Showing posts with label சூடானவை. Show all posts
Showing posts with label சூடானவை. Show all posts

Sep 28, 2009

இஸ்லாமியர்களும் தீவிரவாதமும்

"அமைதி" என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து பிறந்த சொல்லையே தனது மதத்தின் பெயராகக்கொண்ட இஸ்லாமியர்களுக்கெதிரான பிரச்சாரத்தில் "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடலுக்கான எண்ணம் / திட்டம் ஒரளவு வெற்றி பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். நீண்டகாலமாக கட்டவிழ்த்து விடப்படும் இப்பிரச்சாரத்தின் பெரும் பங்கு ஊடகத்துறையையே சாரும் என்பதையும் மறுக்க முடியாது. பொதுஅறிவு வளர்க்க வேண்டிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவையே இந்த பாதகச்செயலை முன்னின்று செய்வது துரதிஷ்டவசமானது. பொழுதுபோக்கு சாதனமாக திரைப்படம் பார்க்கப்பட வேண்டும் என்றாலும், பார்க்கப்பட்டாலும், அதற்கு மிகப்பெரிய (அழிவு) ஆக்கசக்தி உண்டு என்பதையும், உளவியல் ரீதியில் நிச்சயம் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதையும் சமீபத்திய திரைப்பட விமர்சனங்களில் பார்க்க முடிகிறது. இத்திரைப்பட விமர்சனமானது, படைப்பை விமர்சித்து, படைப்பாளனை விமர்சித்து, தற்போது விமர்சகனை விமர்சிக்கும் நிலையில் நிற்கிறது. இந்நிலையில் இரண்டு விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று; பொழுதுபோக்கு சாதனமான திரைப்படம், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று சொல்லக்கூடிய இணைய நண்பர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை நேரடியாகக் காண முடிவது. (தவிர, எந்த முற்போக்கு சிந்தனையுமில்லாமல், பொழுதுபோக்கிற்கு திரைப்படம் காண வரும் ஒருவனின் உளவியல் பாதிப்புக்களை அவதானிக்க முடியாது, அது எத்தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்.) இரண்டாவது; இணையம் என்ற ஊடக வெளியும், முன்னெப்போதையும் விட தற்போது மிக வீரியமாக துவேஷப்பரப்புரையை நிகழ்த்தி வருவது. அதற்கான மிக முக்கிய காரணமாக நான் விளங்குவது, மற்ற ஊடகங்களைப்போல இங்கு முகம் காட்டவேண்டியதில்லை என்பதே. மேலும், இப்பதிவு திரைப்பட விமர்சனமோ, விமர்சக விமர்சனமோ இல்லையாதலால், இது… இங்கேயே கிடக்க.

k1057276
"இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடல் இஸ்லாமியர்களுக்கு கசப்பு தருவது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மையே தீவிரவாத விகிதாச்சாரத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதும். அமைதியை போதிக்கும் இஸ்லாத்தில், சிலரது இத்தகைய தீவிர நடவடிக்கைகள், இஸ்லாத்தை காக்கும் என்பதோ, அதன் வளர்ச்சிக்கு உதவும் என்பதோ எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, வரலாற்றில் இதுவரை நிரூபிக்க முடியாததும் கூட. அமைதியை அமைதி எனச் சொல்லும், அமைதியாய் வாழ்ந்து காட்டும் முயற்சியும் இதனால் சாத்தியப்படாமல் போகிறது என்பதே உண்மை. வன்முறையால் அவர்கள் தமக்குத்தாமே 'கபர்' குழிபறித்துக்கொள்ளவதோடு, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் தடையாகிறார்கள் என்பதை உணரவேண்டும். வன்முறையால் எதையும் சாதிக்கலாம் என்பது இஸ்லாமிய சிந்தனை அல்ல. வன்முறையால் வளர்ந்த சித்தாந்தம் காலப்போக்கில் மக்கிக்போன வரலாறுகளைப் பார்க்க முடிகிறது. இத்தகைய செயல்களாலேயே, இஸ்லாம் போதிக்கும் முறைப்படி, 'தன்னை படைத்தவனுக்கு நன்றி செலுத்தி, அமைதியாய் வாழும்' பெரும்பான்மை முஸ்லீம்களும், '“என்னடா! எங்க குண்டு வைக்கலாம்ன்னு பிளான் செய்யறீங்களா?”' போன்ற அருவருக்கத்தக்க கேளிச் சொற்களால் கூனிக்குறுகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இஸ்லாமியன் பெயரைக்கேட்டாலே 'வீடு காலி இல்லை' என்பது இன்றைய பெரு நகர சகோதரர்களின் டெம்ப்ளேட் பதிலாகிவிட்டது. தீவிரவாதத்தின் ஒருசில எதிர்வினைகளான இவற்றையும் மனச் சங்கடங்களோடு எதிர்கொள்ள வேண்டியிருப்பது, ஆண்டாண்டு காலமாக சகோதர சமூகத்தில் 'மாமு, மச்சான்' எனப்பழகிவந்த முஸ்லீம்களுக்கு வேதனையளிக்கிறது.

