Jul 15, 2009

ஒரு கடிதம் - பொக்கிஷம்

அடுத்தது ஒரு கடித இடுகை என்று முடிவு செய்துவிட்டேன். அதில் இரண்டு வகைகள் உண்டு ஒன்று, நாம் யாருக்காவது எழுதி அதை அவருக்கு அனுப்பாமல் இங்கு இடுகையாக்கலாம். ஆனால் அதிலும் ஒரு சிக்கல், நமக்கோ உறப்படியாய் ஒன்றும் எழுத வராது. அப்படியே எழுதினாலும், சரியா வராது. நாலு பேர் வந்து சிரித்துவிட்டு போய்விடுவார்கள். சரி அது வேண்டாம், நமக்கு வந்த ஆயிரங்கணக்கான கடிதங்களில் ஒன்றை எடுத்து இடுகையாக்கலாம் என்று, தேடினால்... கிடைத்ததெல்லாம்,

நான் நலம் நீ நலத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன். ஏன் இப்பல்லாம் அடிக்கடி கடிதம் எழுதுவதில்லை. நீ எப்ப ஊருக்கு வருகிறாய். வீட்டில் உன்னை எல்லோரும் தேடுகிறோம். எங்களை நினைத்து கவலை பட வேண்டாம். மற்றபடி நீ போன மாதம் பணம் அனுப்ப வில்லை. இந்த மாதம் மறக்காமல் அனுப்பிவிடு.....

அடுத்து தூரத்து உறவினரிடமிருந்து,

அன்புள்ள அண்ணனுக்கு, இங்கு அனைவரும் நலம், நீங்கள் நலமா? எங்களை மறந்து இருக்க மாட்டீர்கள் என் நம்புகிறோம். எங்களுக்கு சிறு உதவி, என் தம்பி பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் சும்மா இருக்கான். அவனுக்கு ஏதாச்சும் விசா இருந்தால் ஏற்பாடு செய்யவும். ...

இப்படி போகும்...

என்ன செய்யலாம், சரி வந்த கடித்தை மட்டும் தான் இடுகையாக்குவது என்று ஏதும் வரைமுறை இருக்கிறதா, என்ன? நாமே ஒன்றை எழுதி வந்ததாகச்சொன்னால் என்ன. அட, அதிலும் ஒரு சிக்கல். நமக்குதான் பொய் சொல்ல தெரியாதே. சொன்னாலும் மாட்டிக்கொள்வோம். என்ன செய்வது, யோசி... யோசி.. மாத்தி யோசி.... அப்படி மாற்றி யோசித்தபோது தான் நினைவு வந்தது. தமிழ் ஆசிரியர் எனக்கு வரைந்த மடல். எனக்கு வந்த பொக்கிஷம் இது, இன்றும் பத்திரமாய் வைத்துள்ளேன். என் பள்ளி இறுதி ஆண்டின் தமிழ் ஆசிரியர் அருமை கனி அவர்கள் எனக்கு எழுதிய மடல். இறுதி நாளின் போது அவரிடமிருந்து பெற்ற வாழ்த்தையும் சேர்த்து இங்கே ஏற்றியுள்ளேன். வாழ்த்து எழுதியதும் அவரிடம் கேட்டேன், 'இந்த வாழ்த்தோடு முடிந்துவிட்டது, இனி நீங்கள் யாரோ நாங்கள் யாரோ, இல்லையாம்மா?'

'இல்லை பீர், மற்ற மாணவர்களைப் போலல்ல நீ, வகுப்பில் தனித்து நின்றாய். உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன்.' என்றார்.

'டேய், நீ அந்த கிழவிட்ட சொல்றா, நீ சொன்னா கேட்கும்' என்று சக மாணவர்கள சொன்ன போது நான் நம்பவில்லை அன்றுதான் உணர்ந்தேன், என் தமிழ் அம்மா என் மீது வைத்திருந்த அன்பை, மதிப்பை. தமிழ் அம்மா மீது கொண்டிருந்த மதிப்பு, எனக்கும் தமிழ் காதல் வந்தது. அதற்கு நேர் எதிராக கணக்கு டீச்சர் மீது இருந்த வெறுப்பு எனக்கு இன்றளவும் கணக்கு வராததிற்கு காரணமா என்று தெரியவில்லை. 15 + 5 என்றாலும் கால்சி யை தேட வேண்டிய நிலை.

தமிழ் தந்த வாழ்த்து

புன்னகை மன்னனே! பொல்லாதவனே!

புறம் பேசாத நல்லவனே!

நன்றாய் (போதையின்றி) நீ வாழ

நானிலத்தில் புகழ் பெற்று வாழ்

இன்றும் என்றும் மறவாது

இதயம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

என்னை பல வேளைகளில்

சினம் கொள்ள வைத்தவனே!

உன்னை உளமார வாழ்த்துகிறேன்.

