Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Jul 16, 2011

மேரிக்குண்டொரு குஞ்ஞாடு

மிகவும் பிரமாதம் என்றெல்லாம் சொல்லவில்லை. ஒற்றைவரிக் கதை என்றாலும், நேர்த்தியாக பின்னப்பட்ட திரைக்கதை. பொதுவாகவே திலீபுக்கு பெரும்பாலான சினிமாக்கள் இவ்வாறாக அமைந்துவிடுகிறது. 'எண்ட ஜோஸட்டன்' என்று நெஞ்சு நிமிர்த்தி நடக்கையில் திலீப் நிற்கிறார். எடிஸனின் விதிப்படி அங்கு காதலி வந்ததும் அவருடன் பாடலும் வந்திருக்க வேண்டும், நான் கவனிக்கவில்லை. காதலி அவ்வளவு முக்கியமில்லை என்றாலும் பெயர் பாவனா. மொத்தமாக இரண்டு நாட்கள் தான் சூட்டிங் வந்திருப்பார். முதல் நாள் நடிக்கவும், இரண்டாவது நாள் குறை கலையவும், இரண்டாவது நாளை உபயோகிக்கவில்லை போலும்.


திரையில் கதை ஏன் இவ்வாறு தொடங்க வேண்டும் என நினைத்திருக்கையில், அங்குதான் திரையை இறக்கி சுபம் இடவும் உத்தி வகுக்கப்படுவது பின்னால் தெரியவருகிறது.


மஞ்சப்பையை கையில் சுற்றி பேருந்திலிருந்து இறங்கும் போது பிஜூ மேனன், சாதாரண ஒரு வில்லன் அறிமுகத்தை நினைவு படுத்தினாலும் பிறகு உடல் மொழியால் அசத்துகிறார். ஆழக் குழிதோண்டி அதிலே வாழைக்கன்று நடுவதும், 'இங்க ஒரு மாமரம் இருந்துச்சே என்னாச்சு' என்று கேட்பதும் வீணாகவில்லை. வீணான காட்சிகளை விட்டு வெளியே வர நமது சினிமாக்களை எதிர்பார்க்கிறேன்.


ஊரில் ஒரு இழவு விழுந்தால் உள்ளூர மட்டுமின்றி சந்தோஷப்படும் சலீம் குமாரின் நூற்றுக்கும் மேலான சினிமாக்களின் முதிர்ச்சி தெரிகிறது. (ரொம்ப மெலிந்து இருக்கிறாரே, ஏன்?)


'என் அப்பா சினிமாக்களில் காமெடி ரோல் செய்தாலும் நிஜத்தில் மிகவும் கண்டிப்பானவர்' என்று ஜெகதி ஸ்ரீகுமாருடைய மகன் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் சொல்லிக்கொண்டிருந்தார். அது ஏனோ இந்த சினிமாவில் ஜெகதியை பார்க்கும் போதல்லாம் நினைவில் வந்தது. ஒரு காமெடிக் கதையில் ஜெகதி காமெடியன் அல்ல.


பொதுவாக ஒரு மதத்தை கதைக்கலனாகக் கொண்டு எடுக்கப்படும் (காமெடியோ, க்ரைமோ) சினிமாக்களில் யாரையோ திருப்திபடுத்த சாமான்ய பார்வையாளனின் முகம் சுளிக்க வைப்பது எப்போதும் எரிச்சல் தரும் ஒன்று. மேரிக்குண்டொரு குஞ்ஞாடு, தலைப்பும் கதையும் கிருத்துவர்களை சுற்றி நடத்தப்பட்டாலும், பார்வையாளர்கள் மனம் நோகாத கதையமைப்பு.


இவையெல்லாம் தான் தமிழுக்குமாக தொடர்ந்து வெற்றிப்படங்களை ஷாஃபியால் தர முடிகிறது.