இஸ்லாத்தை பற்றிய தவறான உருவகத்தை மாற்ற வேண்டிய கடமை, பொறுப்பு, இஸ்லாமியர்களுக்கே இருக்கிறது. பேச்சிலும் எழுத்திலும், குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரங்களை எடுத்துக்காட்டி "இஸ்லாம் அமைதி மார்க்கம்" எனச் சொல்லிவிடுவதால் மட்டுமே, அது உண்மை என்பதை நிரூபித்துவிட முடியாது. இஸ்லாம் கூறும் அமைதி முறையை, மனித நேயத்தை, சீறிய வாழ்க்கை நெறியை பின்பற்றி வாழ்ந்து காட்டுவதால் மட்டுமே, இஸ்லாம், தீவீரவாதத்தை, பயங்கரவாதத்தை வெறுக்கிறது, இஸ்லாத்திற்கும் அதற்கும் துளியளவும் தொடர்பில்லை என்பதை நிரூபிக்க முடியும். அதன் மூலமே, சிலரது செய்கைக்கு முழு சமூகமும் பொறுப்பாகாது என்ற புரிதலுடனான, மாற்று மத சகோதரர்களின் நம்பிக்கையையும் நல்மதிப்பையும் பெறமுடியும். இஸ்லாமியர்களுக்கெதிரான மிகமோசமான சூழல் நிலவும் இந்தியப் பன்முகச் சமூகத்தில், இவற்றை சாத்தியப்படுத்துவது மிகக்கடினம் என்றாலும், செய்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய சிறுபான்மையினர் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

books_terrorism_facts_myth_ தீவிரவாதம் என்பது நாடு, இனம், மதம் (சார்பு, சார்பற்ற), மொழி என்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை  உரக்கச்சொல்லியும் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை. நாடு, இனம், மதம் மற்றும் மொழி அடையாளங்களைச் சொல்லி தீவிரவாதத்தை தூண்டும் (i), அவற்றால் உந்தப்பட்டு தீவிரவாதம் செய்யும் (ii), தீவிரவாதத்திற்கு (நேரடி தொடர்பில்லை எனினும்) வர்க்க அடையாளங்கள் பூசும் (iii) அனைவரும் குற்றவாளிகளே, தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டியவர்களே. இவை மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையது போலவே சங்கிலித்தொடரானதும் கூட. 

சிறுவயது முதல் கற்பித்து வளர்க்கப்படும் பல கருத்துக்களே மனிதர்களிடத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேர் விடுகின்றன. (என்னை அப்படியெல்லாம் வளர்க்கவில்லை என்று நாம் இப்போதும் சொல்லவதுண்டு.) அசோகர் மரம் நட்டார், பாலம் கட்டினார் என்பதாகச் சொல்லும் ஆரம்பப் பள்ளிக்கல்வியின் வரலாறு, முகலாய மன்னரின் பதின்மூன்று மனைவிகளையும், கஜினியின் பதின்நான்கு படையெடுப்பையும் மட்டும் சொல்லி ஒருதலைபட்ச இஸ்லாமியர்களுக்கெதிரான துவேஷப்பரப்புரையை தொடங்குகிறது. இத்தகைய விஷவேர்கள் பிற்பாடு, "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது" எனும் பொய் கூற்றை பகுத்தறியாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது. அதுபோலவே, "இஸ்லாமியர்களுக்கு தேசப்பற்று இல்லை" எனும் விஷமத்திற்கு வெள்ளையின எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த இஸ்லாமியர்களின் வரலாறு மறைக்கப்படுவதும் காரணமாக அமைந்து விடுகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் (கடவுள் நம்பிக்கை, வழிபாடு, நோன்பு, தானம் மற்றும்) கடைசியான ஹஜ் எனப்படும் புனித காபா செல்லும் கடமையை எந்த முகலாய மன்னரும் நிறைவேற்றிதாக குறிப்பு இல்லை. இஸ்லாத்தின் கடமையையே செய்யத்தவறிய முகலாய மன்னர்கள், இஸ்லாத்தை பரப்ப வாளேந்தியிருப்பார்கள் என்பதை பகுத்தறிவால் ஏற்க முடியவில்லை. வெள்ளையர்களுக்கு முன்பு நாடு பிடிக்க வந்தவர்கள், 600 ஆண்டுகளுக்கு முன்பான அகண்ட இந்தியாவை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக முழுதுமாக ஆண்டபோதே, இஸ்லாத்தை வன்முறையால் பரப்ப நினைத்திருக்க சாத்தியம் இல்லை என்பதற்கு இந்த சமூகம் இப்போதும் சிறுபான்மையாக இருப்பதே சாட்சி. இவர்கள், வாணிபத்திற்காக வந்தவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சாதீய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதநேயத்தை பார்த்து மனம் மாறி இஸ்லாத்தை தழுவியதனாலேயே இன்றளவும் இஸ்லாம் எனும் கயிற்றை பற்றிப்பிடித்து கொண்டிருப்பதை காணலாம். 