என்றும் அன்புடன்,

அதன் பிறகு சில நாட்கள் சென்று ஒரு புத்தாண்டோ அல்லது பொங்கலோ நினைவில்லை என் தமிழ் அம்மாவிற்கு ஒரு வாழ்த்து அனுப்பினேன். மறக்காமல்...'நீங்கள் என்னை மறந்து விட்டீங்கள் அம்மா, ஒரு கடிதம் கூட இதுவரை எழுதவில்லையே. மறக்கவில்லை என்றால் கடிதம் எழுதவும்' என்று குறிப்பிட்டு. அதற்கு தமிழ் அம்மாவின் கடிதம்,

பொக்கிஷம்

அன்புள்ள மாணவன் போதைக்கு, (Peer Mohammed)

பாசமுடன் தமிழாசிரியை வரைவது, பிரியமுடன் நீ அனுப்பிய வாழ்த்து கிடைக்கப் பெற்றேன். மனம் நிறைந்த மகிழ்ச்சி அடைந்தேன். நிற்க! (Standup)

ஆங்கில வாழ்த்தால் மட்டுமல்ல யாராலும் நான் தமிழ் மீது கொண்ட பற்று மாறாது. தமிழு மொழி என் உயிரினும் மேலானது என்பதை விட உயிருடன் கலந்தது என்பதே உண்மை! சரி! சரி! அறுவையை நிருத்திக் கொள்கிறேன் மகனே! அமர்க! (Sitdown)

நீ எப்படி இருக்கிறாய்? உன் குடும்ப சூழல் எப்படி உள்ளது? முக்கியமாக உன் மனநிலை எப்படி உள்ளது? மறந்தும் தவறான பாதைகளில் சென்றுவிடாதே! இந்த தமிழ்கிழவியை; இந்தக் கிழவி தந்த அறிவுரைகளை மறந்து விடாதே! எந்தச்சூழலிலும் நற்பண்புகளில் இருந்து மாறவே கூடாது.

நல்ல பண்புகளாலும் நல்ல செயல்களாலும் தான் நாம் வாழ்வில் உயர முடியும். நீ நன்கு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

என்றென்றும் என் அன்பும் பாசமும் வாழ்த்தும் உனக்கு உண்டு! என் அன்பு மாணவன் பீர் முகம்மதுவை என்றும நான் நல்லவனாய், அமைதியானவனாய் அன்பானவனாய் மட்டுமே காண வேண்டும்.

ஏண்டா இந்தக்கிழவியைக் கட்டாயம் கடிதம் கூறினோம்! கிழவி இப்படி அறுத்துவிட்டாளே என்று நீ திட்டுவது இங்கு கேட்கிறது. எனவே நிறுத்திக்கொள்கிறேன். கோபப்படாதே! நன்றி!

இவள்,

தமிழ்ஆசிரியைகனி.
தமிழ் அம்மாவின் கடிதத்திற்கு பதில் எழுதும் நேரம் வந்துவிட்டது. அடுத்த இடுகையில்....

10 comments:

  1. ம்ம்..மலரும் நினைவுகளா...?
    அது அந்த கால "கணக்கு" நோட்டுதான..!
    பதில்கடிதம் எப்போ..?

    ReplyDelete
  2. த‌மிழ் மீதும் தமிழ் ஆசிரிய‌ர்க‌ள் மேல் தீராப்ப‌ற்றுள்ளவன் என்ப‌தால் இந்த‌ ப‌திவு என‌க்கும் மிக‌வும்
    நெருக்க‌மாக‌ ப‌ட்ட‌து.

    அந்த‌ க‌டித‌ங்க‌ளை ப‌த்திர‌மாக‌ வைத்து கொள்ளுங்க‌ள்.இவையெல்லாம் திரும்ப‌ ச‌ம்பாதிக்க‌ முடியாத‌ல்லவா ??

    ReplyDelete
  3. ரொம்ப சூப்பரு தல. எங்க ஊருக்கு போண மாதிரி இருக்கு..

    ReplyDelete
  4. சாட்சிக்கு ஸ்கேன் வேறயா!
    சொன்னா நம்ப மாட்டோமா!?

    ReplyDelete
  5. நன்றி அக்பர்,

    <<<>>>

    நன்றி ராஜூ, ஆமாம் நினைவுகள் மலர்கிறது... இது 'கணக்கு' நோட்டுதான, (எப்படி கண்டுபிடிச்சீங்க?).
    பதில் கடிதம் விரைவில்.

    <<<>>>

    நன்றி செய்யது, பத்திரமாக வைத்துள்ளேன்.

    <<<>>>

    நன்றி சந்தனமுல்லை,

    <<<>>>

    நன்றி இளைய கவி, எனக்கும் அப்படித்தான் இருந்தது,

    <<<>>>

    நம்ம ஊராச்சே, நீங்க நம்புவீங்க வால் தல.

    <<<>>>

    நன்றி Mohamed,

    ReplyDelete
  6. நன்றி அக்பர்,

    <<<>>>

    நன்றி ராஜூ, ஆமாம் நினைவுகள் மலர்கிறது... இது 'கணக்கு' நோட்டுதான, (எப்படி கண்டுபிடிச்சீங்க?).
    பதில் கடிதம் விரைவில்.

    <<<>>>

    நன்றி செய்யது, பத்திரமாக வைத்துள்ளேன்.

    <<<>>>

    நன்றி சந்தனமுல்லை,

    <<<>>>

    நன்றி இளைய கவி, எனக்கும் அப்படித்தான் இருந்தது,

    <<<>>>

    நம்ம ஊராச்சே, நீங்க நம்புவீங்க வால் தல.

    <<<>>>

    நன்றி Mohamed,

    ReplyDelete
  7. சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.