்னகத்தே கொண்டுள்ள நாடுகளில், மாநில எல்லைகள் மொழியால் பகுக்கப்பட்டிருப்பதால், அந்தந்த மாநிலங்களில் பேச்சுவழக்கில் உள்ள மொழியே அவரவர் தாய் மொழி எனலாம். தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களாகிய நமக்கு தாய் மொழி ‘தமிழ்’.

    பணிநிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலா போன்ற இதர காரணங்களுக்காகவோ தன் தாய் மாநிலத்திற்கு வெளியே செல்லும், எல்லையில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டைத்தாண்டி செல்லும் ஒருவர் தாய் மொழி தவிர வேறு மொழி தெரியாத போது தான் அனுபவிக்கும் சிரமங்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 1997ல் மும்பை சென்றபோது நான் அனுபவித்திருக்கிறேன். நம் அண்டை மாநிலமான கேரளா செல்லும் போது மலையாளமும், அதேபோல ஆந்திரா, கர்நாடகா செல்லும் போது தெலுகும், கனடமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சற்று சிரமமே. ஆந்திராவை தாண்டி சென்று விட்டால், ஹிந்தி பொதுமொழியாக இருக்கிறது. ஹிந்தி என்ற ஒரு மொழி பேச தெரிந்தால் பெரும்பாலான வட மாநிலங்களில் சிரமமின்றி தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஹிந்தி என்ற, இந்தியாவில் பெரும்பாலானோர் பேச்சு மொழியாக கொண்டிருக்கும் மொழியை வெளி மாநிலங்களோடு தொடர்பு இருக்கும் அனைவரும் பேச கற்றுகொள்ளுதல், அவரவர் வாழ்வில் நன்மைபயக்கும். நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகப் பொது மொழியான ஆங்கிலத்தையே கற்கலாமே, ஹிந்தி எதற்கு? என்ற வாதமும் கூடவே வருகிறது. ஆங்கிலம் கற்பதற்கு யார் தடை விதித்தார்கள்? தாராளமாக கற்கலாம். சர்வதேச தொடர்பில் தொழில் செய்பவர்களுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது போலவே, நம்தேசம் முழுக்க தொழில் தொடர்பு செய்பவர்களுக்கு சாமானியர்களோடு பேச ஹிந்தி அவசியமாகிறது. ஹிந்தி பேசும் ஒருவனுக்கு தமிழ் நாட்டில் தொழில் தொடர்பு வேண்டும் என்றால், தமிழ் பேச கற்றுக்கொள்கிறான். தமிழ் திரைப்படங்களில் வருவது போல, நம்மிள் தங்கம் தரான், நிம்மிள் பொண்ணு தரான் என்பது போலல்லாமல் அழகாகவே தமிழ் பேசுவதை பார்க்கிறோம் / கேட்கிறோம். ஆனால், வட மாநிலங்களுக்குச் சென்று ஹிந்தி பேச கற்றுக்கொள்ளும் நம்மவர்களின் ஹிந்தி ஆயகா, ஜாயகா என்பதாகவே இருக்கிறது. ஆள் பாதி ஆடை பாதி என்பது போலவே நாம் உதிர்க்கும் சொற்களும் நம்மில் பாதி, நமக்கு மரியாதையை பெற்றுதருகிறது என்பதை மறுக்க முடியாது. இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.

    சர்வதேச அளவில் அதிகமாக பேசப்படும் மொழி வரிசையில ஹிந்தி இரண்டாவது இடத்தில் வருகிறது என்பதையும், அதற்கடுத்த நிலையிலேயே ஆங்கிலம் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். துபாய் அரபிகளில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசுபவர்களாக இருக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர், பெங்காளியர், நேபாளியர் மற்றும் ஆப்கானியருக்கான பொது மொழியாக ஹிந்தி இருக்கிறது. இவர்களுடைய தாய் மொழிக்கும் ஹிந்தி சொற்களுக்கும் சிறிதளவே மாற்றம் இருப்பதால், இவர்களால் எளிதில் பேச கற்றுக்கொள்ள முடிகிறது. தேவையிருக்கும் அனைவரும் கற்றுக்கொண்டு பேசுகின்றனர். ஆனால் தமிழர்களாகிய நம் பாடுதான் திண்டாட்டம், புதிய மொழி ஒன்றினை கற்றுக்கொள்ளும் முன் (சில தவறான வார்த்தை உச்சரிப்பால்) நரக வேதனையுடன் அவமானப்பட வேண்டியிருக்கிறது. ஹிந்தி மட்டும் அல்ல, நம் காதால் கேட்டிராத மலையாளம், தெலுகு மற்றும் கனடம் கற்ற முயலும் போதும் இதே நிலைதான்.

    தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவரும் தமிழ் பேசுவது மகிழ்ச்சியளிப்பது போலவே, சிங்கப்பூர், மலேசியா பொன்ற நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாக இருப்பதால், அங்குவரும் மற்ற இந்திய மாநிலத்தவர் / நாட்டவர் தமிழ் கற்றுக்கொண்டு பேச முயற்சிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

    தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு ஒரு கழுகு பார்வை.
    1937, தமிழ்நாட்டில் (அப்போது சில ஆந்திர பகுதிகளையும் உள்ளடக்கியது)  ஆங்கிலேயர் ஆட்சியில் ராஜாஜி தலைமையிலான அரசு 'பள்ளிகளில் கட்டாய ஹிந்தி' என்ற சட்டம் கொண்டுவருகிறது. தீவிர தமிழ் ஆர்வலர்கள் சிலர் மற்றும் ராஜாஜி எதிர்பாளர்கள் சிலரும் சேர்ந்து அத்திட்டத்தை எதிர்கின்றனர்.  கைது நடவடிக்கையின் போது சிலர் உயிர் நீத்தனர் என்றும் வரலாறு சொல்கிறது. 1940, அதே ராஜாஜியால் இச்சட்டம் திரும்ப பெறப்படுகின்றது. 1965, இந்திய அலுவல் மொழியான ஹிந்தி 'ஒரே மூச்சாக, அரபிக்கடலில் தூக்கி எறியப்பட வேண்டும்' என்ற கொள்கையோடு முதலாம் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு திருச்சியில் நடத்தப்படுகிறது. முன்னதாக குடியரசு பத்திரிக்கை, 'ஹிந்தி, ஆரிய மொழி என்பதாலும், சமஸ்கிருதம் தெரிந்த ஒரு சாதியினரின் மத கோட்பாடுகளை முன்னிருத்தும் முயற்சியே ஹிந்தி திணிப்பு' என்றும், மேலும் 'ஹிந்தியை ஏற்றுக்கொண்டால், ஹிந்தி பேசும் வட நாட்டவரைவிட நாம் தாழ்ந்த நிலையிலேயே இருக்க வேண்டிவரும்' என்பதாகவும் சொல்லிற்று. இயல்பான இனப்பற்று உணர்ச்சி மிகுதியில் ஹிந்தி எதிர்ப்பு பலமாகவே நடந்திருக்கிறது. ஹிந்தி ஆசிரியர்கள் கடைவீதியில் அடித்துவிரட்டப்பட்டிருக்கின்றனர். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. இதே நிலையில், சுதந்திர போராட்ட வீரர்கள் ஆங்கில எதிர்ப்பில் இருந்திருக்கின்றனர். அப்போதும், இவற்றை கண்டுகொள்ளாமல், ஆங்கிலம் கற்றவர்களின் சந்ததியின் வாழ்க்கைதரம் இன்று நல்ல நிலையில் உள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஹிந்தி எதிர்ப்பு முன்னுக்கு வர ஆங்கில எதிர்ப்பு பின்னால் சென்றது. அதைத்தொடர்ந்து திராவிட இயக்கங்கள், ஹிந்தி எதிர்ப்பு அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றன. மத்திய ஆட்சியில் பங்குபெறும் திராவிட அரசுகளின் பிரதிநிதிகள் ஹிந்தி பேச்சுத் திறமைமிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இந்தியாவை ஆட்சி செய்ய ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பது, இயல்பான எதிர்பார்ப்பு.

    ஹிந்தி எதிர்ப்பு என்பது அரசியலாகவும், சமஸ்கிருதம் தெரிந்த ஒரு சமுதாயத்தின் மீது அல்லது சமஸ்கிருதத்தின் மீது இருந்த / இருக்கும் வெறுப்பாகவுமே படுகிறது. ஒரு பொருளால் பலன்பெறும் அல்லது அந்தப்பொருள் இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கே புரியம் அப்பொருளின் அருமை. அப்பொருளுக்கு தொடர்பில்லாதவர்கள் அது கூடாதென்ற சாபம் இடக்கூடாது. அப்பொருளை பாவிக்காது, அதன் தீங்கு பற்றிய பொத்தாம்பொதுவான அவதானிப்பு கூடாது. ஒரு கற்பனை; எனக்கு ஹிந்தி தெரியாது, வட மாநிலத்திற்கு சென்றிருக்கிறேன். தமிழர்களுக்கெதிரான திடீர் கலவரம், ஹிந்தியில் பேசினால் உயிர் பிழைப்பேன். சொல்லுங்கள்… நான் ஹிந்தி கற்றிருக்க வேண்டுமா? கூடாதா?

    தாய் மொழி தவிர பிற மொழிகள் கற்றுக்கொள்வது தவறா? பாவச் செயலா? அட, என்னங்க… உலகமயமாக்கலின் பலன்களை அனுபவித்து வரும் இந்த காலத்திலும், கற்றலுக்கு தடைவிதிப்பது கட்டுப்பெட்டித்தனம் இல்லயா? கல்விக்கு ஏது எல்லை, கற்கும் சூழலும் வாய்ப்பும் இருப்பவன் கற்கட்டும், அதை தடுக்கக்கூடாது. தனக்கு கணினிப் பாடம் வரவில்லை என்றால், கணினியை குறை சொல்வது மனித இயல்பு. ஆடத் தெரியாதவளுக்கு…. கல்வியின் மூலம் யாருக்கும் எந்த கேடும் வந்துவிடாது. கற்றது கை மண் அளவு. சீனா சென்றேனும் சீர்மிகு கல்வியை கற்றுக்கொள், என்பதான சொல்லாடல்கள் கற்றலை ஊக்குவிக்கின்றன.

    பிற மொழி கற்பதனால் தமிழின் தொன்மையை, பெருமையை மறந்துவிடக் கூடாது என்பதை மட்டும் நினைவில் கொண்டு, கற்றலுக்கு அணை போடாமல், முறையாக பல மொழிகள் கற்று வாழ்வில் முன்னேற அனைவரையும் வாழ்த்துகிறேன்.

    நன்றி!

