Jul 27, 2009

தீர்ப்பு நாள்

முன்னரே சொல்லி விடுக்கிறேன், இது கோவியாரின் இடுகைக்கு எதிர் இடுகை அல்ல. ஆனால் அதை வாசித்த பின்பு தான், இதை எழுத எண்ணினேன். அவர் இடுகையில் சொல்லியுள்ள ஒரு வார்த்தை, இஸ்லாமியர்கள் குறிப்பிடும் 'தீர்ப்பு நாள்'. இவர்கள் குறிப்பிடும் தீர்ப்பு நாள் என்றால் என்ன? என்பதை இங்கே மிகச்சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். இதே போன்று 'கலி முத்திடுத்து, கல்கி வரப்போறான்', 'ஜீஸஸ் வருகிறார்', என்பதையும் யாராவது சுருங்கச் சொன்னால், நான் புரிந்து கொள்வேன். இவைகள் சொல்லும் கருத்துக்களில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பது என் புரிதல்.

முஸ்லீம் யார்?

இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள உயிரினங்களையும் படைத்தவன் ‘அல்லாஹ்’ (ஒருவனே) என்று நம்பிக்கைவைத்து, அவனது இறைச்செய்தியைச் சொல்ல வந்த (கடைசி) தூதராக ‘முஹம்மது’ வை எற்றுக்கொண்டவர்கள் முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் அல்லது கருதப்படுகிறார்கள். பிறப்பால் மட்டுமே ஒருவர் முஸ்லீம் ஆகிவிட முடியாது. மேற்சொன்ன செய்தி, அதாவது

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது அவனின் தூதராக இருக்கிறார்கள்’

என்று நம்பிக்கை கொள்ளும் அனைவரும் முஸ்லீம் தான். நம்பிக்கை கொண்டால் மட்டும் போதுமா…

முஸ்லீம் என்ன செய்ய வேண்டும்?

பாவச் செயல்களில் இருந்து விலகி, நன்மையான செயல்கள் மட்டுமே செய்ய வேண்டும். நன்மையே ஏவி தீமையை தடுக்க வேண்டும்.

  • பாவச் செயல்; இறைவனுக்கு இணை வைத்தல். உயிரினங்களுக்கு தீங்கிழைத்தல்.
  • நன்மையான செயல்கள்; இறைவனை வணங்குதல். உயிரினங்களுக்கு நன்மை செய்தல்.

நன்மையான செயல்களை செய்ய மக்களை ஏவ வேண்டும். தீமையை கண்டால் தடுக்க வேண்டும். (முதலில் கரம் கொண்டு தடுத்தல். முடியாவிட்டால், நா கொண்டு தடுத்தல். அதுவும் முடியாவிட்டால், குறைந்தபட்சம் அதிலிருந்து விலகி இருத்தல்)

ஏன் இவற்றை செய்ய வேண்டும்?

இறைவனின் வேதமான குர்ஆனிலும் தூதரின் வாழ்க்கையான ஹதீஸிலும் சொல்லியுள்ளது போல, இந்த உலக வாழ்க்கை நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு தேர்வுக் கூடம். இங்கு செய்யப்படும் வினைகளுக்கான கூலி தீர்ப்புநாளில் வழங்கப்பட்டு மறுமையில் நிறைவேற்றப்படும். அந்த நாளில் பணத்தாலும் பாசத்தாலும் யாரும் எதையும் சாதித்துவிட முடியாது. இவ்வுலகில் விதைத்ததை அறுவடை செய்யும் நாள் அது.

மறுமை

எந்தவொரு மனிதனும் மரணத்தை விரும்புவதில்லை. மரணிக்காமல் வாழவே விரும்புகிறான். அவன் விரும்பும் மரணமில்லா வாழ்க்கை மறுமையில் கிடைக்கும். மறுமை வாழ்க்கை முடிவற்ற ஒன்று. இறுதி தீர்ப்பு நாள் இருக்கிறது என்பதை இறைவேதம் குர்ஆன் பல வசனங்களில் சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக…

இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது, நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர் என்று அவர்கள் கூறினார்கள். (குர்ஆன், 006:029)

மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள். (குர்ஆன், 083:004 – 006)

அந்த நாள் எப்போது வரும்?

மறுமை நிச்சயமாக உண்டு என்று சொன்ன இறைவன், அந்த நாள் எப்போது வரும் என்பதை மறைத்து வைத்திருப்பதாகச் சொல்கின்றான்.

நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை மறைத்து வைத்திருக்கிறேன். (குர்ஆன், 020:015)

மேலும்,

அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. (குர்ஆன், 31:34)

அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராதென்றோ அல்லது, அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று அந்த நாள் வராது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா? (குர்ஆன், 012:107)

இத்தகைய வசனங்களின் மூலம் தீர்ப்புநாள் நிச்சயம் வரும் எனபதில் நம்பிக்கை கொண்டோருக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாம் எதிர்பாராத நேரத்தில் அது சம்பவிக்கும் என்று நம்பிக்கை கொண்டு, பாவ செயல்களில் இருந்து விலகி நாம் நன்மையானவற்றை மட்டுமே செய்வதோடு மட்டுமல்லாமல், நன்மையை ஏவி தீமையை தடுக்கவும் வேண்டும்.