அது நிற்க... வணிக மையங்களிலும், இரயில் நிலையங்களிலும் வெடிகுண்டுகளை வீசி நூற்றுக்கணக்கில் உயிர்களைப் பறிப்பது நியாயம்தானா? விமானங்களைக் கடத்திப் பயங்கரவாதிகளை விடுவிக்கப் பணயம் வைப்பது இஸ்லாம் சார்ந்த பணிகளா? ஒரு பாவமும் செய்யாத பச்சிளங்குழந்தைகளும், பெண்களும் செத்து மடிவதை வேடிக்கை பார்க்கத்தானா இஸ்லாம் கூறுகிறது? இத்தகைய வன்முறைச் செயலுக்கெல்லாம் இஸ்லாத்தை பொதுப்படுத்தி நியாயம் சொல்வது சரியா? என்பது போன்ற பல கேள்விகள் எல்லோருக்கும் எழலாம். இவற்றிற்கெல்லாம் பதில்.
இல்லை... இல்லை.. இல்லை... இஸ்லாம் இதை கற்பிக்கவில்லை. வன்முறையை வெறுக்கும் மார்க்கம் இஸ்லாம். 'மனிதர்களிடம் நீதியுடனும் நேசத்துடனும் நடந்துகொள்ளுங்கள்' என்றுதான் முஹம்பது நபி சொல்லிச் சென்றிருக்கிறார்.

Godhra-Riots1ஒரு சிலரின் வன்செயலுக்கு அவர்களது மதத்தையோ, மதத்தை பின்பற்றும் மக்களையோ குற்றவாளியாக்குவது எந்த விதத்தில் நியாயமாகும்? குஜராத்தில் கொடுஞ்செயல் நிகழ்த்திய மோடி, பாபு பஜ்ரங்கி மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர்  போன்றோரால் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களையும் குற்றவாளியாக்கிப்பார்ப்பது எந்தளவு மடத்தனமோ, நியாயமில்லையோ... அதேபோல... இஸ்லாத்தின் பெயர் சொல்லும் சில தீவிரவாதிகளுக்காக மற்ற பெரும்பான்மை இஸ்லாமியர்களை குற்றஞ்சாட்டுவதும் அறிவிலித்தனம்.

எலி இருக்கும் இடத்தில் பூனை வருமாம்... எலியை விரட்ட மனிதனால் முடியாதா? எலியை கொல்ல, பூனை என்ற மிருகம் தான் வேண்டுமெனில், பூனையை கொல்ல, புலி வருவது அதைவிட ஆபத்தாச்சே. புலி என்ற மிருகத்திற்கு, சக மிருகமாகிய பூனை, மனிதன் என்ற வித்தியாசம் இல்லாமல், மனிதத்தையும் சேர்த்தே கொன்றுவிடுமே... எலியானாலும் புலியானாலும் மனிதர்கள் கைகோர்த்து காட்டுக்கு விரட்ட முடியாதா? மனிதர்கள் ஒன்றுபட்டால் மிருகங்களை விரட்டி விடலாமே.

எங்கோ செய்திகளில் கேட்பதையும், முகம் இல்லாதவர்களின் இணைய எழுத்தின் போலி குற்றச்சாட்டுகளையும், துவேஷத்தையும், கட்டுக்கதைகளையும் அப்படியே நம்பிவிடாமல், நம் அண்டை, எதிர் வீடுகளிலிருக்கும் மாற்று மத சகோதர்களை மனிதநேயத்துடன் கை கோர்த்து பார்ப்போம். நிச்சயம் என் அப்பாவி நண்பனால் இத்தகைய வன்செயல்களை ஈடுபடமுடியாது என்பதையும், எந்த கடவுள் கொள்கையும் அத்தகைய சமூக விரோதத்தை செய்யச்சொல்வதில்லை என்பதையும் உணர்ந்து கொள்வோம். மதத்திற்கு அப்பாற்பட்டவனாய் இருந்தாலும், பன்முகச் சமூகத்துடன் ஒன்றியிருக்கும் ஒருவனால் அச்சமூகத்தின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடமுடியாது என்பதை அனுபவித்து உணரலாம்.