இதையும் சொல்லியாக வேண்டும்; தொன்று தொட்ட வழக்கப்படி, ஊருக்கு வரும் சரக்கு வாகன ஓட்டி ட்விஸ்ட் கொண்டு வருகிறார். பணம் வைத்திருப்பவர்கள் இங்கும் வில்லன்களாவே இருக்கிறார்கள்.
  • மனதில் தொன்றியதை அப்படியே எழுத்தில் தட்டி வெளியிடுகிறேன். எடிட் செய்யவென்று கிடப்பில் போட்ட பல பதிவுகள் காலாவதியாகிவிட்டது.
  • நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு பதிவு, அதுவும் சினிமாவைப் பற்றியதாகிப்போனதில் சிறு வருத்தமே. #சேர்க்கை சரியில்லை.

Nov 5, 2009

பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: ஸ்டாலின்
பிடிக்காதவர்: அன்புமணி

2. எழுத்தாளர்
பிடித்தவர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பிடிக்காதவர்: ஞாநி

3. கவிஞர்
பிடித்தவர்: மு.கருணாநிதி
பிடிக்காதவர்: உயிரோடு இல்லை

4. திரைப்பட இயக்குனர்
பிடித்தவர்: அமீர்
பிடிக்காதவர்: மணிரத்னம்

5. நடிகர்/கை
பிடித்தவர்: ஜெயலலிதா
பிடிக்காதவர்: விஜயகாந்த்

6. விளையாட்டு வீரர்
பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த்
பிடிக்காதவர்: அஜீத்

7. தொழில் அதிபர்
பிடித்தவர்: கலாநிதி மாறன்
பிடிக்காதவர்: ஷங்கர்

8. மதத் தலைவர்
பிடித்தவர்: கி.வீரமணி
பிடிக்காதவர்: இராமகோபாலன்

9. மருத்துவர்
பிடித்தவர்: புருனோ
பிடிக்காதவர்: ராமதாஸ்

10. வலைபதிவர்
பிடித்தவர்: லக்கிலுக்
பிடிக்காதவர்: யுவகிருஷ்ணா

என்னைத் தொடர அழைத்தது:  நாடோடி இலக்கியன்

நான் தொடர அழைப்பது:
விதி இங்க இருக்கு. 

டிஸ்கி: பிடித்த/பிடிக்காதவர் எந்த நிமிடமும் மாற்றப்படலாம்.

Sep 22, 2009

மொ போல் ஒருவன்

கடைசியாக நான் சொந்த செலவில் பார்த்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. அதற்குப் பிறகு, ஒரு நண்பன் செலவில் சிவாஜி பார்க்கவைக்கப்பட்டேன். முன்னது சொசெசூ என்றால், இரண்டாவது அசெஆ. இதுவரை தனியாக திரையரங்கு செல்லாத நான், இப்படம் பார்க்க ஒரு நாளுக்கு முன்பே ஒரு இருக்கை முன்பதிவு செய்திருந்தேன். நேற்று திரையரங்கு சென்றிருந்த போது, கவ்ண்டரில் இரண்டு நாளுக்கான டிக்கெட்டும் விற்றுவிட்டதாக பலர் திரும்பி வந்தனர். எனக்கான டிக்கெட்டை மெஷினில் எடுத்துக்கொண்டு, அரங்கினுள் சென்றமர்ந்தேன். 15:30 க்கு ஆரம்பித்த படம் 17:15 க்கு முடிந்தது. இடையில் 10 நிமிட இடைவெளி. கூட்டிக்கழித்து பார்த்தால், பல இடங்களில் வெட்டப்பட்டுள்ளது தெளிவாகியது. ஏற்கனவே வெட்னஸ்டே பார்த்திருந்ததால், வெட்டல் வெளிச்சமாகியது. மாலையில் ஒரு பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்டேன். மிக்ஸிங் சரியில்லை என்று பலருக்கும் வருத்தம். 22 மணிவாக்கில் வீடு வந்து இழுத்து போர்த்தி உறங்கிவிட்டேன்.

காசு கொடுத்து பார்த்ததற்காக விமர்சனம் பண்ணியாக வேண்டுமா? அது மட்டுமின்றி எனக்கு சினிமா விமர்சனம் வருவதில்லை. விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, கண்ணில் ஆலிவ் ஆயில் ஊற்றி திரைப்படம் பார்ப்பதில்லை. பொழுது போனால் சரியே. ஆனாலும், ஒரு முயற்சி செய்து நிறை குறைகளைச் சொல்கிறேன்.

