அண்மையில் நமது மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ள 'தாய் மொழியுடன் சேர்த்து, ஹிந்தியும் கற்க வேண்டும்' என்ற கருத்து இங்கு மீண்டும் சில அசைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
எந்த தமிழனும் தமிழை தாழ்த்தி பேசுபவனில்லை. தமிழை தாழ்த்துபவன் தமிழனாக இருக்க முடியாது. தாய் மொழியை தாழ்த்தும் எவனும் பேச தகுதியற்றவன். எந்த மொழியும் பேச தகுதியற்றவன். தாய் பேசும் மொழிதான் தாய் மொழி என்பதில்லை. தாய் நாட்டு மொழிதான் தாய் மொழி என்பேன். இந்தியா பொன்ற பல மொழிகளை தன்னகத்தே கொண்டுள்ள நாடுகளில், மாநில எல்லைகள் மொழியால் பகுக்கப்பட்டிருப்பதால், அந்தந்த மாநிலங்களில் பேச்சுவழக்கில் உள்ள மொழியே அவரவர் தாய் மொழி எனலாம். தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களாகிய நமக்கு தாய் மொழி ‘தமிழ்’.
பணிநிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலா போன்ற இதர காரணங்களுக்காகவோ தன் தாய் மாநிலத்திற்கு வெளியே செல்லும், எல்லையில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டைத்தாண்டி செல்லும் ஒருவர் தாய் மொழி தவிர வேறு மொழி தெரியாத போது தான் அனுபவிக்கும் சிரமங்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 1997ல் மும்பை சென்றபோது நான் அனுபவித்திருக்கிறேன். நம் அண்டை மாநிலமான கேரளா செல்லும் போது மலையாளமும், அதேபோல ஆந்திரா, கர்நாடகா செல்லும் போது தெலுகும், கனடமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சற்று சிரமமே. ஆந்திராவை தாண்டி சென்று விட்டால், ஹிந்தி பொதுமொழியாக இருக்கிறது. ஹிந்தி என்ற ஒரு மொழி பேச தெரிந்தால் பெரும்பாலான வட மாநிலங்களில் சிரமமின்றி தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஹிந்தி என்ற, இந்தியாவில் பெரும்பாலானோர் பேச்சு மொழியாக கொண்டிருக்கும் மொழியை வெளி மாநிலங்களோடு தொடர்பு இருக்கும் அனைவரும் பேச கற்றுகொள்ளுதல், அவரவர் வாழ்வில் நன்மைபயக்கும். நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் பொது மொழியான ஆங்கிலத்தையே கற்கலாமே, ஹிந்தி எதற்கு? என்ற வாதமும் கூடவே வருகிறது. ஆங்கிலம் கற்பதற்கு யார் தடை விதித்தார்கள்? தாராளமாக கற்கலாம். சர்வதேச தொடர்பில் தொழில் செய்பவர்களுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது போலவே, நம்தேசம் முழுக்க தொழில் தொடர்பு செய்பவர்களுக்கு சாமானியர்களோடு பேச ஹிந்தி அவசியமாகிறது. ஹிந்தி பேசும் ஒருவனுக்கு தமிழ் நாட்டில் தொழில் தொடர்பு வேண்டும் என்றால், தமிழ் பேச கற்றுக்கொள்கிறான். தமிழ் திரைப்படங்களில் வருவது போல, நம்மிள் தங்கம் தரான், நிம்மிள் பொண்ணு தரான் என்பது போலல்லாமல் அழகாகவே தமிழ் பேசுவதை பார்க்கிறோம் / கேட்கிறோம். ஆனால், வட மாநிலங்களுக்குச் சென்று ஹிந்தி பேச கற்றுக்கொள்ளும் நம்மவர்களின் ஹிந்தி ஆயகா, ஜாயகா என்பதாகவே இருக்கிறது. ஆள் பாதி ஆடை பாதி என்பது போலவே நாம் உதிர்க்கும் சொற்களும் நம்மில் பாதி, நமக்கு மரியாதையை பெற்றுதருகிறது என்பதை மறுக்க முடியாது. இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.
