Sep 4, 2011

தமிழ் தாய்க்கு ஒரு கடிதம்

இன்று ஆசிரியர் தினமாம். விடுமுறையில் வீட்டில் இருக்கும் அக்கா பையன் சொல்கிறான். ஆசிரியர் என்றதும் சட்டென என் நினைவில் வரும் என் தமிழ் ஆசிரியருக்கு வேறென்ன செயதுவிட முடியும் இந்த மீள்பதிவை தவிர.


எனது பள்ளி ஆசிரியர் தமிழ் தாய் எனக்கு வரைந்த கடிதத்திற்கு பதில்.

பாசமுள்ள தமிழ் அம்மாவிற்கு,

தங்களின் முன்நாள் மற்றும் என்நாளும் மாணவன் அன்புள்ள போதை (எனக்கு விருப்பம் இருந்ததில்லை என்றாலும், அப்படித்தானே என்னை அழைப்பீர்கள்? ) எழுதுவது. உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்று 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. உங்கள் கடிதமும் நீங்கள் தந்த வாழ்த்தும் எனக்கு ஒரு பொக்கிஷம், கிடைப்பதற்கரிய பொக்கிஷம். இன்றும் அதை பத்திரம் போல பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.

இதுவரை நான் படித்த பாடங்களில் / ஆசிரியர்களில் உங்கள் பெயரும் நீங்கள் கற்பித்த பாடமும்தான் இன்றும் நினைவில் உள்ளது. நீங்கள் பாடம் சொல்லித்தரும் விதமும் உங்கள் மரியாதைக்குரிய தோற்றமும்தான் அதற்கான காரணமாய் இருக்கமுடியும். தமிழ் தாய்க்கு உருவம் கொடுக்கச் சொன்னால், நான் உங்கள் உருவத்தைதான் கொடுப்பேன். தமிழாய், தமிழ் தாயாய் வாழ்ந்து காட்டினீர்கள்.

பள்ளிகளில் கேட்கப்படும் ஒரு கேள்வி, நீ என்னவாக ஆசைப்படுகிறாய்? என்பது. அதற்கு அதிகமான மாணவர்கள் சொல்லும் பதில், 'நான் ஆசிரியர் ஆக ஆசைப்படுகிறேன்' என்பது. ஆசிரியர் தன் வாழ்வினால் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். கல்வியோடு சேர்த்து ஒழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியருக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி.

இங்கு தேவையில்லைதான், இருந்தாலும் சொல்கிறேன். சக மாணவர்கள் சேர்ந்து எத்தனை ஆசிரியர்களை கேலி செய்து சிரித்திருக்கிறோம், சைட் அடித்திருக்கிறோம். அப்போது பள்ளியில் ஆண் ஆசிரியர் ஒருவர் தான் இருந்தார். அவர் பாடபுத்தகத்தை யாரையாவது வாசிக்கச் சொல்லிவிட்டு பக்கத்து வகுப்பு பெண் ஆசிரியருடன் அரட்டை அடிக்க சென்றுவிடுவார். அரட்டை அடிக்க யாரும் இல்லை என்றால், சினிமா மற்றும் அரசியல் நகைச்சுவைகளை சொல்லியே அன்றைய வகுப்பை கடத்தி விடுவார். அவர் மீது எப்படி மதிப்பு வரும்? அறிவியல், சமூக அறிவியல் பெண் ஆசிரியர்களை அவர்களின் உடை அலங்காரத்திற்காகவே சைட் அடித்திருக்கிறோம். அவர்கள் கரும்பலகையில் எழுதும் போது நாங்கள் கரும் பலகையை பார்த்ததேயில்லை. அந்த பாடங்கள் எப்படி புரிந்திருக்கும்? வரலாற்றின் மீதும், பூகோலத்தின் மீதும் இயல்பாக இருந்த விருப்பம் அவை தானாக தலையில் ஏறியது. ஆனால் அறிவியல்...இன்றும் ஒன்றும் விளங்குவதில்லை. கணக்கு பெண் ஆசிரியர், வகுப்பில் கடு கடுவென இருப்பார். கரும்பலகையில் கட கடவென எழுதிப்போட்டுவிட்டு எங்களிடம் அதைப்பார்த்து எழுத சொல்லிவிட்டு சென்று விடுவார். ஆனால் பணம் வாங்கிக்கொண்டு அவர் வீட்டில் நடத்தும் வகுப்பில், நன்றாக சொல்லி தருவதாக அங்கு செல்லும் மாணவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். கணக்கு கஷ்டமாய் போனதற்கான காரணம் இவர்தான் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலத்தில் படித்துவிட்டு ஆறாம் வகுப்பிற்கு தமிழ் பள்ளிக்கு வந்த எனக்கு, தமிழ் பாடம் சரியாக எழுதவும் படிக்கவும் வராததால், தமிழ் மொழி மீதே வெறுப்பில் இருந்தேன். உங்கள் தெளிவான தமிழ் உச்சரிப்பாலும் வார்த்தைகளாலும் நான் தமிழ் பற்று மிக்கவனாக மாற்றப்பட்டேன்.