    • அதிகம் திருத்தம் செய்யாமல், அவசரமாக எழுத முயற்சித்தது.
    • கொஞ்ச நாளைக்கு விடுப்பு தேவைப்படுகிறது. யாருக்கு ‘விடுப்பு விண்ணப்பக்கடிதம்’ அனுப்பணும்?

    Aug 25, 2009

    வீம்புநிலை வியாபாரிகள்

    சரியாகச் சொல்லவதென்றால், இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. முன்னர் நான் எழுதியிருந்த விளிம்புநிலை வியாபாரிகள் இடுகையில் நணபர்களின் பின்னூட்டங்கள் பார்க்கும் வரை. தீபாவளி திடீர் கடைகளையும், பாலியல் தொழிலாளர்களையும் வீம்பு நிலை வியாபாரிகள் என்று நான் குறிப்பிட்டிருந்ததை சில நண்பர்கள் மறுத்திருந்தனர். என் கருத்தையே அனைவரும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை, அதே போல நானும். நமது பார்வையினூடாய் நிலைபாடுகள் தீர்மானிக்கப்படுவதால், என் நிலைபாட்டிற்கான பார்வையை உங்களுக்கும் பகிர வேண்டியது என் உரிமையும் கடமையும் ஆகிறது.

    தீபாவளி திடீர் கடைகள்; இவைகள் திடீரென்று முளைக்க காரணம், குறுகிய காலத்தில் அதிக லாபம் அள்ளும் தொழில், முதலீடு முடக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை மற்றும் தரமற்ற பொருளை விற்பனை செய்வதால், நுகர்வோர் திரும்ப வருவார் என்கிற அச்சம் இல்லை. வியாபார சரக்கு, தீபாவளிக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு, மொத்த வியாபாரியிடம் கொள்முதல் செய்யப்படும், விற்காத சரக்கு திரும்ப தரப்படும் என்ற ஒப்பந்தத்தோடு. தீபாவளிக்கு அடுத்த நாள், கையிருப்பு சரக்குகள் திரும்ப தரப்பட்டு கணக்கு முடிக்கப்படும். இத்தகைய சரக்கின் தரம், சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்கு தெருவோரக்கடை அல்ல தொழில். வேறு தொழிலில் இருப்போரால் திடீர் கடைகள் நடாத்தப்படுகின்றன. நஷ்டத்திற்கான வாய்ப்பு இல்லாததால் லாபம் மட்டுமே இறுதி வடிவம் பெறும். அம்பானிகளுக்கும் அடிசறுக்கும் காலம் இது. லாபம் மட்டுமே வாரிச்சுருட்டும் ஒரு வியாபாரியை விளிம்பு நிலை வியாபாரி என்று சொல்வது பொருந்தாது என்பது என் புரிதல். ஏதோ ஒரு காரணத்தால், ஒரு வேளை இவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலும், ஒதுக்கித்தள்ளிவிட்டு ஒரிஜினல் தொழிலை பார்க்க போய் விடுவார்கள்.

    சரி.. அப்போ பாலியல் தொழிலாளர்கள்? நான் தீபாவளி திடீர் கடைகளை மட்டும் அவ்வாறுச் சொல்லியிருந்தால் நண்பர்கள் ஒரு வேளை ஏற்றுக்கொண்டிருக்ககூடும். பாலியல் தொழிலாளர்கள், வியாபாரிகள் அல்லர். அவர்கள் ஒரு வியாபாரப் பொருள், உபயோகித்தபின் திரும்ப கொடுத்துவிடும் காஃபி கப் போன்ற சரக்கு அவர்கள். (சில இடங்களில் டிஸ்பாஸபில் கப் ஆகவும் பாவிக்கப்படுவதுண்டு) இந்தத் தொழிலில் வியாபாரி, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவருடைய (சரக்கை சந்தைக்கு கொண்டு செல்லும்) சமூகச் சுழல்களாகிய, குடும்பம், வறுமை, அறியாமை, ஆசை, உணர்ச்சி, போதை, மன அழுத்தம் மற்றும் சந்தேகமில்லாமல் அவர்கள் மீது திணிக்கப்படும் இன்ன பிறவும் அடங்கும். இந்தச் சூழல்களை வீம்புநிலை வியாபாரிகள் எனச் சொல்கிறேனா என்றால்… இல்லை. நகைமுரண் :) குழப்பாமல் விஷயத்திற்கு வருகிறேன்.

    பாலியல் தொழிலை யாரும் விரும்பி செய்வதில்லை. அதீத உணர்ச்சி, ஒரு வகையான ஆசை, போதா இன்பம் போன்ற காரணங்களினால் விரும்பியே சிலர் வந்திருந்தாலும், இவை எல்லாம் போதும் என்றானாலும், பரவலாக அறியப்பட்ட பின் சமூகம் இவர்களது மீள்வரவை ஏற்றுக்கொள்வதில்லை. வறுமை காரணமாக இத்தொழிலில் நுழைபவர்களுக்கும் இதே நிலை தான். வறுமானத்திற்கான மாற்று ஏற்பாட்டில் இனி வறுமை இல்லை என்றான பிறகும், குடும்பமே இவர்களை புறக்கணிக்கும் சூழலில் உணர்ச்சியற்ற உயிர் பொருளாக உடலை சில நிமிடங்கள் கிடத்தி வைக்க வேண்டிய நிலை. விரும்பியும் விரும்பாமலும் தொடர வேண்டிய நிர்பந்தம். ஆண் பாலியல் தொழிலாளியின் நிலை இன்னும் மோசம். விருப்பமில்லாமலேயே அவன் இயங்க வேண்டியிருக்கிறது. சில சூழ்நிலையில் அதைவிட கொடுமையாக அவன் மீது இயக்கம் செலுத்தப்படுகிறது. இவர்கள் கூட எந்த நேரத்திலும் தொழிலை மாற்றிக்கொண்டு மீண்டு விடுவார்கள். பெண் தொழிலாளியின் நிலையே, வேதனைக்குள்ளானது. anti-prostitution_Ii3GZ_22980