‘கமல் அசத்திவிட்டார்’ என்று சொல்ல,  அவர் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக நடித்துவிடவில்லை. அவர் ஏன் இந்தப் படத்தில் நடித்திருக்க வேண்டும், என்பதே பலரின் கேள்வி, என்னதும். புதனில் நஸ்ருத்தீன் ஷா நடிப்பை பார்த்தவர்களுக்கு இது பிரமாதமாக தெரியாது. அதே போல், நஸ்ருத்தின் ஷா, ஒலக நாயகன் ஆகிவிட முடியாது.

நிறை.
  • 1 1/2 மணிநேரம் பொழுது போனது தெரியவில்லை. கொடுத்த காசுக்கு பாதகமில்லை. (போன பொழுது, சற்று கவலையோடு போனது வேறு விஷயம்.)

குறைகள் அல்லது யதார்த்த மீறல்கள்.
  • வெற்று பைகளை பொது இடங்களில் வைப்பதாக சுற்றப்பட்ட காட்சியமைப்பு தேவையில்லாதது. அதே போல, பல இடங்களில் சுற்றியிருக்கிறார், காதிலும்.

  • மாடியில் ஏறும் போது, இஸ்லாமியர்களின் இறை வழிபாட்டு அழைப்பான ‘பாங்கு’ சொல்லப்படும். அது நேரம் தோராயமாக 8 - 9 மணியிருக்கலாம். அந்நேரத்தில் (காலை 6 லிருந்து உச்சி 12 வரை) ‘பாங்கு’ சொல்லப்படுவதில்லை.

  • 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு பழிதீர்க்கவே 1998ல் கோவையில் குண்டுவைத்ததாக தீவிரவாதிக்கு கொசுவத்தி. (கமலுக்கும் தேசிய வியாதி?)

சில சந்தேகங்கள்.
  1. ஊடகத்துறையில், எல்லா பெண்களும் புகை பிடிக்கிறார்களா?பெண்களிடம் மைக்கை கொடுத்து, கேமரா பிடிப்பது தான் ஆண்கள் வேலையா?

  2. எல்லா கணவன்களும் மனைவியிடம் அடி வாங்குகிறார்களா?மனைவியிடம் அடிவாங்கும், எல்லா கணவன்களும் காவல்துறையில் புகார் செய்கிறார்களா?

  3. எல்லா வீட்டிலும் சந்தைக்குச் செல்வது கணவன்களா? காலையில் தக்காளி வாங்க சென்றவர், மாலையில் தான் வீடு திரும்புவாறா? மாலை வீடு திரும்ப இருப்பவர் ஏன் காலையே தக்காளி வாங்க வேண்டும்?

  4. எல்லா கணினி ஹேக்கர்களும் ஒரு மாதிரி தலையை ஆட்டி ஆட்டித்தான் பேசுவார்களா?

  5. எல்லா கணினி மேதைகளும், ஒரு முறை பாவித்த மடிக்கணினியை மறு முறை பாவிக்க மாட்டார்களா?

  6. வாங்கிய 6 கிலோ ஆர்டிஎக்ஸில், காவல் நிலையத்தில் வைத்தது போக மீதி எங்கே?

  7. ரிலையன்ஸில் போலி சிம் வாங்குவது எளிதா? 5 அல்லது 6 முறை தொலைபேசுவதற்கு, ஒரு பிஸ்னஸ் கார்ட் ஆல்பம் முழுவதும் சிம் கார்ட் வைத்திருப்பது ஏன்?

  8. வெடிகுண்டு தீவிரவாதிக்கு, வெடிகுண்டு தண்டனை, சரி. பிறப்புறுப்பில் கைவைத்த தீவிரவாதிக்கு? :-( தீவிரவாதத்திற்கு தீவிரவாதம் தான் தீர்வா? எனில், குறை எண். 3 ற்கும் இதற்கும் தொடர்புள்ளதா?  ஆம் எனில், ஒவ்வொரு காமன் மேனுக்காகவும் ஆர்டிஎக்ஸ், ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டி வருமே... யு... ஸ்டுப்பிட் காமன் மேன்.

