Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Dec 4, 2009

வரலாறு முக்கியம் அமைச்சரே - மீண்டும் தொடர்

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் பதிவு, ஊர் உலகமெல்லாம் சுற்றி நண்பர் ஊர்சுற்றி முலமாக என் காலை சுற்றியிருக்கிறது. இல்லாத ஒன்றை எழுதுவதன் வலி எழுதும் போதுதான் உணர்கிறேன்.  இது முன்பே தெரிந்திருந்தால் ஒருவேளை யோசித்திருப்பேனா தெரியாது. ஆனாலும் அண்ணன் ஊர்சுற்றியுடைய அப்ரோச் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதற்காகவாவது இதை எழுதுவது என்று முடிவுசெய்துவிட்டேன். ஆரம்பிதாகவிட்டது.. எதை எழுதுவது எங்கிருந்து தொடங்குவது  என்பதுதான் இன்னமும் பிடிபட மாட்டேன் என்கிறது.

முதலில் ஒன்றை சொல்லிவிடுகிறேன், நான் இலக்கியவாதியோ, பின்/முன் நவீனத்துவவாதியோ, தீவிர இலக்கிய வாசகனோ, எழுத்தாளனோ அல்ல. இணையத்தில் எழுதுவது சுயநலத்திற்காக மட்டுமே. பின்நவீன மொழியில் சொல்வதென்றால் சுய அரிப்பை தீர்த்துக்கொள்ளும் ஒரு சுய சொறிதல் தளம், அவ்வளவே. தமிழில் பிழையின்றி எழுத வேண்டும், தட்டச்ச வேண்டும் என்ற ஆசை மட்டுமே இச்சுய சொறிதலுக்கான காரணமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். உலகத்தை புரட்டும் நெம்புகோலை தோளில் சுமந்து கொண்டு எதை உருட்டிப்புரட்டலாம் என்று விதிவழி தேடித்திரிபவன் அல்ல. ஆனால் அத்தகைய சூழல் வந்தால்  'என்னால் முடியும்' என்று திடமாக நம்புபவன். நான் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கோ அல்லது கருத்திற்கோ தவறான புரிதலில் மாற்றுக்கருத்து சொல்லப்படும் போது (கருத்து சொல்வது அவரவர் உரிமை என்றாலும்) அவற்றை பண்போடு எடுத்துச்சொல்லி புரிய வைப்பதும் என் உரிமையாகிறது. குறிப்பாக நான் அதிகம் நேசிக்கும்/வாசிக்கும் அன்பு நண்பர்கள் அதை சொல்லும் போது அவர்களுக்கு விளக்க வேண்டியது என் கடமையாகிறது.

இனி வரலாறு :) அப்போது அணி அதிகம் இல்லாத காலம். இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கையில் எதுவோ கிடைத்தது போலத்தான் தமிழ் வலைப்பூ உலகம் அறிமுகமானது. எழுத்துறு இன்ஸ்டால் செய்துவாசிக்க வேண்டியிருந்த நேரத்தில், (என் அலுவலக கணினியில் ஒன்றையும் இன்ஸ்டால் செய்துவிட முடியாது என்பதால்) தமிழ் ஒருங்குறி எழுத்துக்களைத் தேடி வாசித்து வந்தேன். அப்போது நண்பர் அய்யனார் எழுதும் தனிமையின் இசை  வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்னர் தமிழ் வலைப்பூ வாசித்திருக்கிறேனா என்பதை சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. தனிமையின் இசையை ஃபேவரிட்டில் வைத்து அவ்வப்போது வாசித்து வந்தேன். அதில் சிலருடைய மறுமொழிகளை வாசிக்கையில் சுவாரஸ்யமாக இருந்தது. யார் இவர்கள் என்று தொட்டு தேடிச்செல்கையில் பரந்த உலகம் அறிமுகமானது. தொடர்ச்சியாக ஆசிஃப் மீரான், சுகுணா திவாகர், லக்கிலுக், அறிவிழி, தமிழச்சி, விடாதுகருப்பு என்று நீண்டது. அந்தச்சூழலில் ஆணிகள் அதிகமாகிவிட்டாலும் இதற்கென நேரம் ஒதுக்கி வாசித்து வந்தேன். ஒருநிலையில் ஆணி மலைகளாகி விட்டதால் அறையில் இணைய இணைப்பு இழுக்க வேண்டியதாகிப்போனது. அரையிருட்டறையில் அதிக நேரம் அமர்ந்து வாசித்ததில் முதுகுத்தண்டு உராயத்தொடங்க, அப்போது மாறியதுதான் இந்த மடிக்கணினி 'தாரா' வுக்கு. மடியில் வைத்தால் சூடா(க்)கி விடுகிறது என்பதால் தலையணை மேல் வைத்திருக்கிறேன். அப்போ தலையணை கணினியா..? (அட.. போதும்பா கொசுவெல்லாம் ஆல்அவுட் ஆகிடுச்சு... விஷயத்துக்கு வா.) ஆமால்ல... டாபிக்க விட்டு வெளிய போயிட்டேனோ. இட்ஸ் ஓகே.. கயிறு கட்டிடலாம்.

