உலகமே பொருளாதார பின்னடைவில் இருந்தாலும், இன்று தமிழகத்தில் சூடான வியாபாரம் நடக்கிறது, ஈழ வியாபாரம்... ஈழ அரசியல் வியாபாரம்.
ராஜதந்திரங்களில் கலைஞரை விஞ்ச ஆளில்லை, தேர்தலுக்கு தேர்தல் புதுப்படம் காண்பிப்பார். இம்முறை தியேட்டர் காலி என்பதால், புதுத்திருப்பங்களுடன் ஈழ மெகா தொடர் ஓட்டுகிறார்.
கற்றுக்கொண்ட அம்மாவும் (நேற்றுவரை புளித்த) ஈழமிட்டாயை நாளையே வாங்கித்தருகிறேன் என்கிறார்.
மாம்பழத்திற்காக அம்மாவையும் அப்பாவையும் சுற்றிவரும் மருத்துவரும், தன்மானமிழந்த வைகோ வும் இம்முறை ஈழத்தை கூவி விற்கிறார்கள். திருமாவிற்கிருப்பது 'வெரு' நா.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக வின் தற்போதைய ஈழநிலை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
தேமுதிக, மமக, சமக லமக (ங்கொ…மக்க) மற்ற அனைத்து க வும் இவ்விடயம் பற்றி பேசாமல் இல்லை.
இதில் பலவகை நிலைபாடுகள்...
புலியும் வேண்டும் ஈழமும் வேண்டும்.
புலி வேண்டாம் ஈழம் வேண்டும்.
ஈழம் வேண்டாம் புலி வேண்டும்.
புலியும் வேண்டும் ஈழமும் வேண்டும் ஆனால் பிரபாகரன் மட்டும் வேண்டாம்.
புலியும் வேண்டாம் ஈழமும் வேண்டாம் ஆனால் பிரபாகரன் மட்டும் வேண்டும்.
அனைத்து அரசியல் வியாபாரிகளும் ஈழத்தை சூடாக சந்தைப்படுத்துகிறார்கள். அனைவருக்கும் ஓட்டு வேண்டும் அதன் மூலம் காசு பார்க்க வேண்டும், பார்த்த காசை பாதுகாக்க வேண்டும்.
அமெரிக்க, அரபு நாடுகளின் ஏசி யில் இருந்து கொண்டு பதிவிடும் நாம் சற்று மாறுபட்டு சிந்தித்தாலும், நம்மில் எத்தனை பேர் வீதிக்கு வருவோம், வாக்களிக்க செல்வோம்? (நாட்டிலிருந்து பதிவிடுபவர்கள் ஒண்ணும் விதிவிலக்கல்ல)
தன் தலைவன் / தலைவியின் அன்றைய செயலுக்கு (அதற்கு மாற்றாக அடுத்தநாள் வேறொன்று, அதற்கும்) சப்பைக்கட்டாக ஒரு பதிவு, கும்மி, பின்னூட்ட விளையாட்டு அதிலும் குழாயடி 'என் டவுசர்குள்ள கைவிட்ட' போன்ற வசைகள், இவையெல்லாம் சற்று முகம் சுழிக்கவைக்கிறது.
இங்கும் சிலர் கடையில் ஈழத்தை விரிக்கிறார்கள், (எதிர் கருத்தோ, ஒத்த கருத்தோ) வியாபார மணம் சூடாகிறது.
பதிவுலகின் பிரபல பதிவர்கள் இன்று என்ன பதிவிட்டுள்ளார்கள் என்று பார்த்துவிட்டு தனது வாக்கை தீர்மானிப்பவர் எத்தனை பேர்?
ஒரே சமயத்தில் 100 அல்லது 1000 பேர் வந்து எனது பதிவை வாசித்தாலும், அதில் வாக்களிக்கும் எத்தனை பேரின் மனது மாறிவிடப்போகிறது?
சரி... வாக்களிக்கும் மக்கள்,
நம்மக்கள் ஒன்றும் சாதாரணப்பட்டவர்கள் அல்ல... 'கடந்த ஆட்சியில் எனக்கு தேவையாதை செய்து கொடுத்தவனுக்கே (அல்லது இன்று பிரியாணி கொடுப்பவனுக்கு) ஓட்டு அல்லது ஒண்ணும் செய்யாதவனுக்கு ஓட்டு இல்லை... எதிர்த்து நற்கும் மற்றவனுக்கு' என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். எதிர்த்து நிற்பவன் இதற்கு முன் ஏதாவது செய்தானா என்றால், 'மறந்து விட்டது' L L L. மைக்கை தூக்கிக்கொண்டு செல்லும் அனைவரிடமும், ' எனக்கு இன்னும் டிவி தரல, கேஸ் அடுப்பு தரல, எங்க தெருல தண்ணி வரல, ரோடு போடல,' என்று தான் அடுக்குகிறான். ஈழப்பிரச்சனை ஒன்றும் மக்களை பெரிதாக பாதித்துவிட்டதாக தெரியவில்லை. தன் வீட்டில் அடுப்பு எரிகிறதா? அதற்கு யார் தீக்குச்சி தருகிறார்கள்? என்றுதான் வாக்களிக்கும் அன்றாடங்காய்ச்சி பார்க்கிறானே தவிர, அண்டைச்சமூகத்தில் எரிக்கப்படும் வீடுகளை அல்ல... அவனுக்கு விழிப்புணர்வு இல்லை என்று சொல்வதற்கில்லை. அரசியல்வாதிகளைப்போல இவனுக்கும் சுயநலம். அவனிடமிருந்து இவனோ, இவனிடமிருந்து அவனோ கற்றுக்கொண்டுவிட்டார்கள். இது வேதனையளித்தாலும் மறுக்கமுடியாத உண்மை.
வேண்டாம் நண்பர்களே... அண்டை சமூகமொன்று ஒடுக்கப்பட்டு விரட்டியடிக்கப்படுகிறது. இதிலும் வியாபாரம் செய்யாதீர்கள்...
Chill: நண்பர் ஒருவர் சொன்னார், 'கருணாநிதி, 'வசனம் மட்டுமல்ல நடிக்கவும் வரும்' என்று நிரூபித்துவிட்டார், ஜெயலலிதா, 'நடிப்பு மட்டுமல்ல வசனமும் வரும்' என்று நிரூபித்துவிட்டார். ஆம்... எனக்கு "ஓ" ட்டு போடவும் தெரியும் என்று நிரூபிக்கப்போகிறேன்.