நினைவுருக்கிறதா அம்மா, ஒருமுறை நான், சிக்கி, ராதா கிருஷ்ணன் மூவரும் பள்ளிக்கு பின்னாலிருந்த முருகன் திரையரங்கில் ஜெய்ஹிந்த் திரைப்படம் பார்க்க சென்றிருந்தோம். பள்ளியில் இருந்தவாறே நீங்கள் எங்களை கவனித்துள்ளீர்கள். மறுநாள் வகுப்பு முடிந்ததும் என்னை தனியே அழைத்து நீங்கள் சொன்ன, 'இது படிக்கும் காலம், படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. சினிமாவிற்குச் செல்வது உன் குடும்ப சூழலிற்கும் ஏற்றதல்ல...’ என்ற அறிவுரை, அதன் பிறகு என்னை நீண்ட நாட்களுக்கு திரையரங்கு பக்கம் செல்லாமல் வைத்திருந்தது. தனிமனித வாழ்விலும் என்னை ஒழுக்கமுள்ளவனாக ஆக்கினீர்கள் என்பதற்கு இன்னும் பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.

இன்றும் உங்கள் மாணவனை நல்லவனாய், அமைதியானவனாய், அன்பானவனாய் நீங்கள் காணலாம். இவற்றிற்கெல்லாம் நீங்கள் சொன்ன, ‘நல்ல பண்புகளாலும் நல்ல செயல்களாலும் தான் வாழ்வில் உயர முடியும்’ என்ற அறிவுரை தான் காரணமாக இருக்க முடியும்.

கடிதத்தின் இடையே சொல்லியிருந்தீர்கள், மகனே! அமர்க! என்று. அந்த அமர்தலுக்காகத்தான 15 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறேன். இடையே இப்போது, ஒரு மரம் கிடைத்துள்ளது, இது என் தகுதிக்கு சற்றே வசதியாகப்படுகிறது. இங்கே இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். இப்போதைய இளைப்பாறுதல் போதுமென்றாகும் போது மீண்டும் ஓடுவேன், ஓடிக்கொண்டே இருப்பேன், நல்லவனாய், அமைதியானவனாய், அன்பானவனாய்...

என்றும் உங்கள் பாசத்திற்குரிய மாணவன் – பீர் முகம்மது.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
இடையில் சில காலம் தமிழில் எழுதும் சூழல் இல்லாதிருந்த எனக்கு மீண்டும் தமிழில் எழுதும் வாய்ப்பினை ஏற்படுத்திய இந்த வலைப்பூ உலகத்திற்கு நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நன்றி!!!

17 comments:

  1. பீர் சார்
    பின்றீங்க போங்க
    இன்னம் கொஞ்சம் அழுத்தமா சொன்னீங்கன்னா இன்னம் அழகா இருந்துருக்கும்

    ReplyDelete
  2. கடைசி வரிகளில் நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள்.. குங்கமத்துக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நன்றி வசந்த், ஆமாம்...இந்த தமிழ் போதை இறங்காது.

    <<<>>>

    நன்றி பாலா, இன்னும் கொஞ்சம் அழுத்த முயற்சி செய்கிறேன்.

    <<<>>>

    நன்றி கார்த்திக், ...?

    <<<>>>

    நன்றி (டக்ளஸ்) ராஜு உங்களுக்கும் ஒரு புன்னகை,
    (என் தவறுகளை என்னிடம் சுட்டிக்காட்டுபவர்களை நான் என்றுமே தவறாய் நினைப்பதில்லை.)

    ReplyDelete
  4. நானும் தான்!
    வலைப்பூ இல்லைனா தமிழ் மறந்தே போயிருக்கும்!

    ReplyDelete
  5. நல்ல நெகிழ்ச்சியான பதிவு பீர்.

    ReplyDelete
  6. மனதை நெகிழ்த்திய பதிவு. அறுபதுகளை நினைவுறித்தியது

    ReplyDelete
  7. நன்றி வால், சரியா சொன்னீங்க..

    <<<>>>

    நன்றி ஸ்ரீ,

    <<<>>>

    நன்றி அப்துல்லா அண்ணே,

    <<<>>>

    நன்றி nerkuppai thumbi,

    ReplyDelete
  8. இளமைக் காலங்களை நினைவுக்கூரச் செய்யும் பதிவு.

    //இடையில் சில காலம் தமிழில் எழுதும் சூழல் இல்லாதிருந்த எனக்கு மீண்டும் தமிழில் எழுதும் வாய்ப்பினை ஏற்படுத்திய இந்த வலைப்பூ உலகத்திற்கு நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.//

    உண்மையான வார்த்தைகள்!

    ReplyDelete
  9. //Maximum India said...
    இளமைக் காலங்களை நினைவுக்கூரச் செய்யும் பதிவு.//


    வருகைக்கு நன்றி சார்,

    ReplyDelete
  10. பீர் அண்ணே!

    இந்த கடிதம் நம்ம தமிழம்மா கிட்ட சேத்துட்டீங்களா? இல்லாட்டி நான் வேணும்னா சேத்துடவா?

    :) நானும் அதே பள்ளி தான்.. எனக்கு அவங்கள நல்லாவே தெரியும். வேணும்னா சொல்லுங்க அப்படியே ஒரு print எடுத்து கொண்டு போய் சேர்த்துடறேன்!

    இத பார்த்த ரொம்ப சந்தோசப்படுவாங்க!

    ReplyDelete
  11. நன்றி நாளைப்போவான் மணி, இதைத்தான் எதிர்பார்த்தேன். சேர்த்துவிடுங்கள். முடிந்தால் அவர்கள் எனக்கு எழுதிய (இதற்கு முந்தைய இடுகை) கடிதத்தையும் சேர்த்து.

    தமிழ்தாய் மகிழ்ச்சியாய் இருப்பது முக்கியம்.

    ReplyDelete
  12. பிர‌மாத‌ம்.. உண்மை..

    ReplyDelete
  13. @ஆமினா, பதில் ஸ்மைலியா? :-)

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.