Jan 25, 2009

Bush Failures and Successes - போ! மறுமையில் சந்திப்போம்

எட்டு ஆண்டுகள்! எத்தனை மனிதர்கள்.இந்த மண்ணில் பிறந்து அதன் அழுக்கைக் கூட ரசித்து வாழப் பிறந்தவர்களை உன் ஆயுதங்களால் அழித்தாய். அதற்காக உன்னை ஆண்டவனே அனுப்பியதாகவும் அறிவித்தாய்!உன் அத்தனைத் திமிரையும் ஒரு செருப்பு அடக்கியதே! அந்த நேரம் கூட செத்து விடுவோம் என்று நீ பதை பதைத்தாயே! ஆனால்... எத்தனை பச்சிளம் குழந்தைகள் உன் குண்டுகளுக்கு இரையாகி துடிதுடித்து இறந்தது. எத்தனை குழந்தைகள் தன் சொந்தங்களைப் பிரிந்து அனாதையாகிவிட்டது. விதவையாகிய பெண்கள் எத்தனை? துணையை இழந்த ஆண்கள் எத்தனை? தள்ளதாத வயதில் வீல் செயரில் தள்ளிச் செல்லக்கூட ஒரு உறவினர் இல்லாத எத்தனையோ முதியவர்கள்? பிள்ளைக்குப் பெற்றோர் இல்லை! பெற்றோருக்குப் பிள்ளைகள் இல்லை! ஒரு உறவுக்கு மறு உறவு இல்லை என நீ துண்டாடியது எத்தனை பேர்?சொந்தங்கள் எத்தனை சொத்துக்கள் எத்தனை என்று அத்தனையும் கணக்கிட்டுப் பார்த்ததில் ஒரு சிறிய பங்கு உன் செல்ல மகளுக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாயா?இத்தனை நாள் செய்ததினால் ஏற்பட்ட விரக்தியில் மனமுளைச்சலாகி பகலிலும் கனவிலும் உன்னை நீயே கொல்லத்தான் போகின்றாய்.நேற்றுவரை உன்னை நேசித்தவர்கள் நாளை எப்படி பேசப்போகின்றார்கள் ஏசப்போகின்றார்கள் என்றும் பார்க்கத்தான் போகின்றாய்.உலகம் முழுக்க உனக்கு கிடைத்ததை மரியாதை என்று மாற்று வார்த்தையாகவல்லவா பார்த்து வந்தாய். கொன்றால் கோடி முறை கொன்று விடுவார்கள் என்று பயந்ததனாலல்லவா இரும்புக் கோட்டையை கட்டி நடமாடினாய்.ஊடகம் ஒரு ஆயுதம் என்று கேட்டிருக்கின்றோம். அது மெய்யா பொய்யா என்பதுவல்ல. ஆனால் அந்த ஊடகத்துறையிலிருந்த ஒருவன் தன் கால் செருப்பையே ஆயுதமாக்கி உன்னை அனுப்பியனானல்லவா, அதுவே பெரிய ஆயுதம்.இதற்கு மேலுமா வேண்டும் உனக்கு மரியாதை? வேட்டி மடித்து நடப்பவர்கள் தெருநாயைப் பார்க்கையில் மடிப்பை அவிழ்த்து விடுவார்கள். அது அது நாயை மரியாதை செய்வதற்காக அல்ல! கடித்து குதறிவிடும் என்ற பயத்தினால்தான். அதைப் போன்று உன் காட்டேறித் தனம் பாயாமல் இருப்பதற்காக தன்னை பாதுகாத்துக் கொண்ட நிகழ்வைத்தான் நீ மரியாதை என்று கருதினாய். எம்மைப் பொறுத்தமட்டில் இரண்டும் ஒன்றே!உன் நாக்கில் உமிழ் நீர் இருந்ததோ இல்லையோ ஆனால் ஒவ்வொரு நொடியிலும் தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற வார்த்தைகள்தான் இருந்தது. உலகில் யாரும் பயங்கரவாதம் செய்யக் கூடாது என்று நீ ஓலமிட்டபோதெல்லாம் அதில் நிறைந்திருந்து மறைந்திருந்த வார்த்தைகள் இன்று புரிகின்றது.