தொடர்ந்து பதிவுகளை வாசித்து வந்தாலும் யாருக்கும் பின்னூட்டமிட்டதில்லை. சொல்வதற்கென்று கருத்து இருந்தாலும் அதை எப்படி சொல்வது என்பதில் குழப்பமும் கூடவே இருந்தது. அதாவது சொல்லும் முறை தெரியாதிருந்ததும் தமிழில் தட்டச்ச போதிய அறிவு இல்லாதிருந்ததுமே காரணம். அதற்கிடையில் ப்ளாக்ஸ்பாட் டாட் காம் 'ல் ஒரு கணக்கும் தொடங்கி வைத்திருந்தேன். என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல்  கூகுல் ட்ரான்ஸ்லிட்ரேட்டில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தேன். பிறகு, தமிழ்99 பற்றி ஒரு வலைப்பூவில் தெரிந்து கொண்டு W9 விசையை பயன்படுத்த ஆரம்பித்தேன். தமிழ்99 இலகுவாகவும் வேகமாகவும் தட்டச்ச உதவியது. ஆரம்பத்தில் எனக்கு வந்த சில மின்மடல்களை காப்பி பேஸ்ட் செய்து கடை நடத்திக்கொண்டிருந்தேன். அதற்கே தாவு தீர்ந்தது. எத்தனை முறை ப்ரூஃப் ரீட் செய்தாலும் மீண்டும் மீண்டும் தவறு தென்பட்டது. அதில் நானாக எழுதிய பல இடுகைகளை வெளியிடாமலேயே இருந்துவிட்டேன். இப்போது நான் பாவிக்கும் NHM Writer நண்பர் வால்பையன் அறிமுகப்படுத்தினார். மிகவும் இலகுவான தமிழ் எழுதி. நன்றி NHM, நன்றி வால். நான் பலருக்கும் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறேன், பரிந்துரைத்திருக்கிறேன். அதில் சில மலையாள, தெலுகு, ஹிந்தி மொழி நண்பர்களும் அடக்கம்.

இவ்வாறு தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த போது பதிவர் கோவி. கண்ணனுடைய பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இவருடைய எழுத்து நடையில் சுண்டி இழுக்கும் சுவாரஸ்யம் இல்லையென்றாலும், கருத்து விமர்சனம் கவனிக்கத்தக்கது. அதற்காகவே வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழில் சந்தி/இலக்கணப் பிழையின்றி எழுதுவதை குதிரைக்கொம்பென நினைத்துக்கொண்டிருந்த போது, கோவி.கண்ணனுடைய ஒரு பதிவு அட... நாமளும் எழுதலாமோ என்று நம்பிக்கையைத் தூண்டியது. சின்னச்சின்ன தவறாக இருந்தாலும் காலம் செல்லச்செல்ல திருத்திக்கொள்ளலாம் என்றே எழுதினேன். இன்றளவும் திருந்திக்கொண்டே இருக்கின்றேன் 'கல்லாதது உலகளவு'. எழுத்தாளர் 'குரு' பாரா சொல்லுவார், 'என் எழுத்தில் ஒரு பிழையை கூட கண்டுபிடிக்க முடியாது' என்று. இதே போன்று நானும் ஒருநாள் சவால் விடுவேன் என்று நம்புகிறேன்.  அதுவரை, என் எழுத்தில் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டுங்கள். என் எழுத்தை திருத்திக்கொள்ள உதவி செய்யுங்கள். ஆரம்பத்தில் நண்பர் டக்ளஸ் ராஜூ சிலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்போது குஜராத்தில் ஆணி அதிகம் போலிருக்கிறது. ஆளைக்காண முடியவில்லை... பாதகமில்லை மெதுவா வாங்க ராஜூ.. ஆனா வந்துடணும். :) 

