Oct 12, 2011

கத்தார் - பறந்த எண்ணம்

Qatar-Fastest growing region in middle east என்று குவைத்தில் என் முன்னாள் சக பணியாள் ஒரு மலையாளி சொன்னதுமே அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்துவிடும் எண்ணம் இல்லாத மூளையின் ஒரு மூலையில் சம்மணமிட்டுக்கொண்டது. அடுத்த சில மாதங்களில் தமிழ்பிரியன் கத்தாரைப் பற்றிச் சொன்னதும் எண்ணம் உருமாறி விமானத்தில் பறந்தது.

தோஹா சர்வதேச விமான நிலையம்.
விமானத்திலிருந்து இறங்கி நான் ஏறிய பேருந்து, விமானநிலையம் வந்து சேர 2 கிலோமீட்டராவது உருண்டு சென்றிருக்கும். புதிதாக கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய நிலையம். பரந்த இடத்தில் பரவலாக கொட்டாவி விட்டபடி அமர்ந்திருந்த குண்டு குடிபுகு அதிகாரி'னி என்னிடம்;
'எங்கிருந்து வருகிறாய்?'
'மதுரை' 
'ம்..?' 
'இல்லை.. சென்னை'
'டங்ங்ங்ங்' நெற்றிப்பொட்டில் ஸ்டாம்ப் அடிப்பது போன்ற உணர்வு. பாஸ்போர்டை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தேன். கான்வே பெல்டை ஒரு நேபாளி நாக்கால் நக்காதது தான் குறை, தேய் தேய் என் தேய்த்துக் கொண்டிருந்தான். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் நான் இளித்த பல் தெரிந்தது.படு சுத்தம். தாமதிக்காமல் லக்கேஜ் நகர்ந்து வந்து சேர்ந்தது. வெளியே கம்பெனி பெயரை கையில் ஏந்தி காத்திருந்த சிங்களவனுடன் அடுத்த பயணம் தொடங்கியது.

'ஆ' வென்றிருந்த சாலை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும் ஆனால், மிகவும் உயரமில்லா பெரும்பாலும் பழைய  கட்டிடங்கள், அடிக்கடி நிறுத்திப்பார்க்கும் ட்ராஃபிக் சிக்னல், நகரத்தின் நடுநடுவே மிகப்பரவலான வெற்றிடமும் அதற்கடுத்து வரும் மாலின் சன நெரிசலும் ஏதோ இந்த நகரம் திட்டமிடாமல் தானாக அமைத்துக் கொண்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது. ஒன்றை சொல்லியே ஆகவேண்டும், கத்தாரில் நான் சென்ற இடங்கலெல்லாம் ரவுண்டானாக்களால் பின்னப்பட்டிருக்கிறது. நகரின் அதிமுக்கிய சாலைகளின் நெரிசல் ரவுண்டானாக்களால் கட்டுப்படுத்தப்படுவதும் சில ரவுண்டானாக்களில் வைக்கப்பட்டிருக்கும் ட்ராஃபிக் சிக்னலால் நெரிசல் அதிகரிப்பதை காணும் போதும் எரிச்சல் அதிகமாகும். இங்கு குறிப்பிட்டளவே பாலங்களை காணமுடிந்தது. நகருக்குள் இரண்டோ மூன்றோ பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. தோஹாவின் உள்கட்டுமானம் படு மோசமாயிருந்தது.