பயங்கரவாதியாக நான் ஒருவனிருக்க உலகில் வேறு பயங்கரவாதிகள் இருக்கக் கூடாது என்றுதானே நீ ஓலமிட்டாய். அதிலும் கூட பல பயங்கரவாதிகள் இருப்பதாக நீ காட்டியதும் பெரும் பொய்யல்லவா?உயிரியல் ஆயுதம் என்று கூறி நீ பறித்த உயிர்கள்தான் எத்தனை? ஆனால் பின்னர் ஒரு மயிர் அளவு கூட உன்னால் அதை காட்ட முடியாததும் நீ பொய்யர் சக்கரவர்த்தி என்ற மணி மகுடத்தை சூட்டி உன்னை நீ இழிவு படுத்தியதும் உயிருள்ள ஒரு மனிதனால் சுமக்க முடியாதல்லவா? அதனால்தான் வெட்கம் கெட்டவனாகிய நீ சுமந்து திரிந்தாயோ?பால் குடிக்கும் பாலகர்கள் பரிதவிக்கும் மாதர்கள் துணையிழந்த கணவர்கள் துயரம் தின்னும் பெரியவர்கள் என்ற பெரும் பட்டியல்கள் உன்மீது கேட்டுவைத்த சாபங்கள் உன்னை சும்மா விடாது. இன்று சொல்லப்படுவதைப்போல் ஒரு செருப்பால் முடிந்துவிடாது.போர் போர் போர் என்று நீ செய்ததெல்லாம் அமைதிக்காக என்று காரணம் கூறிய கொடுங்கோலனே. உன் அகராதியில் அமைதிக்குப் போர் என்பது கன்னித்துவத்திற்கு கற்பழிப்பு என்ற வாதத்திற்கும் எள்ளளவும் வித்தியசம் தெரியவில்லையே!அதனால்தான் அஃப்கானிலும் இராக்கிலும் இன்ன பிற அப்பாவி நாடுகளிலும் சென்று உன் ஆட்கொல்லி உருவங்கள் கொலை நடத்தியதுடன் கற்பழிப்புகளும் நடத்தியதா? என்ன கிடைத்தது உனக்கு? எண்ணை கிடைத்தது! அப்படித்தானே.நீ அமைதியை நாடியிருந்தால் எத்தனையோ நாடுகள் உண்ண உணவின்றி உடுத்த உடையின்றி உறங்க ஒர் உறவிடமின்றி தவிக்கின்றதே அதில் ஏன் கவனம் செலுத்தவில்லை? ஒரு வேளை சோறு போடுவதால் உன் ஆயுதம் விற்றுத் தீர்ந்துவிடாது என்பது தெரியாமலிருக்க நீ மடையன் ஒன்றும் அல்ல! அப்படித்தானே?அமைதியை விரும்பும் நீ முதலில் ஆயுதத்தை தவிர். ஆயுதம் ஏந்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்கு! அதையே உலகமயக் கொள்கையாக்கு! இதைச் செய்தால் நீ அமைதியை விரும்புபவன் எனலாம். ஆனால் நீயோ அண்டை நாடுகளில் சிண்டு முடிந்துவிட்டு அங்கும் இங்குமாய் ஆயுதம் விற்று அப்பாவிகளின் இரத்தத்தையல்லவா உணவாகப் பருகுகின்றாய்.உனக்கு அடிமையாக வாழ்கின்ற எல்லா நாடுகளிலும் அறிவாளிகள் எனப்படுவோர் ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்களும் உன் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி ஆயுதம் வாங்கிக் குவிப்பது உன் வெற்றி என்று கருதுகின்றாய். அரசன் அன்று கொன்றால் தெய்வம் நின்று கொல்லும்!அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபர் என்ற பெயரில் இன்னும் சில மணித்துளிகள் கூட அதன் சுகம் அனுபவித்துச் செல்லும் உன்னால் ஏற்பட்ட சோகம் ஏராளம். நீ மட்டும் தான் இப்படி எனவில்லை. உன் நாட்டின் வெளியுறவுக் கொள்கை இது. அதில் நீ கூடுதல் கவனம் செலுத்தி கூடுதல் இரத்தம் குடித்தாய் அவ்வளவே!