    இதற்கான தற்போதைய தீர்வு பாலியல் தொழிலாளர்களுடைய மீள்வாழ்வு. இடமாற்றத்தின் மூலம் வாழ்வாதார உரிமைகள் மீட்கப்பட்டு மீள்வாழ்வு சாத்தியம் என்றாலும், உடற்சந்தையில் கிராக்கியும், முதலீடு இல்லாமல் குறைந்த நேரத்தில் அதிக பணம் பண்ணக்கூடிய ஒரே தொழிலாக, அனுபவமிக்க தொழிலாக பாலியல் தொழில் இருப்பதால் சட்டென்று விட்டுவிட முடியாத பாலியல் தொழிலாளர்களுடைய நிலை, வீம்பு நிலை. இந்நிலையில் அவர்களுக்கு இறுதியில் மீதமிருப்பது பணம், தொற்றிய நோய் மற்றும் வேதனைகளே. அவர்களிடையே மீள்வாழ்விற்கான அவசியத்தை உணர்த்தி, அதை நடைமுறைப்படுத்தல் அவசரமான அவசியம்.

    பாலியல் தொழிலாளர்கள் மீதான பரிதாபப் பார்வை, போலி முற்போக்குவாதத்தின் முகமூடியாகப்படுகிறது. பாலியல் தொழிலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் எனக்கு சரியாகப்படவில்லை. கண்டும் காணாமல் நடக்கும் தொழில் எங்கும் காணக்கிடைக்கும். வறுமையை காரணம் காட்டி, பல புதியவர்கள் உள்ளே நுழையும் / நுழைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். நடைமுறைப்படுத்தப்பட்ட சந்தையில் பொருளுக்கான கிராக்கி கூடிவிடுவதால், கடத்திவரப்படும் பெண்வணிகம் அதிகரிக்கும். அதேபோல பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், பெண்களுக்கெதிரான வன்கொடுமை குறையும் என்பதையும் ஏற்களாகாது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமையானது இனக்கவர்ச்சியில் நடத்தப்படுவது. அவை கடுமையான சட்டங்கள் அல்லது முறையான பாலியல் கல்வி மூலம் மட்டுமே குறைக்கப்படலாம் என்பதும் என் புரிதல். பாலியல் முற்றிலுமாக தடுக்கப்பட்ட நாடுகளில் வன்கொடுமை விகிதம் குறைவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பாலுறுப்புகளை அவற்றின் நேரடி பெயர் கொண்டு எழுதுவது பாவம் என்ற சமூக கட்டமைப்பை எதிர்த்தாலும், இன்னும் நாம் அவற்றை எழுத்தாக்கத் தயங்குவதற்கு காரணம், நம் கலாச்சாரம், சுழல் என்றால் அது மிகையாகாது. கலாச்சாரம் குப்பைத்தொட்டி என்பதால் மட்டுமே அது இல்லை என்றாகிவிடாது. என்னதான் நவீனத்துவம் பேசினாலும், வெகுசன சமூகத்தினூடே ஒன்றிப்போயிருக்கும் கலாச்சாரம் என்ற குப்பைத்தொட்டியும் முன்நிறுத்தப்பட்டு முரணான விவாதங்கள் செய்யப்படுவதால் மட்டுமே, ஏதேனும் மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. அல்லாது காலச்சாரத்தையே முற்றிலுமாக மாற்ற முயல்வது, எதிர்மறை விளைவுகளையே தரும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    நன்றி!

    Aug 23, 2009

    நெருக்கடி நிலையில் நிறுவனங்கள்

    உலக பொருளாதார மந்த நிலையின்* விழைவாக, நாளுக்கு நாள் பணி இழப்பு அதிகரித்துவருகிறது. பங்குசந்தையின் சமீபத்திய முன்னேற்றம், நெருக்கடி நிலை முடிவுக்கு வருவதாக நம்மை நம்ப வைக்க முயற்சித்தாலும், கார்பரேட் நிறுவனங்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதாயில்லை. அவை இன்னும் ஆட்குறைப்பை குறைத்தபாடில்லை. இப்பொருளாதார நெருக்கடியில் பாதிப்படையாத நிறுவனங்களும் அவற்றில் குளிர்காய நினைக்கிறது. இதே பணியை உன்னை விட குறைந்த ஊதியத்தில் செய்ய கதவிற்கு வெளியே பலர் காத்திருக்கிறார்கள் என்பதாக, விசுவாசமாய் பல ஆண்டுகள் பணியாற்றும் தன் ஊழியர்களையும் மிரட்டி ஊக்கத் தொகை, போக்குவரத்து படிப்பணம் போன்ற சம்பளத்திற்கு வெளியே கொடுக்கப்படும் இதர தொகைகளை நிறுத்திவிடுகிறது. ஊதிய உயர்விற்கான பேச்சே இல்லை. இவை பணியாளர்களுக்கான பிரச்சனை என்றால், நிறுவனங்களும் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

    நிறுவனங்கள் சந்தித்துவரும் நீண்டகாலப் பிரச்சனை, பணியாட்கள் தாமாக பணியிலிருந்து விலகிக்கொள்வது. இதற்கான காரணமான கருதப்படுவது, அவர்களுக்கு புதிய இடத்தில் கிடைக்கும் அதிக ஊதியமும், நல்ல நிலையும் என்பவை நம்பத்தகுந்த காரணங்கள் என்றாலும், இன்னுமொரு மறைக்கப்படும் காரணமும் உண்டு. அதை அலசும் முன், சென்ற ஆண்டின் ஒரு சாதாரண நிகழ்வை பார்த்துவிடுவோம்.