முதலில் உற்சாகமூட்டிய பலரில் என் ஊர்வாசி, சகோதரர் கார்த்திகை பாண்டியன் பின்தொடருவோர் கேட்ஜட் இணைக்கச்சொல்லி ஜெய்ஹிந்த்புரத்தை பின் தொடர்ந்து ஊக்கமளிக்கிறார். சென்ற முறை நான் ஊருக்குச் சென்ற சமயத்தில் இவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். அதன் பிறகே உருப்படியாக ஏதாவது எழுதுவது என்று எண்ணிக்கொண்டேன். (இதுவரை அப்படி ஏதாவது  எழுதியிருக்கேனா?) அன்றுவரை அறிமுகமில்லாத பலரும் நீண்ட நாள் நண்பர்கள் போல பேசி பழகியது மகிழ்ச்சியாக/நெகிழ்ச்சியாக இருந்தது.  இணைய வெளியில் நடக்கும் விவாதங்கள் பல நேரங்களில் எனக்கு பயனுள்ளதாக இருந்திருக்கிறது. நானும் பலவற்றில்  பங்கு பெற்றிருக்கிறேன். ஏதோ ஒரு விவாதத்தில் நான் சொன்ன ஏதோ ஒரு வார்த்தை, நான் எழுத காரணமான மூத்த பதிவர் கோவி.கண்ணனுடைய மனதை புண்படுத்தியிருக்க வேண்டும். அதற்காக வருந்துகிறேன் என்று முன்பே அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் என்னுடன் விவாதிப்பதில்லை என்று அவர் சொல்லியது மீண்டும் என்னை வருந்தச் செய்தது. :(

நான் எழுத ஆரம்பித்த சிலகாலம் வரையிலும் திரட்டிகளை பற்றிய அறிமுகம் இல்லை. திரட்டிகளுடைய அறிமுகம் கிடைத்தபிறகு, ஓட்டுகளில் ஆர்வம் இருந்தது. தினமும் ஹிட்ஸ்க்காகவும் பின்னூட்டத்திற்காகவும்  கல்லாப்பெட்டியை திறந்து வைத்து காவ காத்திருந்திருக்கிறேன். இப்போதும் கூட பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது என்றாலும் ஹிட்ஸ் மற்றும் திரட்டி குறித்த ஆர்வம் இல்லை. துளியும் இல்லை என்று சொல்வதற்கில்லை ஆனாலும் இல்லை. பதிவுகளை வாசிக்க கூகுள் ரீடர், ஃபீட், ஃபாலோ ஆப்ஷன் என்று பல வழிகள் இருந்தும் திரட்டிகளை தெய்வமாக நினைப்பதும் ஏன் என்பதும் புரியவில்லை. சந்தேகமில்லாமல் திரட்டிகளுடைய சேவை மிகப்பெரியது, பாராட்டத்தக்கது. ஆனாலும் திரட்டிகள் இல்லையென்றால் பதிவுலகம் அழிந்துவிடும் என்பது போன்ற இமேஜ் சரிதானா என்பதில் புரியாத புதிர் இருக்கிறது. எழுத்தாளர் யுவகிருஷ்ணா திரட்டிகளிலிருந்து விலகிய பிறகு சொன்னார், 'திரட்டிகளில் இருந்தாலும் 1000 ஹிட்ஸ், இல்லாவிட்டாலும் 1000 ஹிட்ஸ் என்பதை தெரிந்து கொள்ள இவ்வளவு நாட்களானது'. இது பலருக்கும் புரிவதில்லை என்றே நினைக்கிறேன். பதிவர்கள் தங்கள் எழுத்துக்களை மட்டுமே நம்ப வேண்டும், திரட்டிகளையோ பின்னூட்டங்களையோ நம்பி எழுதினால் வெகுஜன எழுத்தாளர்களின் வசவு கேட்க வேண்டிவரும்.

இந்தப்பத்தி எழுதுவதில் கர்வப்பட்டுக்கொள்கிறேன். இதுவரை  பதிவுகளில் எழுதவும், பின்னூட்டமிடவும் ஒரே பயனர் பெயரைத்தான் பாவித்து வருகிறேன். எங்கும் எதற்கும் அனானியாகவோ, வேறு பெயரிலோ பின்னூட்டியதில்லை, பதிவிட்டதில்லை என்று சொல்வதில் நேர்மையான பெருமை  இருக்கிறது. காதைக் கொண்டுவாங்க.. ஒரு பிரபல பதிவர் 25 ஐடி வைத்திருக்கிறாராம்.

சொல்வதற்கு பல விஷயங்கள் கிடப்பில் இருந்தாலும், அறையில் கிடைத்துக்கொண்டிருந்த இலவச இணைய இணைப்பு தடைபட்டு விட்டதால் இடுகைக்கான தகவல்களை திரட்ட முடியாது அத்தனையும் முடங்கிப் போய் கிடக்கிறது. புதிதாய் இணைப்பு வழங்குபவரும் ஊரில் இல்லை. அதனாலேயே இந்த தொடர் இடுகைகளை எழுதி உங்களை படுத்த வேண்டிதாகிப்போனது. தொடர் என்றதும நினைவு வருகிறது..