இனிவரும் அதிபர் பாரபட்சமில்லாமல் பலருக்கும் பணியாற்றியதைக் கேட்டிருக்கின்றறோம். அவன் இரத்தத்தில் அது ஊறிக் கிடந்தால் இனியும் அது ஊற இருந்தால் ஒரு சில காலங்கள் உலகம் சற்று அமைதியாகும்.உன்னைப் போன்றல்ல இறைவன். அவன் நாடியதைச் செய்வான். செய்ததன் காரணங்கள் மறுமையில் கிடைக்கும். அதில் எந்த பொய்யும் இருக்காது. அந்த நாளில் நீயும் உன் அப்பன் புஷ்ஷும் அள்ளி வீசிய குண்டுகள் உன்னைத் திருப்பித் தாக்கும். அந்த மறுமை நிச்சயம். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் வழி இல்லாமல் இல்லை!ஆம்! உன் இதயம் தூய்மையுற்றால், உன் பாவங்களுக்கு பரிகாரமாய் இறைவனிடம் இன்றே நீ கேட்டுவிட்டால் கருணையுள்ள இறைவன் உன்னை மன்னிக்கக்கூடும்
நன்றி; எங்கோ வாசித்தது

Jan 17, 2009

பச்சைத் தேநீர்

"ஒரு டீ குடுங்க" என கடைக்காரரிடம் கேட்டு அவர் இரண்டரை இஞ்ச் குவளையில் நீட்டும் தேனீரை சுவைத்துக் குடிக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் கிரீன் டீ என அழைக்கப்படும் பச்சைத் தேநீர் பற்றி ? நிமிடத்துக்கு பத்து என விளம்பரங்களில் தலைகாட்டும் தேநீர்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுக் குழம்பிப் போயிருக்கும் நம்மில் பலருக்கும் தெரியாமலே போய்விட்ட ஒன்று தான் இந்த பச்சைத் தேநீர். இந்தத் தேனீரில் மகத்துவமே இருக்கிறது என ஆராய்ச்சிகள் வியந்து பேசுகின்றன என்பது தான் இந்தத் தேனீரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என நானும் நினைப்பதற்குக் காரணம். இந்தத் தேனீரை அருந்தி வந்தால் உடல் பருமனாவதிலிருந்து தப்பலாம் எனவும், இந்த கிரீன் டீ உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை வலிமைப்படுத்தும் எனவும் யூகேவின் பர்மிங்காம் பல்கலைக்கழகம் பச்சைத் தேநீர் பற்றி வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவிலிருந்தே துவங்குகிறேன். சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேநீர் அருந்தத் துவங்கி விட்ட சீனாவில் தான் இந்த பச்சைத் தேனீரும் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதே பெரும்பாலானோரால் ஒத்துக் கொள்ளப்பட்ட பச்சைத் தேநீர் வரலாறு. எனினும் சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தியா வில் இந்த பச்சைத் தேநீர் மிகப்பழங்காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதே பரவலான நம்பிக்கை. எதற்குப் பயன்படுத்தினார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யமானது. உடலில் காயம் ஏதேனும் ஏற்பட்டால் குருதி வழிதலைக் கட்டுப்படுத்தவும், காயத்தை ஆற்றவும், உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்தவும், செரிமானத்தன்மையை அதிகப்படுத்தவும் மற்றும் குருதி சர்க்கரை அளவை