    ஒரு நண்பர், மென்பொருள் நிறுவனத்தில் கைநிறைய சம்பளம், வாகனம் மற்றும் இதர வசதிகளோடு இருந்துவந்தார். ஒரு நாள் தான் வேலையை விட்டு நிற்கப்போவதாகச் சொன்னார். எனக்கு அதிர்ச்சி, ஏனென்று விசாரிக்கும் போது, இதைவிட பைநிறைய சம்பளத்தில் உலகத்தர நிறுவனத்தில் சேரப்போவதாகவும், அங்கு ஊழியரை நண்பராக பாவிக்கும் மனிதவளத்துறை, அட்டகாச அலுவலகம், உயர்ந்த தொழில்நுட்பம், உயர்தர உணவுவிடுதி ஆகியவை இருப்பதாகவும் சொன்னார். வேலைக்கு சேர்ந்த புதிதில், மூன்று முறை வெளிநாட்டிற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். 'என் வாழ்நாளில் இந்தளவுக்கு குறுகிய காலத்தில் அதிகமாக கற்றுக்கொண்டதில்லை', என்றும் ஒரு முறை என்னிடம் சொன்னார். நிச்சயமாக அந்த வேலைக்குத் தகுதியானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எட்டுமாதத்திற்குப்பிறகு அங்கு ரிசைன் செய்துவிட்டு, வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டதாகவும், அதைவிட குறைந்த சம்பளம் என்றாலும், பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொல்கிறார்.

    இந்த நண்பர், தனக்கு மிகப்பொருத்தமாக இருந்த வேலையை விட்டுவிட்டு வரக்காரணம் என்ன? இதே நிலையில் பலரையும் பார்க்க முடிகிறதே ஏன்?

    இதற்கான காரணத்தை அறிய Gallup Organisation மேற்கொண்ட ஒரு ஆய்வில், லட்சக்கணக்கான பணியாளர்களும், ஆயிரக்கணக்கில் மேலாளர்களும் உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை First Break All The Rules என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்புத்தக ஆசிரியர்களான Marcus Buckingham மற்றும Curt Coffman என்ற மேலாண்மை அறிஞர்கள் சொல்வது,

    'பெரும்பாலான பணியாட்கள், தன் மேலாளரை விட்டு விலகுகிறார்களே தவிர, நிறுவனத்தை அல்ல' என்பதாக.

    உடனடி இடமாற்றம் விரும்பும் ஆட்கள், தன் மேலாளரிடமிருந்து உடனடி விடுதலையை எண்ணியே இடமாற்றத்தை தேர்வு செய்கிறார்கள். எனவே, ஒரு நிறுவனத்திலிருந்தது தொடர்ந்து பணியாட்கள் விலகிப் போகிறார்கள் எனில், அந்நிறுவனம் அத்துறையில் Direct Line Managers என்று சொல்லப்படுகிற நேரடி மேலாளரை கவனத்தில் கொள்ள வேண்டும். அவரது கொடுமையை (கொடுமை என்ற வார்த்தை சற்று அதிகமென்றாலும்) ஒன்று, இரண்டு முறை பொருத்துப்போகும் பணியாளர்கள் மூன்றாவது முறை விலகிப்போய் விடுகிறார்கள் என்பது, மனிதவளத்துறையினர் அவ்வாய்வின் போது கூறியவை. நேரடி மேலாளர்களே, பணியாட்களுக்கான பணியை நிர்ணயிப்பதும், அதை அவர்கள் மீது செலுத்துவதுமாக இருப்பதால், இவர்களே பணியாட்கள் பார்வையில் வில்லன்களாக பாவனை செய்யப்படுகிறார்கள். அவர்களால் பணியாட்கள் மீது செலுத்தப்படும், அதிகப்படியான கட்டுப்பாடு, அதிகப்படியான சந்தேகம், அதிகப்படியான இக்கட்டு நிலை மற்றும் அவர்களை அசையா சொத்துபோல பாவிக்கும் நிலையே பணியாட்களை விலகிவிடச் செய்கிறது.

    இத்தகைய அதிகப்படிகளை உணரும் பணியாட்கள், தனக்கு வழங்கப்பட்ட பணியை தவிர வேறெதையும் அதிகப்படியாய் செய்யாதிருப்பதும் நிறுவனத்திற்கு இழப்பே. பணியாட்கள் சுய ஆர்வத்துடன் பணி செய்வதே, நிறுவனத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் முக்கிய சக்தி என்பதை நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மேலாளர்களின் இத்தகைய (Harassment) நடைமுறையை, நிறுவன தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை போலவே, மேலாளர்களும் தங்களிடம் பணியாற்றும் கடை நிலை ஊழியர்களுக்கும் இருக்கும் சிரமங்களையும் ஆலோசித்து, அதற்குத் தகுந்த செயல் திட்டம் வகுக்கப்படல் அவசியம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    திறமையானவர்கள் தானாக மாறுவார்கள், செத்த மரங்களை காட்டாறு தான் அடித்துச் செல்லவேண்டும்.