வெட்னஸ்டே பார்த்தவர்களும் ஒரு முறை பார்க்கலாம்.

மாறுபட்ட விமர்சனங்களுக்கு - உன்னைப் போல் ஒருவன் - வலையுலக விமர்சனங்களின் தொகுப்பு – உண்மைத்தமிழன்.


Sep 18, 2009

யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்.

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். – உரை.

என் நண்பர், எங்கள் ஊர்காரர், என் முந்நாள் தெருவாசி, கோபக்காரர் திருமிகு வால்பையன் என்ற அருண் அவர்கள், இஸ்லாத்தை பற்றி தெளிவுபடுத்த கேட்டிருந்தார். அவருக்கான ப்ரத்தியேக இடுகை. என் நிலையை அவருக்குத் தெளிவுபடுத்துவதால் எங்கள் நட்பு பலப்படும் என்பதாலேயே இந்த இடுகை. இதன் உள்அர்த்தங்கள் எங்கள் இருவருக்கும் தெரியும் என்பதால் கலகக்காரர்களை கண்டு பயமில்லை. என்ன வால் நான் சொல்றது?

"இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் விமர்சிக்கும் தகுதிக்காகவாவது படித்து தெரிந்துகொள்ளுங்கள், பின்பு விவாதிக்கலாம்" என்று நான் சொன்னதற்கு...

வால்பையன், "படித்து தெரிந்து கொள்வதற்கு பதில் இப்போது உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்! படி படி என்று சொல்லமால் நீங்கள் படித்ததை தெளிவுற சொல்லி கொடுங்களேன்!" என்று கேட்டிருந்தார்.

மிக்க மகிழ்ச்சி வால், இந்த தெளிவு ஒரு பொருளின் மீது விமர்சனத்தை வைக்கும் முன்பு இருந்திருக்க வேண்டும். பிழையான கருத்தை, ஆதாரமில்லாத குற்றச்சாட்டை அவையில் வைக்கும் முன்பு, அதை பாவிப்பவர்களின் புத்தகங்களை படித்தோ அல்லது நண்பர்களிடம் கேட்டோ தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் நான் சொன்னது. இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு, அதை கற்றுத்தேர்ந்த நம் பரஸ்பர நண்பர் அ.மு.செய்யது மற்றும் தேடிப்படித்த நான் இருக்கிறேன். இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை எந்நேரமும் எப்படியும் கேட்கலாம். (இரவு 12 மணிக்கு எழுப்பி, உன் பெயர் என்ன என்றும் என்னிடம் கேட்கலாம். மாத்ருபூதம் மாதிரி கோவப்படமாட்டேன். எனக்கு இப்போ நைட் ஷிஃப்ட் :-) ) உங்களுக்கான சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக எனது தேடல் இன்னும் அதிகமாகும் என்பதில் கூடுதல் மகிழ்ச்சியே. அது கிடக்கும்...

முஸ்லீம்கள் அரபியில் வழிபாடு நடத்துவதேன்? அல்லாவுக்கு அரபி மட்டும் தான் தெரியுமா?

முதலில் ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு மொழிக்கும் தனிச்சிறப்பென்பது கிடையாது. அதே போல எந்த மொழியும் தாழ்ந்த மொழி கிடையாது. அது காலத்தால் அழிந்த மொழியானாலும், பன்நெடுங்காலம் வாழ்ப்போகும் மொழியானாலும் சரியே. ஒரு மொழியில் புலமை பெற்றவர்கள், அதன் ஈர்ப்பினால், அம்மொழி மீது பற்று கொள்வது இயல்பே. அதேபோலத்தான் ஒருவர் தாய்மொழிப்பற்று கொள்வதும் இயற்கை, கடமை.