சர்வதேச அளவில் அதிகமாக பேசப்படும் மொழி வரிசையில ஹிந்தி இரண்டாவது இடத்தில் வருகிறது என்பதையும், அதற்கடுத்த நிலையிலேயே ஆங்கிலம் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். துபாய் அரபிகளில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசுபவர்களாக இருக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர், பெங்காளியர், நேபாளியர் மற்றும் ஆப்கானியருக்கான பொது மொழியாக ஹிந்தி இருக்கிறது. இவர்களுடைய தாய் மொழிக்கும் ஹிந்தி சொற்களுக்கும் சிறிதளவே மாற்றம் இருப்பதால், இவர்களால் எளிதில் பேச கற்றுக்கொள்ள முடிகிறது. தேவையிருக்கும் அனைவரும் கற்றுக்கொண்டு பேசுகின்றனர். ஆனால் தமிழர்களாகிய நம் பாடுதான் திண்டாட்டம், புதிய மொழி ஒன்றினை கற்றுக்கொள்ளும் முன் (சில தவறான வார்த்தை உச்சரிப்பால்) நரக வேதனையுடன் அவமானப்பட வேண்டியிருக்கிறது. ஹிந்தி மட்டும் அல்ல, நம் காதால் கேட்டிராத மலையாளம், தெலுகு மற்றும் கனடம் கற்ற முயலும் போதும் இதே நிலைதான்.
தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவரும் தமிழ் பேசுவது மகிழ்ச்சியளிப்பது போலவே, சிங்கப்பூர், மலேசியா பொன்ற நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாக இருப்பதால், அங்குவரும் மற்ற இந்திய மாநிலத்தவர் / நாட்டவர் தமிழ் கற்றுக்கொண்டு பேச முயற்சிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு ஒரு கழுகு பார்வை.
1937, தமிழ்நாட்டில் (அப்போது சில ஆந்திர பகுதிகளையும் உள்ளடக்கியது) ஆங்கிலேயர் ஆட்சியில் ராஜாஜி தலைமையிலான அரசு 'பள்ளிகளில் கட்டாய ஹிந்தி' என்ற சட்டம் கொண்டுவருகிறது. தீவிர தமிழ் ஆர்வலர்கள் சிலர் மற்றும் ராஜாஜி எதிர்பாளர்கள் சிலரும் சேர்ந்து அத்திட்டத்தை எதிர்கின்றனர். கைது நடவடிக்கையின் போது சிலர் உயிர் நீத்தனர் என்றும் வரலாறு சொல்கிறது. 1940, அதே ராஜாஜியால் இச்சட்டம் திரும்ப பெறப்படுகின்றது. 1965, இந்திய அலுவல் மொழியான ஹிந்தி 'ஒரே மூச்சாக, அரபிக்கடலில் தூக்கி எறியப்பட வேண்டும்' என்ற கொள்கையோடு முதலாம் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு திருச்சியில் நடத்தப்படுகிறது. முன்னதாக குடியரசு பத்திரிக்கை, 'ஹிந்தி, ஆரிய மொழி என்பதாலும், சமஸ்கிருதம் தெரிந்த ஒரு சாதியினரின் மத கோட்பாடுகளை முன்னிருத்தும் முயற்சியே ஹிந்தி திணிப்பு' என்றும், மேலும் 'ஹிந்தியை ஏற்றுக்கொண்டால், ஹிந்தி பேசும் வட நாட்டவரைவிட நாம் தாழ்ந்த நிலையிலேயே இருக்க வேண்டிவரும்' என்பதாகவும் சொல்லிற்று. இயல்பான இனப்பற்று உணர்ச்சி மிகுதியில் ஹிந்தி எதிர்ப்பு பலமாகவே நடந்திருக்கிறது. ஹிந்தி ஆசிரியர்கள் கடைவீதியில் அடித்துவிரட்டப்பட்டிருக்கின்றனர். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. இதே நிலையில், சுதந்திர போராட்ட வீரர்கள் ஆங்கில எதிர்ப்பில் இருந்திருக்கின்றனர். அப்போதும், இவற்றை கண்டுகொள்ளாமல், ஆங்கிலம் கற்றவர்களின் சந்ததியின் வாழ்க்கைதரம் இன்று நல்ல நிலையில் உள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஹிந்தி எதிர்ப்பு முன்னுக்கு வர ஆங்கில எதிர்ப்பு பின்னால் சென்றது. அதைத்தொடர்ந்து திராவிட இயக்கங்கள், ஹிந்தி எதிர்ப்பு அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றன. மத்திய ஆட்சியில் பங்குபெறும் திராவிட அரசுகளின் பிரதிநிதிகள் ஹிந்தி பேச்சுத் திறமைமிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இந்தியாவை ஆட்சி செய்ய ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பது, இயல்பான எதிர்பார்ப்பு.