    Aug 20, 2009

    கழிவறை நீதி - வள்ளுவன்

    உங்கள் வீட்டு கழிவறை குழாய் ஓட்டையால் பொதுப்பாதை வரை நாற்றம் வருகிறது என்றால், அந்த பொதுப்பாதை பாவிக்கும் ஒருவனாகிய நான், இரண்டு செயல்கள் செய்யலாம். ஒன்று, உங்கள் வீட்டு கழிவறை ஓட்டையை அடைக்கச்சொல்லி உங்களிடம் கேட்பது, செய்து முடிக்கப்படும் வரை சட்டத்திற்குட்பட்ட எந்த செயலும் செய்ய எனக்கு அனுமதி உண்டு. அது என் உரிமை. மாறாக அறிவற்ற முறையில் பேசக்கூடாது என்பதை வள்ளுவர்,

    பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். - குறள்

    எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

    என்கிறார்.

    இரண்டாவதான மூக்கை பொத்திக்கொண்டு அவ்வழியே நடந்து செல்வது, என் பொறுமையை காட்டுகிறது. பொதுப்பாதை வரை நாற்றம் வருவதை அறிந்து நீங்களே மாறிக்கொள்வது வரை நான் பொறுமையாக இருப்பதற்கு எந்த சட்டமும் தனிநபரும் குறுக்கிட முடியாது. பரஸ்பரம் இரு நபர்களுக்கிடையேயான புரிந்துணர்வு.

    இதை,

    நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். - குறள்

    பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

    என்று பொறுமையை இவ்வாறு புகழ்கிறார்.

    என் வீட்டில் கழிவறை இல்லை என்பதற்காக, உங்களிடம் வந்து உன் வீட்டில் கழிவறை இருப்பதால் தான் பொதுப்பாதையில் நாற்றம் வருகிறது, உடனே அதை இடித்துவிடு என்று நான் சொல்வது, நியாயமாகுமா? கழிவறையால் தான் நாற்றம் வருகிறது என்பது ஏற்புடையதாக இருந்தாலும், குழாய் ஓட்டையை அடைக்கச் சொல்வது தானே நியாயம்.

    கழிவறையை இடிக்கச்சொல்லி குற்றம் புரியாமல் இருக்கவேண்டும் என்பதை,

    குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை. - குறள்

    குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

    என்பதாகச் சொல்கிறார்.

    கழிவறை என்பது கழிவிறக்கத்திற்கான பயன்பாட்டிற்கு மட்டுமே என்றாலும், கழிவறையை பயன்படுத்தினால் தான் சுகாதாரம், தனிமை போன்ற முழுப்பயனும் அறியக்கிடைக்கும். மாறாக கழிவறையை பயன்படுத்தாமலேயே காட்டிலோ அல்லது முட்டுச்சந்திலோ கழிவிறக்கலாம் என்று தன் குறையை நியாப்படுத்துவது அறுவுடைமையாகாது.

    தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. - குறள்

    முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.

    என்று கேட்கிறார்.

    கழிவறை ஓட்டை சிறியதாய் இருந்தாலும் அதை உடனே அடைப்பதன் மூலம் மற்றவருக்கு தொந்தரவு செய்யாதிருப்பது நலம். அதையும் அய்யன்,

    தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். - குறள்

    பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

    என்கிறார்.

    கழிவறைக்காக சச்சரவு செய்வதைக் காட்டிலும், நட்புதான் பெரிது என்போரை அறிவுடையோர் என்கிறார் வள்ளுவர்.

    உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. - குறள்

    உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

    கழிவறையை இடிக்கச் சொல்வோரையும் மன்னித்து நட்பு பாராட்டல், வாழ்நாள் முழுக்க புகழ்மிக்கதாய் அமையும் என்கிறார்.

    ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

    தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

    இறுதியாக,

    அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.

    ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

    நன்றி!!!

    Aug 12, 2009

    பன்றிக்காய்சல் பாதுகாப்பு நடவடிக்கை

    மின் அஞ்சலில் வந்த தகவல்;

    நீலகிரி தைலத்தை (Eucalyptus oil) சில துளிகள் கைக்குட்டையில் விட்டு, மூக்கை மூடிக்கொள்வதுவும் பன்றிக்காய்சலுக்கு எதிரான ஒரு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும் என்று நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆப் வைராலஜி தெரிவிக்கிறது.

    சென்னையில் பன்றிக்காய்சல் குறித்தான தொடர்பிற்கு; 044 2432 1569 என்ற எண்ணை அழைக்கலாம்.

    Cipla has launched a new drug against Swine Flu (Virenza), as an alternative option to Osetalmavir drug. Please find attached herewith the availability centers.

