Dec 29, 2012

புனிதம் காப்போம்

பெண்களைப் புனிதங்களாகச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்று எழுதிவைத்து முழக்கமிட்டாலும், எம்பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதை மறுக்கவியலாது. இப்போற்றலே இவர்கள் புனிதங்கள் என்பதையும் நமக்கு புரியவைக்கும். இப்புனிதங்களைப் பாதுகாக்கவே, தனிப் பேருந்து, தனியாக இரயில் பெட்டி, குற்றங்களை விசாரிக்க தனிக்காவல் நிலையம், தனியான சட்டங்கள் என்ற தனிமைப்படுத்தல்கள். தனிச் சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதற்கு இவர்களுடைய இயற்கையான உடலமைப்பே காரணம். உடற்கூற்றளவில் ஆணும் பெண்ணும் ஒருபோதும் சமமாக முடியாது. பெண்கள் கண்ணியமாக ஒரு படி மேலே வைத்து போற்றப்பட வேண்டியவர்கள், புனிதமானவர்கள்.

பல நூறு பேரைக் கொன்றவனுக்குக்கூட மரண தண்டனை கூடாது என்று பலமாக எதிர்த்த ஆர்வலர்கள் பெண் வன்கொடுமை விஷயத்தில் மவுனம் சாதிக்கிறார்கள். இதற்கு உணர்ச்சிநிலை மட்டுமே காரணம் என்று ஒதுக்கிவிட முடியாது. நேற்று புதுவருடப் பிறப்பை எந்த மதுக்கடையில் கொண்டாடலாம் என்று அறிவுரை சொன்னவர்கள் இன்று மதுவை ஒழிப்போம் என்கிறார்கள். நாளை மீண்டும் மதுக்கடை வாசலில் வரிசைக் கட்டலாம். இத்தகைய ஒருநாள் பிரச்சாரத்திற்கும் பெண்கள் மீதிருக்கும் கருணைப் பார்வையே காரணமாகிறது. இதுவே புனிதத்தின் வெளிப்பாடு, சிலருக்கு கடவுளை நினைத்ததும் தவறு செய்ய மனம் தடுப்பதைப் போல, வேறு சிலருக்கு காதலோ, கணவனோ, தாயோ புனிதமாகிப்போவதுண்டு,
எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்பது போல ஊடகங்களுக்கு ஏதாவதொரு தீனி தேவைப்படுகிறது. இவைகளுக்கு சூழ்நிலைக்கேற்ப இவ்விளைய சமுதாயத்தைச் சூடேற்ற தீனி தேவைப்படுகிறது. ஹஜாரேவோ, மோடியோ, அப்சல் குருவோ சூழலுக்கேற்றவாறு சூடாக்கப்படுகிறார்கள். முந்தைய விடயம் குளிர்விட்டுப்போனால் முரணாக முல்லைப்பெரியாறும், அணுவும் அவ்வப்போது உலையில் ஏற்றப்படுகிறது. சில சமயம் உணர்வுப்பூர்வமான புனிதங்களான மதம், இனம், கற்பு இம்முறை பெண்.

முன்னெப்போதும் இல்லாமல் கடந்த சில நாட்களாக வரும் செய்திகள், இந்திய ஆண்கள் அனைவரும் எதிரே வரும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதையே குலத்தொழிலாகக் கொண்டவர்கள் என்பது போன்ற தோற்ற பிம்பத்தை உண்டாக்குகிறது. அதுவும் சில நிலைத்தகவல்கள் ஆண்கள் அனைவரும் வாய்ப்பு கிடைக்காத வன்கொடுமையாளர்கள் என்கிற தொனியில் பரப்புரையாற்றுகிறது. இவற்றில் ஊடகங்களின் பங்கு சொல்லித்தெரியவேண்டியதில்லை. தினம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருவரை அழைத்து பெண்களுக்கெதிரான வன்கொடுமைக்கு என்ன காரணம் என்ற விவாதம் நடத்தி அன்றைய தினத்திற்கான 24 மணிநேரத்தை கடத்திவிடுகிறது.
 
அது நிற்க, வாச்சாத்தி, இருளர் பெண் வன்கொடுமையும், கீழவெண்மணி, தர்மபுரி போன்ற சாதிய வன்கொடுமையும் உலக வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவதில்லை. மோடியை வளர்ச்சி நாயகன் என வர்ணித்து இளைய சமுயாத்தை நம்பவைத்திருக்கும் ஊடகத்திற்கு அங்கு நடந்த இனவறுப்பை வெளிக்கொணற வீரமில்லை. வன்கொடுமை யாரால் யார்மீது நிகழ்தப்பட்டாலும் அது வன்கொடுமையே. ஊடகமும் உயர்சாதிப் பேதமும் இவற்றைத் தீர்மானிப்பதாக இருக்கக்கூடாது.

வெறுமனே ஊடகத்தை மட்டுமே குறைசொல்லலாகாது, இவை நிகழ்விற்குப் பிறகான காட்சி மாற்றத்தையே பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. வெகு சில சமயங்களிலேயே ஊடகம் குற்ற நிகழ்விற்கு காரணியாகிவிடுகிறது.

தண்டனை; இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை இன்னும் விவாதப் பொருளாகவே இருக்கிறது. அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் சோதனையினூடே மரண தண்டனைக் கெதிரான பிரச்சாரத்தையும் நம்மால் செய்ய முடிகிறது. எதிரிகளிடமிருந்த நம்மைக் காக்க ஏவுகணையெனில், நம்மை நாமே காத்துக் கொள்ள தண்டனை. தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். மரணம் உச்சம்.

என் உயிரை எடுத்தவனுடைய உயிரை எடுப்பதே எனக்கான நீதியாக இருக்க முடியும். எனக்கு அநீதி இழைத்தவனை மன்னிக்கும் அதிகாரம் என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும். அவனுக்கான தண்டனையை குறைக்கும் அதிகாரம் என்னைத்தவிர யாருக்கும் இருக்கக் கூடாது, அது கடவுளாக இருந்தாலும் சரியே. குற்றத்தைக் குறைக்கும் மார்க்கம் தண்டனை, நீதி தண்டனை. இங்கு மலிந்து கிடக்கும் ஊழலே தண்டனை கடுமையாவதையும் பயமுறுத்துகிறது. பணம் கொடுத்து யாரையும் தண்டித்துவிடவோ, தப்பவிடவோ முடியும் என்பதே நம்முடைய சாபக்கேடு.

கடுந்தண்டனைத் தவிர்த்து நம்மிடையே சுய பரிசோதனையும் அவசியமாகிறது. நமது உடை, நடை அலங்காரம் பொன்றவற்றை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெண் அலங்காரம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். - அந்நூர் [24:31]
திருக்குறள் அறத்துப்பால்;
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. - குறள் 57
இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.
சிலருக்கு கடவுளும், காதலும் புனிதமாகிக் குற்ற நிகழ்வைத் தடுப்பது போல, பலருக்கு தண்டனை புனிதமாகப்பட வேண்டும். இப்புனிதங்களே நம்மிடமிருந்து நம்மைக் காக்கும். 

புனிதம் காக்கும்.

2 comments:

  1. //எனக்கு அநீதி இழைத்தவனை மன்னிக்கும் அதிகாரம் என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும். அவனுக்கான தண்டனையை குறைக்கும் அதிகாரம் என்னைத்தவிர யாருக்கும் இருக்கக் கூடாது, அது கடவுளாக இருந்தாலும் சரியே.//

    ம்.

    சுயபரிசோதனைகள் எல்லாருக்குமே அவசியமாகிறது இப்போது.


    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.