ஹிந்தி எதிர்ப்பு என்பது அரசியலாகவும், சமஸ்கிருதம் தெரிந்த ஒரு சமுதாயத்தின் மீது அல்லது சமஸ்கிருதத்தின் மீது இருந்த / இருக்கும் வெறுப்பாகவுமே படுகிறது. ஒரு பொருளால் பலன்பெறும் அல்லது அந்தப்பொருள் இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கே புரியம் அப்பொருளின் அருமை. அப்பொருளுக்கு தொடர்பில்லாதவர்கள் அது கூடாதென்ற சாபம் இடக்கூடாது. அப்பொருளை பாவிக்காது, அதன் தீங்கு பற்றிய பொத்தாம்பொதுவான அவதானிப்பு கூடாது. ஒரு கற்பனை; எனக்கு ஹிந்தி தெரியாது, வட மாநிலத்திற்கு சென்றிருக்கிறேன். தமிழர்களுக்கெதிரான திடீர் கலவரம், ஹிந்தியில் பேசினால் உயிர் பிழைப்பேன். சொல்லுங்கள்… நான் ஹிந்தி கற்றிருக்க வேண்டுமா? கூடாதா?
தாய் மொழி தவிர பிற மொழிகள் கற்றுக்கொள்வது தவறா? பாவச் செயலா? அட, என்னங்க… உலகமயமாக்கலின் பலன்களை அனுபவித்து வரும் இந்த காலத்திலும், கற்றலுக்கு தடைவிதிப்பது கட்டுப்பெட்டித்தனம் இல்லயா? கல்விக்கு ஏது எல்லை, கற்கும் சூழலும் வாய்ப்பும் இருப்பவன் கற்கட்டும், அதை தடுக்கக்கூடாது. தனக்கு கணினிப் பாடம் வரவில்லை என்றால், கணினியை குறை சொல்வது மனித இயல்பு. ஆடத் தெரியாதவளுக்கு…. கல்வியின் மூலம் யாருக்கும் எந்த கேடும் வந்துவிடாது. கற்றது கை மண் அளவு. சீனா சென்றேனும் சீர்மிகு கல்வியை கற்றுக்கொள், என்பதான சொல்லாடல்கள் கற்றலை ஊக்குவிக்கின்றன.
பிற மொழி கற்பதனால் தமிழின் தொன்மையை, பெருமையை மறந்துவிடக் கூடாது என்பதை மட்டும் நினைவில் கொண்டு, கற்றலுக்கு அணை போடாமல், முறையாக பல மொழிகள் கற்று வாழ்வில் முன்னேற அனைவரையும் வாழ்த்துகிறேன்.
நன்றி!
- அதிகம் திருத்தம் செய்யாமல், அவசரமாக எழுத முயற்சித்தது.
- கொஞ்ச நாளைக்கு விடுப்பு தேவைப்படுகிறது. யாருக்கு ‘விடுப்பு விண்ணப்பக்கடிதம்’ அனுப்பணும்?