அரபி மொழி பேசுவர், அரபி அல்லாத மொழி பேசுபவரை விட உயர்ந்தவர் அல்லர். அரபி அல்லாத மொழி பேசுபவர், அரபி பேசுபவரைவிட உயர்ந்தவர் அல்லர் என்பது முஹம்மது நபியின் வாக்கு. (நபி = தூதர்)

வழிபாட்டிற்கான அழைப்பு அரபியில் 'அல்லாஹூ அக்பர்...' என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதை தமிழில்,' இறைவன் மிகப்பெரியவன்... வழிபாட்டிற்கு வாருங்கள்...' என்பதாக மொழி மாற்றம் செய்யலாம். சரி... இதை தமிழிலேயே சொல்லலாமே.. என்று கேட்பீர்கள். இஸ்லாம், ஒரு குறிப்பிட்ட பிராந்திய மக்களின் மார்க்கம் இல்லை. உலகம் முழுமைக்குமான மார்க்கம். அரபுநாட்டில் இருக்கும் தமிழ், மலையாளம், தெலுகு, பெங்காளி மற்றும் இன்னபிறவற்றை பேச்சு மொழியாக் கொண்டவர்களையும் இறை வழிபாட்டிற்கு அழைக்க ஒரு பொதுமொழியான குர்ஆன் எழுதப்பட்டிருக்கும் அரபியிலேயே 'பாங்கு' எனப்படும் வழிபாட்டிற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. இதைக்கேட்பவர்கள் வழிபாட்டுதளம் சென்று தனது கடமையை நிறைவேற்றுகின்றனர். இறை வழிபாடும் அரபியிலேயே நிறைவேற்றப்படுவதற்கு காரணம் இதுவே. தனிப்பட்ட வேண்டுதல்களை அவரவருக்கு விருப்ப மொழியிலேயே கேட்டுக்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே நிலைதான் மலையாளிகள் அல்லது நைஜீரியர்கள் தமிழ்நாடு வந்தாலும். மேலும், உலகெங்கும் வழிபாட்டை ஏற்று நடத்த, “அரபி கற்றவர், வயதில் மூத்தவர்” என்ற தகுதியே போதுமானது. அரபு நாட்டில் நானும் வழிபாட்டை முன்நின்று நடத்தியிருக்கிறேன். எனக்கு பிறகு வந்த அரபிகள் பின்னால் நின்று, என்னை தொடர்ந்தே இறைவனை வழிபட்டனர். (கருப்பர்கள், வெள்ளையர்கள், அரபிகள், அரபி அல்லாதோர் என்ற பாகுபாடும் இஸ்லாத்தில் இல்லை என்பதற்கும் இதை உதாரணமாக சொல்லலாம்) இறை வழிபாட்டிற்கு மொழி குறுக்கீடாகக்கூடாது என்பதே இதன் சாராம்சம்.

சரி… குர்ஆன் ஏன் அரபியில் இருக்க வேண்டும்? - முஹம்மது நபி அரபு நாட்டில் வாழ்ந்தார். அரபு மொழி பேசினார். அதனாலேயே அவருக்கு குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டது.

அன்னிய மொழியான அரபியை தமிழர் ஏன் படிக்க வேண்டும்? - மேற்சொன்ன ஒருமைப்பாட்டிற்குத்தான் அரபியை கற்றுக்கொள்கிறோம். மட்டுமல்லாது, அரபியில் உள்ள குர்ஆனை நேரடியாக விளங்கிக் கொள்வதற்காகவும்தான்.

அரபி தமிழர்கள் மீது திணிக்கப்படுகிறதே? - இல்லை. இது முற்றிலும் தவறான கருத்து. அரபி எந்த தமிழக பள்ளியிலும் கட்டாய பாடமில்லை. ஹிந்தி திணிப்பை எதிர்த்த நண்பர்கள், “ஹிந்தி தேவைப்படுவோர், விருப்பமுள்ளவர்கள் மட்டும் படிக்கட்டும்” என்று சொன்னது போல, விருப்பமுள்ளவர்கள் மட்டுமே, விருப்ப பாடமாக அரபியை படிக்கிறார்கள். அரபி படிக்கத்தெரியாத முஸ்லீம்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆனை படித்து விளங்கிக்கொள்கின்றனர். (குர்ஆன், பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திலும் கூட) விரும்ப பாடமாக அரபி படிப்பவர்களிடம், ‘அது கூடாது, தமிழில் மட்டுமே படி’ என்று சொல்வதும் திணிப்புதான். அந்த திணிப்பு தவறென்றால், படிப்பதை தடுக்கும் இந்த திணிப்பும் தவறுதான்.