கத்தார்-
1.6 மில்லியன் மக்கள் தொகைகொண்ட வளைகுடா நாடு. 19ம் நூற்றாண்டின் மத்தியலிருந்து அல்-தானி பரம்பரையால் ஆட்சி செய்யப்படுகிறது. இப்போது ஷேக் ஹாமத் பின் கலிஃபா அல் தானி கத்தாரின் மன்னராக இருக்கிறார். முக்கிய அரசபதவிகளில் அல்-தானி குடும்பத்தினரே அமர்த்தப்பட்டுள்ளனர். இஸ்லாமிய தண்டனைச் சட்டம் அமலில் உள்ளது என்று சொல்லிக் கொண்டாலும் அமேரிக்க படையினரோடு ஒப்பந்தம் செய்துகொண்டு இஸ்லாமிய ஆட்சி செய்வதாவது. பாரம்பரிய உடை என்று ஒன்று இருந்தாலும் உடைக்கட்டுப்பாடு இல்லை. குட்டை பாவாடையுடனான இருகிய உடையும், குதி நடையும் இங்கே சாதாரணம். அதே நேரம் பர்தா விற்பனையும் அமோகமாகயிருப்பது வளைகுடா நாடுகளுக்கேயான அழகிய முரண்.



2022ல் உலகக் கோப்பை நடத்த கத்தார் தேர்வான பிறகு மளமளவென உள்வேலைகள் நடக்க ஆரம்பித்தது. மேலை நாடுகளுக்கு நாங்கள் சற்றும் சலைத்தவர்களல்ல என்று போட்டிபோட நகர் கட்டமைக்கப்படுகிறது. நகரின் மய்யத்தில் இருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அங்கு மிகப்பிரமாண்ட கட்டுமானப்பணி நடைபெறுகிறது. ஒவ்வொரு முறை அந்த பகுதியை கடக்கும் போதும் அங்கு உயர்ந்து நிற்கும் கட்டுமான இயந்திரங்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்த மறப்பதில்லை. நகருக்கு சற்றே வெளியே 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு மால் தயாராகிறது. இது சிறு வியாபாரிகளுக்காக இருக்கலாம். தவிர, புதிய பாலங்கள், நகரம், விமான நிலையம் முக்கியமாக மைதானங்கள் அனைத்திற்குமான கட்டுமானப்பணிகளின் வேகத்தை பார்க்கையின் 2022க்கு இன்னும் 22 மாதங்களே மீதமிருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

வில்லாஜியோ மால் - வானம் தொடும் தூரம்

இவையெல்லாவற்றையும் விட, உலகமயமாக்கல் பந்தயத்தில் ஐக்கிய அமீரகத்தை முந்திச் செல்ல இங்கும் மதுபான விடுதிகள் திறந்துவிடப் போகிறார்களாம். முதற்கட்டமாக 16 விடுதிகளுக்கு அனுமதியளித்துவிட்டதாகவும் செவிவழிச் செய்தி. முன்னதாகவே நட்சத்திர விடுதிகளில் மட்டும் மதுவிற்பனை அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாதையில் பயணிப்போம்.
<<<<<<<<>>>>>>>>>
அல்குர்ஆன்; நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? - மாயிதா :91

Sep 4, 2011

தமிழ் தாய்க்கு ஒரு கடிதம்

இன்று ஆசிரியர் தினமாம். விடுமுறையில் வீட்டில் இருக்கும் அக்கா பையன் சொல்கிறான். ஆசிரியர் என்றதும் சட்டென என் நினைவில் வரும் என் தமிழ் ஆசிரியருக்கு வேறென்ன செயதுவிட முடியும் இந்த மீள்பதிவை தவிர.

Jul 16, 2011

மேரிக்குண்டொரு குஞ்ஞாடு

மிகவும் பிரமாதம் என்றெல்லாம் சொல்லவில்லை. ஒற்றைவரிக் கதை என்றாலும், நேர்த்தியாக பின்னப்பட்ட திரைக்கதை. பொதுவாகவே திலீபுக்கு பெரும்பாலான சினிமாக்கள் இவ்வாறாக அமைந்துவிடுகிறது. 'எண்ட ஜோஸட்டன்' என்று நெஞ்சு நிமிர்த்தி நடக்கையில் திலீப் நிற்கிறார். எடிஸனின் விதிப்படி அங்கு காதலி வந்ததும் அவருடன் பாடலும் வந்திருக்க வேண்டும், நான் கவனிக்கவில்லை. காதலி அவ்வளவு முக்கியமில்லை என்றாலும் பெயர் பாவனா. மொத்தமாக இரண்டு நாட்கள் தான் சூட்டிங் வந்திருப்பார். முதல் நாள் நடிக்கவும், இரண்டாவது நாள் குறை கலையவும், இரண்டாவது நாளை உபயோகிக்கவில்லை போலும்.