மட்டுப்படுத்தவும் இந்த பச்சைத் தேநீர் பயன்படுத்தப்பட்டு வந்ததாம். "தி கிஸா யோஜோக்கி" ( பச்சைத் தேநீர் ) எனும் நூல் தான் பச்சைத் தேனீருக்கு இருக்கும் மகிமையை வியக்க வியக்க விவரிக்கும் முதல் நூல். இந்த நூலை எழுதியவர் ஒரு ஜென் துறவி. இவர் பச்சைத் தேனீரைக் குறித்து இந்த நூல் முழுக்க எழுதியிருப்பதைப் பார்த்தால் இந்த பச்சைத் தேநீர் ஒரு சர்வரோக நிவாரிணி என்பது போன்ற பிரமிப்பு உருவாகிறது. உடலின் மிக முக்கியமான ஐந்து உறுப்புகளுக்கு இந்த பச்சைத் தேநீர் எப்படியெல்லாம் பயன்படுகிறது என ஒரு கைதேர்ந்த மருத்துவரைப் போல இவர் விரிவாக விவரித்துள்ளார். குறிப்பாக இதயத்துக்கு பச்சைத் தேநீர் ஒரு வரப்பிரசாதமாம். இந்த நூல் வெளியான ஆண்டு 1191. பச்சைத் தேனீரைக் குறித்த மருத்துவப் பயன்களில் பல நிரூபிக்கப்பட்டவை, சில நிரூபிக்கப்படாத நம்பிக்கைகள். அந்த நம்பிக்கைகள் மறுக்கப்படவும் இல்லை என்பதே நம்பிக்கையுடன் பச்சைத் தேனீரை நோக்கி நம்மை அணுக வைக்கிறது. அல்சீமர், பார்கின்ஸன் என மருத்துவ உலகம் அச்சத்துடன் அணுகும் அதிபயங்கர நோய்கள் வராமல் தடுக்கும் வலிமை பச்சைத் தேனீருக்கு இருக்கிறதாம். பற்களைப் பாதுகாக்கிறது என்பது முதல் புற்று நோய் வராமல் தடுப்பது, மாரடைப்பு வராமல் தடுப்பது என உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிராகவும் பச்சைத் தேநீர் நிமிர்ந்து நிற்கிறது என ஆங்காங்கே பச்சைத் தேனீரைக் குறித்துக் கிடைக்கும் தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன. நியூயார்க் பத்திரிகையாளர் ஜாய் பானர், பச்சைத் தேநீர் மூளையின் வினையூக்கியாகச் செயல்படுகிறது, மூளையை சுறுசுறுப்புடனும் வலிமையுடனும் வைத்திருக்க உதவுகிறது என குறிப்பிடுகிறார். தினமும் ஐந்து கோப்பை பச்சைத் தேநீர் அருந்தி வந்தால் உடலிலிருந்து தேவையற்ற கொழுப்பு கரையும் என்கின்றனர் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள். உடற்பயிற்சிக் கூடத்தில் அரை மணி நேரம் ஓடுவதும் ஐந்து கோப்பை தேநீர் அருந்துவதும் ஒரே அளவு கலோரிகளைக் கரைக்கும் என்பது அவர்களது ஆராய்ச்சி முடிவு. ஆறு வாரங்கள் நீங்கள் காபியை விரட்டி விட்டு பச்சைத் தேனீரை அருந்தி வாருங்கள் உங்கள் உடல் எடை நான்கு கிலோ குறையும் என வியக்க வைக்கிறார் மருத்துவர் நிக்கோலர் பெரிகோன். அமெரிக்க புற்று நோய் ஆராய்ச்சிக் கூடம் வெளியிட்ட அறிக்கை ஒன்று பச்சைத் தேனீருக்கு புற்று நோயைத் தடுக்கும் வலிமை உண்டு என மருத்துவர் ஹான் சியோ மூலமாக மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதேபோல அமெரிக்க மருத்துவக் கழக பத்திரிகை 1996 செப்டம்பர் 13 இதழில் பச்சைத் தேநீர் இதயம் சார்ந்த நோய்களைத் தடுக்கும் வலிமை கொண்டது என ஆய்வு முடிவு வெளியிட்டிருந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் அதிகப்படுத்துவதிலும், உயர் குருதி அழுத்தத்தைக் குறைப்பதிலும் தலை சிறந்தது பச்சைத் தேநீர் என்கின்றன சீன ஆய்வுகள். எல்லாவற்றுக்கும் மேலாக ஹைச்.