    Swine

    பன்றிக்காய்சல் பற்றிய விபரங்களுக்கு வாசிக்கவும்

    பன்றி காய்ச்சல் சில கேள்விகள் பதிலுடன். - இட்லிவடை

    பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !! - மருத்துவர் தேவா

    பன்றிக் காய்ச்சல்-2 - மருத்துவர் தேவா

    இன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்) - பத்ரி (மருத்துவர் புருனோ - ஒலிவடிவம்)

    பன்றி காய்சல் அபாயம். - எனது இடுகை

    Jul 23, 2009

    சிக்கி

    நான் எட்டு முடித்து ஒன்பதின் முதல்நாள் வகுப்பில் அமர்ந்திருந்தேன். என் பழைய நண்பர்களில் சிலர் காணாமல் போயிருந்தனர். விசாரித்ததில், அடுத்த வருடம் பொது தேர்வு என்பதால் வேறு நல்ல பள்ளியில் சேர்ந்துவிட்டதாக அறியப்பெற்றேன். முதல் நாள் வகுப்பாசிரியர் வர தாமதம் ஆகும் என்பதால் அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். அப்போது தான் அவர் வாசலில் நின்று எட்டிப்பார்த்தார். அரைக்கை காட்டன் சட்டை. மடித்து வாரப்பட்ட அடர்த்தியான தலைமுடி. மீசை மட்டுமல்லாது ஆளும் வளர்ந்திருந்ததால், பத்தாம் வகுப்பறையை தேடி வந்திருப்பார் போல என நினைத்து நான் தான் சொன்னேன், “என்ன பாஸ், பத்தாவதா? ரெண்டு க்ளாஸ் தாண்டி இருக்கு. போங்க”. அதற்கு அவர் சொன்னார், “இல்ல நைன்த் பி”. “அட நம்ம க்ளாஸ் தானா? உள்ள வாங்க, கடைசி பெஞ்சுல வந்து உட்காருங்க பாஸூ”. கவனிக்கவும் நானும் கடைசிபெஞ்ச் தான். சரியாக படிக்காதவர்களுக்குத் தான் கடைசி பெஞ்சு என்று நீங்கள் நினைத்தால், தவறு. நாங்கள் சுமாராக படித்தும், சற்றே உயரம் அதிகம் என்பதால் தான் கடைசியில் அமர வைக்கப்பட்டோம்.

    கடைசி பெஞ்சில் என்னருகிலேயே வந்து அமர்ந்தார். வகுப்பில் அனைவரும் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, நான் தான் ஆரம்பித்தேன் “உங்க பேரு என்ன பாஸூ?” . “சிக்கந்தர் அலி” ‘”பாக்க பெரிய ஆளாட்டம் இருக்கீங்க, பெயில் ஆகிட்டீங்களா, சிக்கந்தர் அலி?”. “இல்ல. எங்க வாவாக்கு(அப்பாவுக்கு) மிலிட்டரில வேல, நார்த் சவுத்ன்னு மாறி மாறி அலஞ்சதுனால இடைல ரெண்டு வருஷம் மிஸ் ஆயிடுச்சு” “சிக்கந்தர் அலின்னு முழுப்பேரச் சொல்லி கூப்பிட வசதியா இல்ல, ஷாட்டா அலின்னு கூப்பிடவா, பாஸூ? அலி ன்னா அரபியில வீரன் ன்னு அர்த்தம், ஆனா இங்க அப்படி கூப்பிட்டா ஒரு மாதிரியா இருக்கும், சிக்கந்தர் – சிக் - சிக்கி ன்னு கூப்பிடலாமா?” இப்படியாக சிக்கி என்று நாமகரணம் சூட்டப்பட்டது. சிக்கி என்னைவிட இரண்டு வயது மூத்தவர். எனக்கு எப்படி அழைப்பது என்று தடுமாற்றம் இருந்ததை அவரேதான் கழைந்தார். “நீங்கன்னு ஏன் சொல்லிக்கிட்டு, நீ ன்னே சொல்லு. அப்பதான் நட்பு வலுப்படும்”. சிக்கந்தர் அலி என்ற அவர், சிக்கி என்ற அவனானான்.

    எங்கள் பள்ளியிலேயே எட்டு ‘சி’யில் படித்த ராதா கிருஷ்ணன் என்ற ராதாவும், ஒன்பது ‘பி’க்கு மாற்றப்பட்டான். அவனும் சற்று உயரம் என்பதால் கடைசி பெஞ்சில் வந்தமர்ந்தான். மூவரும் சம்பிரதாயமாக பார்த்து சிரித்துக் கொண்டோம். சிக்கி, ராதா, நான் என்ற மூவர் கூட்டணி உருவானது இப்படித்தான்.

    அந்த வருடம் நடந்த பள்ளி தேர்தலில், ஒவ்வொரு வகுப்பாக சென்று நாங்கள் மூவரும் சிக்கிக்காக வாக்கு சேகரிக்க, பள்ளி மாணவத் தலைவனாக சிக்கி தேர்ந்தெடுக்கப்பட்டான். அதன் பிறகு இரண்டு வருடம் பள்ளி எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது நல்ல அனுபவமாக இருந்தது. தைரியமாக பல சேட்டைகள் செய்தோம்.

    சிக்கியிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. சக மாணவிகளை சைட் அடிக்க மாட்டான். அவனது தோற்றத்திற்கு மாணவிகள் தரும் மரியாதைக்காக இருக்கலாம் என்று நானாக எண்ணிக்கொண்டேன். அனைத்து மாணவிகளிடமும் அவன் சகஜமாக பேசுவான், அவைகளும் அவ்வாறே. ராதாவை கண்டாலே அனைவருக்கும் பயம் இருந்திருக்கும். யாரும் அவனிடம் பேசுவதில்லை. நான் மாணவிகளிடம் என்ன என்றால் என்ன அவ்வளவுதான் பேசுவேன்.