தீவிரவாதத்திற்கு 'புறக்கணிப்பு' என்ற ஒற்றைச்சொல் தானே காரணமாக இருக்கிறது. தான், தன் இனம், மொழி, மதம் புறக்கணிக்கப்படுகிறது என்ற காரணம் தானே தீவிரவாதி உருவாக காரணியாகிறது.

சிலர் செய்யும் தவறுக்கு ஒரு சிறுபான்மைச் சமூகத்தையே புறந்தள்ளி ஒதுக்கிவிடாமல், 'மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நீ என்ன செய்வாய்' என்று தோளோடு கை கோர்த்து அரவணைத்து, அழைத்துச் செல்லவேண்டியது பெரும்பான்மையான ஒவ்வொருவரின் கடமையல்லவா? பயங்கரவாதத்தை வெறுக்கும் அனைவரும் ஒன்றுபட்டால், அதை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாதா? வாருங்கள்...
பயங்கரவாத ஒழிப்பில் கை கோர்ப்போம். மதவேறுபாடுகளை மறந்த மனிதநேயம் காப்போம்,.

Aug 25, 2009

வீம்புநிலை வியாபாரிகள்

சரியாகச் சொல்லவதென்றால், இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. முன்னர் நான் எழுதியிருந்த விளிம்புநிலை வியாபாரிகள் இடுகையில் நணபர்களின் பின்னூட்டங்கள் பார்க்கும் வரை. தீபாவளி திடீர் கடைகளையும், பாலியல் தொழிலாளர்களையும் வீம்பு நிலை வியாபாரிகள் என்று நான் குறிப்பிட்டிருந்ததை சில நண்பர்கள் மறுத்திருந்தனர். என் கருத்தையே அனைவரும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை, அதே போல நானும். நமது பார்வையினூடாய் நிலைபாடுகள் தீர்மானிக்கப்படுவதால், என் நிலைபாட்டிற்கான பார்வையை உங்களுக்கும் பகிர வேண்டியது என் உரிமையும் கடமையும் ஆகிறது.

தீபாவளி திடீர் கடைகள்; இவைகள் திடீரென்று முளைக்க காரணம், குறுகிய காலத்தில் அதிக லாபம் அள்ளும் தொழில், முதலீடு முடக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை மற்றும் தரமற்ற பொருளை விற்பனை செய்வதால், நுகர்வோர் திரும்ப வருவார் என்கிற அச்சம் இல்லை. வியாபார சரக்கு, தீபாவளிக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு, மொத்த வியாபாரியிடம் கொள்முதல் செய்யப்படும், விற்காத சரக்கு திரும்ப தரப்படும் என்ற ஒப்பந்தத்தோடு. தீபாவளிக்கு அடுத்த நாள், கையிருப்பு சரக்குகள் திரும்ப தரப்பட்டு கணக்கு முடிக்கப்படும். இத்தகைய சரக்கின் தரம், சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்கு தெருவோரக்கடை அல்ல தொழில். வேறு தொழிலில் இருப்போரால் திடீர் கடைகள் நடாத்தப்படுகின்றன. நஷ்டத்திற்கான வாய்ப்பு இல்லாததால் லாபம் மட்டுமே இறுதி வடிவம் பெறும். அம்பானிகளுக்கும் அடிசறுக்கும் காலம் இது. லாபம் மட்டுமே வாரிச்சுருட்டும் ஒரு வியாபாரியை விளிம்பு நிலை வியாபாரி என்று சொல்வது பொருந்தாது என்பது என் புரிதல். ஏதோ ஒரு காரணத்தால், ஒரு வேளை இவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலும், ஒதுக்கித்தள்ளிவிட்டு ஒரிஜினல் தொழிலை பார்க்க போய் விடுவார்கள்.