நான்

பாவச் செயல்களில் இருந்து விலகி இருக்கிறேன். முடிந்தவரை சக உயிரினங்களுக்கு நன்மை செய்கிறேன், அதையே ஏவுகிறேன். தீமையை கண்டால் என்னால் ஆன மட்டும் தடுக்கின்றேன். இதற்கெல்லாம், இறைவனை நம்புவதும் அதனால் தீர்ப்புநாளில் கூலி உண்டு என்ற நம்பிக்கையுமே காரணம். இந்த இறை நம்பிக்கை எனக்குள் இல்லாவிட்டால், கட்டுப்பாடில்லாமல் தான் தோன்றித்தனமாகத் திரிவேன். சுயத்தை மட்டுமே மனதில் கொண்டு, கொள்ளை கொலைகளை மலியச் செய்வேன். உடற்பசியை தீர்க்க உறவுகள் பாராது சமுதாயத்தை சீரழித்துவிடுவேன். இன்னும் கற்பனைக் கெட்டா குற்றங்களும் இங்கே நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் யாரும் இல்லை. சிலருக்கு கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கை, சிலருக்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஒருவருடைய நம்பிக்கையில் மற்றவர் குறுகிடாதவரை எந்த பிரச்சனையும் எழப்போவதில்லை.

நன்றி!

21 comments:

  1. :) மும்மீன்கள் அனைவருமே முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அனைவரும் மும்மீன்கள் கிடையாது !

    சரியா ?

    ReplyDelete
  2. ஆமாம் சூரியன் நம்பிக்கைதான். :)

    ReplyDelete
  3. நன்றி கோ, சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  4. யாவரும் எளிதில் அறிந்துக்கொள்ளக்கூடிய தெளிவான பதிவு பீர்...

    ReplyDelete
  5. நல்ல பதிவு பீர்...இந்த விளக்கமெல்லாம் இங்க கொள்ள பேருக்கு புரியாது.

    ReplyDelete
  6. //ஒருவருடைய நம்பிக்கையில் மற்றவர் குறுகிடாதவரை எந்த பிரச்சனையும் எழப்போவதில்லை.//

    Well said

    :)

    ReplyDelete
  7. மிக மிக நல்ல பதிவு.

    //நம்பிக்கை

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் யாரும் இல்லை. சிலருக்கு கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கை, சிலருக்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஒருவருடைய நம்பிக்கையில் மற்றவர் குறுகிடாதவரை எந்த பிரச்சனையும் எழப்போவதில்லை.//

    உங்களைப் போன்றோரின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ

    //நன்மையான செயல்களை செய்ய மக்களை ஏவ வேண்டும். தீமையை கண்டால் தடுக்க வேண்டும்//

    aamen.

    ReplyDelete
  8. அருமையான இடுகை நண்பா.. எந்த மதமானாலும் இதுதானே அடிப்படை.. நல்லா சொல்லி இருக்கீங்க..

    ReplyDelete
  9. //அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு//

    இப்படி இருந்துட்டா எந்தப் பிரச்சினையும் இல்லை.நல்ல பதிவு.

    ReplyDelete
  10. நெற்குப்பை தும்பி ஐயா சொன்னதை வழிமொழிகிறேன்.

    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    மதம் அல்லது நம்பிக்கை என்பது ஒருவரது தனிப் பட்ட விஷயம். அதில் சச்சரவுகளுக்கு இடம் இல்லை என்பதை மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

    நன்றி.

    ReplyDelete
  11. நன்றி அபுஅஃப்ஸர்,

    <<<>>>

    நன்றி செய்யது, ஏதோ கொஞ்ச பேருக்கு புரிஞ்சாலும் மகிழ்ச்சிதான்

    <<<>>>

    நன்றி முரு,

    <<<>>>

    நன்றி nerkuppai thumbi,

    <<<>>>

    நன்றி கார்த்திக்,

    <<<>>>

    நன்றி ஸ்ரீ, ஆமாம் எந்த பிரச்சனையும் இல்லை.

    <<<>>>

    நன்றி நைனா,

    <<<>>>

    நன்றி Maximum India சார்,

    ReplyDelete
  12. அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நன்றி சுவனப்பிரியன்,

    ReplyDelete
  14. //இறைவனை நம்புவதும் அதனால் தீர்ப்புநாளில் கூலி உண்டு என்ற நம்பிக்கையுமே காரணம்//அழகாக சொல்லியிருக்கிங்க. நல்ல பதிவு.
    அனைவருக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி Mrs.Faizakader.

    ReplyDelete
  16. //கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் யாரும் இல்லை. சிலருக்கு கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கை, சிலருக்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஒருவருடைய நம்பிக்கையில் மற்றவர் குறுகிடாதவரை எந்த பிரச்சனையும் எழப்போவதில்லை.//

    எவ்வளவு பெரிய விசியத்தை (விவாத்தை )எளிமையாக கூறிவிட்டிர்கள்.தெளிவான பதிவு.

    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  17. நன்றி Thomas Ruban, தொடருவதற்கும்.

    ReplyDelete
  18. பண்பாக சொல்லியிருக்கிறீர்கள். ​எல்லோருக்கும் புன்னகை சிந்தும் உங்கள் எழுத்தை லயிக்கிறேன்!

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.