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் இடுகையை தொடர்ந்து நடத்திச்செல்ல நான் அழைப்பது...
ஒரு வரியை வைத்தும் ஒரு இடுகையை எழுதிவிடலாம் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். நீங்களும் எழுதுங்க... இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.

Nov 5, 2009

பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: ஸ்டாலின்
பிடிக்காதவர்: அன்புமணி

2. எழுத்தாளர்
பிடித்தவர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பிடிக்காதவர்: ஞாநி

3. கவிஞர்
பிடித்தவர்: மு.கருணாநிதி
பிடிக்காதவர்: உயிரோடு இல்லை

4. திரைப்பட இயக்குனர்
பிடித்தவர்: அமீர்
பிடிக்காதவர்: மணிரத்னம்

5. நடிகர்/கை
பிடித்தவர்: ஜெயலலிதா
பிடிக்காதவர்: விஜயகாந்த்

6. விளையாட்டு வீரர்
பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த்
பிடிக்காதவர்: அஜீத்

7. தொழில் அதிபர்
பிடித்தவர்: கலாநிதி மாறன்
பிடிக்காதவர்: ஷங்கர்

8. மதத் தலைவர்
பிடித்தவர்: கி.வீரமணி
பிடிக்காதவர்: இராமகோபாலன்

9. மருத்துவர்
பிடித்தவர்: புருனோ
பிடிக்காதவர்: ராமதாஸ்

10. வலைபதிவர்
பிடித்தவர்: லக்கிலுக்
பிடிக்காதவர்: யுவகிருஷ்ணா

என்னைத் தொடர அழைத்தது:  நாடோடி இலக்கியன்

நான் தொடர அழைப்பது:
விதி இங்க இருக்கு. 

டிஸ்கி: பிடித்த/பிடிக்காதவர் எந்த நிமிடமும் மாற்றப்படலாம்.

Oct 18, 2009

நட்பு என்பது...

நட்பு என்பது... 'மன்னிச்சுக்கோங்க பாஸ்' என்பதல்ல, 'தப்பு உம்மேல தான்டா' என்பது.
நட்பு என்பது... 'உனக்காக நான் இருக்கிறேன்' என்பதல்ல, 'எங்கடா அடி வாங்குன' என்பது
நட்பு என்பது... 'நான் புரிந்து கொண்டேன்' என்பதல்ல, 'எல்லாம் உன்னாலதான்டா' என்பது
நட்பு என்பது... 'உன்னை நான் கவனமாக பார்த்துக்கொள்வேன்' என்பதல்ல,'நாயே, உன்ன விட்டுட்டு எங்கடா போகப்போறேன்' என்பது
நட்பு என்பது... 'உன் வெற்றியில் மகிழ்கிறேன்' என்பதல்ல. 'பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றா மாப்ள' என்பது.
நட்பு என்பது... 'நான் அவளை காதலிக்கிறேன்' என்பதல்ல, 'டேய் மரியாதையோட பாருடா.. அவ உன் அண்ணி' என்பது
நட்பு என்பது... 'நாளைக்கு வெளிய போகலாமா?' என்று கேட்பதல்ல, 'நடிக்காதடா... நாளைக்கு நாம வெளிய போறோம்' என்பது
நட்பு என்பது... 'விரைவில் குணமடையணும்' என்பதல்ல, 'ஜாஸ்தி குடிச்சா இப்டித்தான் ஆகும், என்பது
நட்பு என்பது... 'உன் பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள்' என்பதல்ல, 'வண்டி ஓவர் ஸ்பீட்ல போகுது, ப்ரேக் போட்றா' என்பது
 நட்பு என்பது... 'அம்மா செலவுக்கு பணம் அனுப்பு' என்பதல்ல, 'அடுத்த தடவ போன் பண்ணும் போது மனசுவிட்டு பேசுடா, சின்ன வயசில பார்த்த சூப்பர் வுமன் இல்ல.. அம்மா, பக்கத்தில இருந்து கவனிச்சுக்கணும், உடனே ஊருக்கு கிளம்பி போ, காசு நாளைக்கு சம்பாதிக்கலாம்' என்பது.
 இத்தகைய நட்பை எனக்கு பெற்றுத்தந்த இணையத்திற்கு.... ஐ... நன்றி சொல்வேன்னு நெனச்சீங்களா... போய் வேலைய பாருங்க...