சரி.. அப்போ பாலியல் தொழிலாளர்கள்? நான் தீபாவளி திடீர் கடைகளை மட்டும் அவ்வாறுச் சொல்லியிருந்தால் நண்பர்கள் ஒரு வேளை ஏற்றுக்கொண்டிருக்ககூடும். பாலியல் தொழிலாளர்கள், வியாபாரிகள் அல்லர். அவர்கள் ஒரு வியாபாரப் பொருள், உபயோகித்தபின் திரும்ப கொடுத்துவிடும் காஃபி கப் போன்ற சரக்கு அவர்கள். (சில இடங்களில் டிஸ்பாஸபில் கப் ஆகவும் பாவிக்கப்படுவதுண்டு) இந்தத் தொழிலில் வியாபாரி, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவருடைய (சரக்கை சந்தைக்கு கொண்டு செல்லும்) சமூகச் சுழல்களாகிய, குடும்பம், வறுமை, அறியாமை, ஆசை, உணர்ச்சி, போதை, மன அழுத்தம் மற்றும் சந்தேகமில்லாமல் அவர்கள் மீது திணிக்கப்படும் இன்ன பிறவும் அடங்கும். இந்தச் சூழல்களை வீம்புநிலை வியாபாரிகள் எனச் சொல்கிறேனா என்றால்… இல்லை. நகைமுரண் :) குழப்பாமல் விஷயத்திற்கு வருகிறேன்.

பாலியல் தொழிலை யாரும் விரும்பி செய்வதில்லை. அதீத உணர்ச்சி, ஒரு வகையான ஆசை, போதா இன்பம் போன்ற காரணங்களினால் விரும்பியே சிலர் வந்திருந்தாலும், இவை எல்லாம் போதும் என்றானாலும், பரவலாக அறியப்பட்ட பின் சமூகம் இவர்களது மீள்வரவை ஏற்றுக்கொள்வதில்லை. வறுமை காரணமாக இத்தொழிலில் நுழைபவர்களுக்கும் இதே நிலை தான். வறுமானத்திற்கான மாற்று ஏற்பாட்டில் இனி வறுமை இல்லை என்றான பிறகும், குடும்பமே இவர்களை புறக்கணிக்கும் சூழலில் உணர்ச்சியற்ற உயிர் பொருளாக உடலை சில நிமிடங்கள் கிடத்தி வைக்க வேண்டிய நிலை. விரும்பியும் விரும்பாமலும் தொடர வேண்டிய நிர்பந்தம். ஆண் பாலியல் தொழிலாளியின் நிலை இன்னும் மோசம். விருப்பமில்லாமலேயே அவன் இயங்க வேண்டியிருக்கிறது. சில சூழ்நிலையில் அதைவிட கொடுமையாக அவன் மீது இயக்கம் செலுத்தப்படுகிறது. இவர்கள் கூட எந்த நேரத்திலும் தொழிலை மாற்றிக்கொண்டு மீண்டு விடுவார்கள். பெண் தொழிலாளியின் நிலையே, வேதனைக்குள்ளானது. anti-prostitution_Ii3GZ_22980

இதற்கான தற்போதைய தீர்வு பாலியல் தொழிலாளர்களுடைய மீள்வாழ்வு. இடமாற்றத்தின் மூலம் வாழ்வாதார உரிமைகள் மீட்கப்பட்டு மீள்வாழ்வு சாத்தியம் என்றாலும், உடற்சந்தையில் கிராக்கியும், முதலீடு இல்லாமல் குறைந்த நேரத்தில் அதிக பணம் பண்ணக்கூடிய ஒரே தொழிலாக, அனுபவமிக்க தொழிலாக பாலியல் தொழில் இருப்பதால் சட்டென்று விட்டுவிட முடியாத பாலியல் தொழிலாளர்களுடைய நிலை, வீம்பு நிலை. இந்நிலையில் அவர்களுக்கு இறுதியில் மீதமிருப்பது பணம், தொற்றிய நோய் மற்றும் வேதனைகளே. அவர்களிடையே மீள்வாழ்விற்கான அவசியத்தை உணர்த்தி, அதை நடைமுறைப்படுத்தல் அவசரமான அவசியம்.