ஐ.வி எனப்படும் எயிட்ஸ் கிருமி உடலின் டி-அணுக்களைப் பாதிக்காமல் பச்சைத் தேநீர் தடுக்கும் எனும் நிரூபிக்கப்படாத நம்பிக்கையும் மருத்துவ உலகில் நிலவுகிறது. உடல் சார்ந்த இத்தகைய பயன்களோடு மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்கும் வலிமை கூட பச்சைத் தேனீருக்கு உண்டு என ஒரு ஆராய்ச்சி வியக்க வைக்கிறது. சற்றே மருத்துவ வாசனையில் சொன்னால், பச்சைத் தேனீரில் இருக்கும் எப்பிகலோகாட்ஸின் காலேட் ( EGCG ) எனப்படும் நச்சுத் தன்மையை எதிர்க்கும் பொருள் தான் பச்சைத் தேனீரை மருத்துவக் குணம் வாய்ந்த ஒன்றாக மாற்றுகிறது எனலாம். இந்தப் பொருள் தான் புற்று நோய் வர விடாமல் தடுப்பதுடன், உடலின் கொழுப்பைக் கரைத்தும், குருதிக் குழாய்களின் அடைப்பைக் கரைத்தும் உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவுகிறது. எழுபத்தைந்து விழுக்காடு மக்களும் புகைக்கு அடிமையாகி இருக்கும் ஜப்பானில் இதய நோயாளிகள் குறைவாகவே இருக்கிறார்களே !!! ஏன் ? ஏன் ? அது ஏன் ?? எனும் மருத்துவ வினாவுக்குப் பின்னால் புன்னகைத்துக் கொண்டிருப்பது இந்த பச்சைத் தேநீர் தான். கெமீலியா சைனாஸிஸ் என தாவரவியல் பெயரிட்டழைக்கும் இந்த தேயிலை மரத்திலிருந்து வேறு சில தேநீர் வகைகள் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் தயாரிப்பு முறையினால் இந்த பச்சைத் தேநீர் அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாகி விடுகிறது. சரி இந்தப் பச்சைத் தேனீரில் சிக்கல்களே இல்லையா என நீங்கள் கேட்பது புரிகிறது. உண்டு ! ஒரே ஒரு சிக்கல். பச்சைத் தேனீரிலும் காபியில் இருப்பது போன்ற காஃபைன் எனும் நச்சுத் தன்மை உண்டு. ஆனால் காபியுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்பதே சற்று நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கும் செய்தி. ஒரு நாளைக்கு எத்தனை கோப்பை பச்சைத் தேநீர் அருந்தலாம் என்பதற்கும் பல்வேறு ஆய்வுகளும் பல்வேறு விதமான பதில்களைச் சொல்கின்றன. எல்லா ஆய்வுகளையும் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால், தினமும் நான்கு அல்லது ஐந்து கோப்பை பச்சைத் தேநீர் அருந்துவது சாலச் சிறந்தது எனும் முடிவுக்கு வரமுடிகிறது. இதயம், நுரையீரல், குருதி, எலும்புகள் என உடலின் எல்லா பாகங்களுக்கும் நன்மையை விளைவித்து இந்தப் பச்சைத் தேநீர் தலை நிமிர்ந்து…. மன்னிக்கவும் இலை நிமிர்ந்து நிற்கிறது !