திரையில் கதை ஏன் இவ்வாறு தொடங்க வேண்டும் என நினைத்திருக்கையில், அங்குதான் திரையை இறக்கி சுபம் இடவும் உத்தி வகுக்கப்படுவது பின்னால் தெரியவருகிறது.


மஞ்சப்பையை கையில் சுற்றி பேருந்திலிருந்து இறங்கும் போது பிஜூ மேனன், சாதாரண ஒரு வில்லன் அறிமுகத்தை நினைவு படுத்தினாலும் பிறகு உடல் மொழியால் அசத்துகிறார். ஆழக் குழிதோண்டி அதிலே வாழைக்கன்று நடுவதும், 'இங்க ஒரு மாமரம் இருந்துச்சே என்னாச்சு' என்று கேட்பதும் வீணாகவில்லை. வீணான காட்சிகளை விட்டு வெளியே வர நமது சினிமாக்களை எதிர்பார்க்கிறேன்.


ஊரில் ஒரு இழவு விழுந்தால் உள்ளூர மட்டுமின்றி சந்தோஷப்படும் சலீம் குமாரின் நூற்றுக்கும் மேலான சினிமாக்களின் முதிர்ச்சி தெரிகிறது. (ரொம்ப மெலிந்து இருக்கிறாரே, ஏன்?)


'என் அப்பா சினிமாக்களில் காமெடி ரோல் செய்தாலும் நிஜத்தில் மிகவும் கண்டிப்பானவர்' என்று ஜெகதி ஸ்ரீகுமாருடைய மகன் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் சொல்லிக்கொண்டிருந்தார். அது ஏனோ இந்த சினிமாவில் ஜெகதியை பார்க்கும் போதல்லாம் நினைவில் வந்தது. ஒரு காமெடிக் கதையில் ஜெகதி காமெடியன் அல்ல.


பொதுவாக ஒரு மதத்தை கதைக்கலனாகக் கொண்டு எடுக்கப்படும் (காமெடியோ, க்ரைமோ) சினிமாக்களில் யாரையோ திருப்திபடுத்த சாமான்ய பார்வையாளனின் முகம் சுளிக்க வைப்பது எப்போதும் எரிச்சல் தரும் ஒன்று. மேரிக்குண்டொரு குஞ்ஞாடு, தலைப்பும் கதையும் கிருத்துவர்களை சுற்றி நடத்தப்பட்டாலும், பார்வையாளர்கள் மனம் நோகாத கதையமைப்பு.


இவையெல்லாம் தான் தமிழுக்குமாக தொடர்ந்து வெற்றிப்படங்களை ஷாஃபியால் தர முடிகிறது.


இதையும் சொல்லியாக வேண்டும்; தொன்று தொட்ட வழக்கப்படி, ஊருக்கு வரும் சரக்கு வாகன ஓட்டி ட்விஸ்ட் கொண்டு வருகிறார். பணம் வைத்திருப்பவர்கள் இங்கும் வில்லன்களாவே இருக்கிறார்கள்.
  • மனதில் தொன்றியதை அப்படியே எழுத்தில் தட்டி வெளியிடுகிறேன். எடிட் செய்யவென்று கிடப்பில் போட்ட பல பதிவுகள் காலாவதியாகிவிட்டது.
  • நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு பதிவு, அதுவும் சினிமாவைப் பற்றியதாகிப்போனதில் சிறு வருத்தமே. #சேர்க்கை சரியில்லை.