பாலியல் தொழிலாளர்கள் மீதான பரிதாபப் பார்வை, போலி முற்போக்குவாதத்தின் முகமூடியாகப்படுகிறது. பாலியல் தொழிலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் எனக்கு சரியாகப்படவில்லை. கண்டும் காணாமல் நடக்கும் தொழில் எங்கும் காணக்கிடைக்கும். வறுமையை காரணம் காட்டி, பல புதியவர்கள் உள்ளே நுழையும் / நுழைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். நடைமுறைப்படுத்தப்பட்ட சந்தையில் பொருளுக்கான கிராக்கி கூடிவிடுவதால், கடத்திவரப்படும் பெண்வணிகம் அதிகரிக்கும். அதேபோல பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், பெண்களுக்கெதிரான வன்கொடுமை குறையும் என்பதையும் ஏற்களாகாது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமையானது இனக்கவர்ச்சியில் நடத்தப்படுவது. அவை கடுமையான சட்டங்கள் அல்லது முறையான பாலியல் கல்வி மூலம் மட்டுமே குறைக்கப்படலாம் என்பதும் என் புரிதல். பாலியல் முற்றிலுமாக தடுக்கப்பட்ட நாடுகளில் வன்கொடுமை விகிதம் குறைவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாலுறுப்புகளை அவற்றின் நேரடி பெயர் கொண்டு எழுதுவது பாவம் என்ற சமூக கட்டமைப்பை எதிர்த்தாலும், இன்னும் நாம் அவற்றை எழுத்தாக்கத் தயங்குவதற்கு காரணம், நம் கலாச்சாரம், சுழல் என்றால் அது மிகையாகாது. கலாச்சாரம் குப்பைத்தொட்டி என்பதால் மட்டுமே அது இல்லை என்றாகிவிடாது. என்னதான் நவீனத்துவம் பேசினாலும், வெகுசன சமூகத்தினூடே ஒன்றிப்போயிருக்கும் கலாச்சாரம் என்ற குப்பைத்தொட்டியும் முன்நிறுத்தப்பட்டு முரணான விவாதங்கள் செய்யப்படுவதால் மட்டுமே, ஏதேனும் மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. அல்லாது காலச்சாரத்தையே முற்றிலுமாக மாற்ற முயல்வது, எதிர்மறை விளைவுகளையே தரும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நன்றி!

Aug 20, 2009

கழிவறை நீதி - வள்ளுவன்

உங்கள் வீட்டு கழிவறை குழாய் ஓட்டையால் பொதுப்பாதை வரை நாற்றம் வருகிறது என்றால், அந்த பொதுப்பாதை பாவிக்கும் ஒருவனாகிய நான், இரண்டு செயல்கள் செய்யலாம். ஒன்று, உங்கள் வீட்டு கழிவறை ஓட்டையை அடைக்கச்சொல்லி உங்களிடம் கேட்பது, செய்து முடிக்கப்படும் வரை சட்டத்திற்குட்பட்ட எந்த செயலும் செய்ய எனக்கு அனுமதி உண்டு. அது என் உரிமை. மாறாக அறிவற்ற முறையில் பேசக்கூடாது என்பதை வள்ளுவர்,

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். - குறள்

எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

என்கிறார்.

இரண்டாவதான மூக்கை பொத்திக்கொண்டு அவ்வழியே நடந்து செல்வது, என் பொறுமையை காட்டுகிறது. பொதுப்பாதை வரை நாற்றம் வருவதை அறிந்து நீங்களே மாறிக்கொள்வது வரை நான் பொறுமையாக இருப்பதற்கு எந்த சட்டமும் தனிநபரும் குறுக்கிட முடியாது. பரஸ்பரம் இரு நபர்களுக்கிடையேயான புரிந்துணர்வு.

இதை,

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். - குறள்

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

என்று பொறுமையை இவ்வாறு புகழ்கிறார்.

என் வீட்டில் கழிவறை இல்லை என்பதற்காக, உங்களிடம் வந்து உன் வீட்டில் கழிவறை இருப்பதால் தான் பொதுப்பாதையில் நாற்றம் வருகிறது, உடனே அதை இடித்துவிடு என்று நான் சொல்வது, நியாயமாகுமா? கழிவறையால் தான் நாற்றம் வருகிறது என்பது ஏற்புடையதாக இருந்தாலும், குழாய் ஓட்டையை அடைக்கச் சொல்வது தானே நியாயம்.

கழிவறையை இடிக்கச்சொல்லி குற்றம் புரியாமல் இருக்கவேண்டும் என்பதை,

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை. - குறள்

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

என்பதாகச் சொல்கிறார்.

கழிவறை என்பது கழிவிறக்கத்திற்கான பயன்பாட்டிற்கு மட்டுமே என்றாலும், கழிவறையை பயன்படுத்தினால் தான் சுகாதாரம், தனிமை போன்ற முழுப்பயனும் அறியக்கிடைக்கும். மாறாக கழிவறையை பயன்படுத்தாமலேயே காட்டிலோ அல்லது முட்டுச்சந்திலோ கழிவிறக்கலாம் என்று தன் குறையை நியாப்படுத்துவது அறுவுடைமையாகாது.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. - குறள்

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.

என்று கேட்கிறார்.

கழிவறை ஓட்டை சிறியதாய் இருந்தாலும் அதை உடனே அடைப்பதன் மூலம் மற்றவருக்கு தொந்தரவு செய்யாதிருப்பது நலம். அதையும் அய்யன்,

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். - குறள்

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

என்கிறார்.