    சிக்கிக்கு கொஞ்சம் டெக்னிகல் அறிவு இருந்தது. வீட்டில் பழைய ரேடியோ, டேப் ரிக்கார்டர் பொன்றவை அடுக்கிவைக்கப்பட்ட மேசை ஒன்றை வைத்திருந்தான். ஒருமுறை பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் நாங்களே எங்கள் வீடுகளில் இருந்து மைக், ஸ்பீக்கர் செட் கொண்டு வந்து பள்ளியை ஒலியில் மூழ்கடித்தோம். அந்த ஏற்பாடு தலைமைக்கு பிடித்துப்போக, பள்ளியில் நிரந்தரமாக இதே ஏற்பாட்டைச் செய்து தினமும் காலை ப்ரேயர் ஒலியை பெருக்க முடிவு செய்துவிட்டனர். அதற்கான பொறுப்பும் எங்களிடமே வழங்கப்பட்டது. அஹூஜாவில் 4 ஸ்பீக்கரும் மைக்கும் வாங்கியதில் ஒரு தொகை கிடைத்தது. ஆளுக்கு ஒரு வெள்ளைச் சட்டை வாங்கியது போக மீதி இருந்த பணத்தில் ஒரு பாட்டில் வாங்கி இருவரும் குடித்தார்கள். அது பற்றி கேட்டதற்கு, “பீர், நீ குடிக்க வேண்டாம் சும்மா இருந்தால் போதும்” என்று சிக்கி சொன்னான். அப்போதுதான் தெரிந்தது அவர்கள் தண்ணி அடிப்பார்கள் என்று. அதன் பிறகு ராதா தம் பற்றவைக்க, சிக்கியும் அதிலேயே அவனது தம்மையும் நெருப்பாக்கினான். “அடப்பாவிகளா…” “இல்லடா, தண்ணி அடிச்சிட்டு தம் அடிக்கலைன்னா ஒரு மாதிரியா இருக்கும்” “இதெல்லாம் நல்லதுக்கு இல்லடா…” “அப்ப… நீ பண்றது மட்டும் நல்லதா?” “நான் என்னடா பண்ணேன்?” “டேய் அந்த சுதா மேட்ரு எங்களுக்கும் தெரியும்டா” அவர்கள் வாயில் நெருப்பு வைத்து என் வயிற்றில் ஐஸ் வைத்தார்கள்.

    சுதா அப்போதுதான் என்னை திரும்பி பார்க்க ஆரம்பித்து இருந்தாள். அதை நான் பார்ப்பதற்குள் இவர்கள் பார்த்துவிட்டார்கள் போல, க்ராதகர்கள். ஆனால் நல்லவர்கள், எப்போதாவது நான் அவளை பார்க்காமல் பாடத்தை கவனித்தால், சிக்கிதான் என் தொடையில் கிள்ளி திரும்பி பார்க்கச் சொல்லுவான். சில நாட்களிலேயே எங்கள் பார்வை புன்னகையாக உறுப்பெற்றது. அப்படி ஒருநாள் புன்னகைத்துக் கொண்டிருந்த போதுதான் தலையில் ‘டொய்ங்’ ஒரு குட்டு விழுந்தது, ஆ… தமிழம்மா. அடுத்த நாள் சுதா வகுப்பில் இல்லை. 9 ‘ஏ’ க்கு மாற்றிவிட்டார்களாம். புள்ளி வைப்பதற்குள் கொள்ளி வைத்து விட்டார்கள்.

    ராதா அப்போதே தீபாவளிக்கு கிடைத்த பண்டிகை பணத்தை சேர்த்து வட்டிக்கு விட்டிருந்தான். இப்போதும் அதே தொழில் தான் என்று சிக்கி சொல்லக் கேட்டிருக்கிறேன். கடந்த மாதம் தான் திருமணம் முடிந்தது. நான் ஊரில் இருந்தேன், இருந்தாலும் கலந்து கொள்ளவில்லை. முதலாவது வரதட்சணை வாங்கப்படும் / கொடுக்கப்படும் திருமணங்களுக்கு செல்வதில்லை என்ற எனக்குள் நான் வைத்திருக்கும் கோட்பாடு. இரண்டாவது, வட்டி.

    சிக்கி க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் திருமண வரவேற்பிற்கும் வந்திருந்தார்கள். சின்னதாக ஒரு செல்போன் சர்வீஸ் சென்டர் வைத்திருக்கிறான். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருப்பதாகவும், வெளிநாட்டில் நல்ல வேலை வந்தால் தெரியப்படுத்தவும் சொன்னான். சிக்கிக்கு அப்போது நான் சொன்னது, “வெளிநாடு ஒரு போதை மாதிரி, அங்கிருப்பவர்கள் இங்கு வரவும், இங்கிருப்பவர்கள் அங்கு செல்லவும் நினைப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இழப்புகள் அதிகம். இதுவரை இழந்தது போதும் என்றுதான், நான் இங்கு வர நினைக்கிறேன். உனது தொழிலில் முழு திறமையை வெளிப்படுத்தினால் நிச்சயமாக இதை முன்னேற்றலாம், இதிலிருந்து முன்னேறலாம். வெளிநாட்டில் கூலி வேலை செய்யும் உன் மனோநிலையை மாற்றி, இந்த தொழிலை முன்னேற்ற அல்லது குறைந்தபட்சம் இதே நிலையில் தொடர்ந்து நடக்குமாறு பார்த்துக்கொள். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது நிச்சயம் இருப்பாய்” என்று வாழ்த்திவிட்டு வந்தேன்.

    நன்றி!