“இந்துக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற பார்பனீய சிந்தனையை ஒட்டி வருகிறது இது!, நான் பதிவில் கேட்டது போல் இஸ்லாமியர்களுக்கும் பார்பனீய சிந்தனை உள்ளதா?” – வால்பையன்.

வால், அரபியே முஸ்லீம்களின் பொது மொழியாக இருக்கிறது. அவ்வாறு இருப்பது எந்த ஒரு முஸ்லீமிற்கும் தொந்தரவில்லை என்பதால், அதையே அனைத்து முஸ்லீமும் விரும்புகின்றான். இதில் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு இருக்கிறதா? குறிப்பாக, கடவுளே இல்லை என்று சொல்லும் உங்களுக்கு, அவரை நம்புபவர்கள் எந்த மொழியில் வழிபாடு செய்தால் என்ன?

வால், நீங்களாக கேட்கும் கேள்விகளை விட, முகம் இல்லாதவர்கள் பத்தவைத்துவிட்டு போகும், முற்றிலும் அடிப்படை அறிவற்ற, ஆதாரமற்ற, கேவலமான கருத்துக்களைத்தான் ‘ஆமாம், எனக்கும் அதே கேள்வி உண்டு, நானும் அதுதான் நினைத்தேன்’ என்பதாக அதிகம் சொல்கிறீர்கள்.

எந்த சந்தேகம் என்றாலும் நேரடியாக கேட்கலாம். குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்லலாம்.

முன்பு உங்களுக்கு அதிகமான இஸ்லாமிய நண்பர்கள் இருந்ததாகவும் இப்போது குறைந்து விட்டதாகவும் அதனால் பிரியாணி வருவதில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். ஆம்.. எனக்கும் தான். முன்பு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருந்தார்கள். இப்போது அவர்களுடைய தொடர்பில்லை. வேறென்ன… சோம்பேறித்தனம், அலுப்பு. ஆனால் எனக்கு சிறந்த நண்பர்கள் இப்போது கிடைத்துள்ளார்கள், வால்பையன், கோவியார், டக்ளஸ், கார்த்திகை பாண்டியன், லோகு, பாலா, ஜெகநாதன், மணிகண்டன், அப்துல்லா அண்ணன், செய்யது மற்றும் முகம் தெரியா பலர். உங்கள் குறை பிரியாணிதான் என்றால் நமது அடுத்த சந்திப்பில் என் வீட்டு பிரியாணி சாப்பிடலாம். ;)

  • இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் அபாண்டமாக குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிப்பதே நோக்கம். இவற்றை சொல்லாமல் விட்டால், தவறான எண்ணங்கள் வால்பையன் மனதிலும் உங்கள் மனதிலும் தங்கிவிட சாத்தியமுண்டு என்பதால் மட்டுமே. என் நண்பர்கள் மனதில் என்னைப்பற்றிய தவறாக எண்ணம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனக்கு கலங்கமில்லா நட்பு முக்கியம்.
  • மாற்று மத நண்பர்களின் கடவுள் கொள்கையையோ, அவர்களின் நம்பிக்கையையோ நான் எங்கும் கேள்வி எழுப்பியதில்லை. அது அவர்களின் நம்பிக்கை. என் பார்வையில் படுவதை கேள்வி கேட்க, கருத்து சொல்ல முழு உரிமை இருந்தும், நம் பண்பாடு, நாகரிகம் அதை செய்யச்சொல்லவில்லை.
  • அதற்காக இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பார்பட்ட மார்க்கம் என்றும் சொல்லமாட்டேன். உங்கள் சந்தேகங்களை, தனி மெயிலில் அனுப்புங்கள். பதில் மெயிலிலோ அல்லது நீங்கள் விருப்பப்பட்டால், தனி இடுகையிலோ விவாதிப்போம்.

நன்றி.