கழிவறைக்காக சச்சரவு செய்வதைக் காட்டிலும், நட்புதான் பெரிது என்போரை அறிவுடையோர் என்கிறார் வள்ளுவர்.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. - குறள்

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

கழிவறையை இடிக்கச் சொல்வோரையும் மன்னித்து நட்பு பாராட்டல், வாழ்நாள் முழுக்க புகழ்மிக்கதாய் அமையும் என்கிறார்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

இறுதியாக,

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.

ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

நன்றி!!!

Aug 12, 2009

விளிம்புநிலை வியாபாரிகள்

அந்த இட்லிக்கடை நடத்துபவர் பெயர் இட்டலிக்காரம்மா. கடைக்குப் பெயரில்லை, கடை நடத்துபவர் பெயரையும் யாரும் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை. இது பெரும்பாலான தெருவோர கடைகளுக்குப் பொருந்தும். இத்தகைய கடைகளுக்குப் பெயர் போனது மதுரை. விலை உயர்ந்த உணவகங்களை காட்டிலும், நமக்கான விருப்ப சுவை கிடைப்பதும், அவை பர்ஸை பதம் பார்காததும் பலரை அங்கு அழைத்துச் செல்வதுண்டு. அதில் கடைக்காரர் பெயர் தெரிந்து என்ன செய்ய. போத்தீஸ்கடை, ஆத்தா கடை, ஐயப்பசாமி கடை என்று அந்த கடைகள் அடையாளப் படுத்தப்படுவதுண்டு. இரவு 7 மணிக்குப்பிறகு ஆரம்பமாகும் இக்கடைகள் நள்ளிரவு 2 மணிவரை கூட (திறந்திருப்பதுண்டு என்று சொல்வது பொருந்தாது, கதவில்லாக் கடைகள்) அடுப்பு எரிப்பதுண்டு. சென்றமர்ந்ததும் 4 இட்லி, பிறகு ஒரு தோசை அடுப்பில் இருந்து நேரடியாக நம் தட்டுக்கு மாற்றப்படும். கடைசியாக ஒரு முட்டை தோசையுடன் கை கழுவலாம். ‘14;50 குடுப்பா’. ‘ஒர்ருவா கம்மியா இருக்கேக்கா...’ ‘பரவாயில்லப்பா.. நாளபின்ன வந்தா குடு’. இருவரும் வியர்வையின் விலை தெரிந்தவர்கள், ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை.

சில குடியிருப்பு பகுதிகளில் காலை மட்டுமே விரிக்கப்பட்டிருக்கும் கடைகளில் ஒன்றுதான் இட்லிக்காரம்மாவுடையது. ஜீவாநகரில் இருந்தபோது, எங்கள் தெருவோரத்தில் இருந்த இட்லி கடையில் எனக்கு பள்ளி மதிய உணவிற்கு இட்லி வாங்கித் தருவது அம்மாவின் வழக்கமாயிருந்தது. வீட்டை ஒட்டியே என் உறவினரின் பிரபல ஹோட்டல் இருந்தும் தெருவோரக் கடையில் இட்லி வாங்குவதற்கான சில காரணங்கள், ஹோட்டலை விட இங்கு பெரிதாய் கிடைக்கும் இட்லி, வீட்டுச் சுவையிலேயே சாம்பார் சட்னி, சில நேரங்களில் இலவசமாய் கிடைக்கும் குழிப்பணியாரம். அதைவிட முக்கியம் கைராசி.

தினமும் அதிகாலையில் பெருக்கி, நீர் தெளித்து கோலமிட்டு அதன் மேல் அடுப்பு ஏற்றப்படும். இரண்டே அடுப்புதான். இட்லி, குழிப்பணியாரம் இரண்டே மெனு தான். தோசைக்கு காத்திருக்க வேண்டும், இட்லி பாத்திரம் இறக்கப்பட்டு தோசைக்கல் ஏற்றப்படும்வரை. என்னயிருந்தாலும் ஏழு மணிக்கு முன்பு வியாபாரம் ஆரம்பிப்பதில்லை. ஏழு மணி என் தம்பி தூங்கி எழும் நேரம். அவன் கை ராசிக்கையாம். அவன் கையால் வியாபாரம் ஆரம்பித்தால் சுபிச்சமாக இருக்கும் என்பது இட்லிக்காரம்மாவுடைய நம்பிக்கை. அப்பாவிற்கு அந்த நம்பிக்கையில் நம்பிக்கை இல்லை என்றாலும் இட்லிக்காரம்மாவுடைய நம்பிக்கைக்காக தம்பியை தினமும் அனுப்பிவைப்பார், போனி செய்ய. அவனும் அந்தம்மா கடையில் இருந்தே 10 பைசா எடுத்து கொடுத்து ஒரு குழிப்பணியாரம் வாங்கி வருவான். அவன் கையால் பணம் வாங்குவதற்கு முன் இட்லிக்காரம்மா பணத்தைத் தொட மாட்டார். அவசரம் என்றால் மட்டுமே, தாமாக பணத்தை தட்டில் போட்டு இட்லியை எடுத்துச் செல்ல வேண்டும். அவருக்கு நம்பிக்கை என் தம்பிக் கை மீது. நாங்கள் வீடு மாறிய சில நாட்களிலேயே அவரும் கடையை நிறுத்திவிட்டதாக அறியப்பெற்றேன். ராசிக்கை போன கவலையாயிருக்கும்.

டவுன்ஹால் ரோடு, மதுக்கடைகள் அதிகமாக இருக்கும் தெருவில் ஒருவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்கிறார். வண்டியை தள்ளலாம் என்றாலும் ஒரே இடத்தில் தான் வியாபாரம். வியாபாரம் இல்லாத நாட்களிலும் வண்டி அங்கேயே இடப்பட்டிருக்கும். சரக்கு தானியில் கொண்டுவரப்படலாம். ஆள் பார்க்க சுத்தமாக இருப்பார். நெற்றியில் எப்போதும் காணப்படும் ஒரு இன்ஞ் திருநீறு, வாடிக்கையாளரை வரவேற்கும் இன்முகம். அவருக்கு தன் வியாபார சரக்கு சுத்தமாக இருக்க வேண்டும். கடலையை கரண்டியில் தான் எடுப்பார், சரக்கில் கைபடுவதில்லை, யாரையும் கைவைக்க விடமாட்டார். சுத்தம் தான் என் முதலீடு என்பார். அதற்காகவே பலரும் அங்கு செல்வதுண்டு. ஃபுட் ஸேஃப்டி படித்த எனக்கு, சில குறைபாடுகள் கண்ணில் தெரியும். முக்கியமாக கடலை மடித்து கொடுக்கும் குமுதம், குங்குமம், ஆவி, தினமலர், மாலைமலர் போன்றவை வாசிக்கப்படும் சூழல், அதை நேரடியாக எடைக்கு வாங்கும் பழைய பொருள் தரகர். அது விற்கப்படும் மொத்தக் கடை. அங்கெல்லாம் நிறைந்திருக்கும் சுத்தமும் சுகாதாரமும். ஆனாலும் தன்னளவில் சுத்தமாக இருக்கமுனைபவரிடம் அவையெல்லாம் நினைவூட்டுவது அவரது நம்பிக்கையை தகர்ப்பதாக ஆகிவிடும். எனக்கு கடலை நினைவு வரும் போது சொந்த பாத்திரத்தில் வாங்கிவருவதன் காரணம் அதன் சுவை, என் விருப்ப சுவை.

மீனாட்சியை தருசிக்க வரும் கேரள ஆந்திர பக்தர்களை குறிவைத்து நடத்தப்படும் மார்கழி மாத மாசி வீதி கடைகளும் பிரசித்தி. அத்தகைய நடைகடை வியாபாரிகளில் பெரும்பாலானோர் ஐயப்ப பக்தர்களாக இருக்க பார்த்திருக்கிறேன். வியாபார நுண்ணரசியல். எழுகடல் தெருவில் ப்ளாஸ்டிக் பொருட்கள் மொத்தமாக வாங்கி, மதுரை முழுக்க தள்ளுவண்டியில் சில்லறைக்கு விற்பவர். சுக்குமல்லி காபி, போளி, போண்டா போன்றவற்றை சைக்கிள் உருட்டியே தினமும் விற்று தீர்ப்பவர் மற்றும் இளநீர், காய்கறி விற்கும் இன்னும் பலர்.

இவர்களுக்கெல்லாம் அன்றைய வியாபாரத்தின் லாபம் தான் அடுத்த நாளுக்கான சோறும், முதலீடும். நான்கைந்து நாட்கள் தொடர்ந்தார்போல் வியாபாரமோ அல்லது வியாபாரியோ படுத்துவிட்டால், அடுத்த நாள் சோற்றுக்கு கந்துவட்டியிடம் கையேந்தும் விளிம்புநிலை வியாபாரிகள் இவர்கள்.

மணிகளில் ஆயிரங்கள் பார்க்கும் தீபாவளி திடீர் கடைகளையும், பாலியல் தொழிலாளர்களையும் விளிம்புநிலை வியாபாரிகள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. நான் இவர்களை வீம்புநிலை வியாபாரிகள் எனச் சொல்லுவேன்.

நன்றி!!!