Sep 15, 2008

தினமலரை ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

தினமலரை ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன் தினமலர் உட்பட எந்த ஒரு நாளிதழையும் நாம் வெறுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை. மாறாக - அந்த நாளிதழுடன் மட்டுமல்ல, மற்ற ஊடகங்களுடனும் நமது தொடர்பை வலுப்படுத்த வேண்டும். கேலிச்சித்திரத்துக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்த நாம், நாம் அந்த ஊடகங்கள் செய்யும் நல்ல செயல்களை என்றேனும் பாராட்டியதுண்டா ? எடுத்துக்காட்டாக, முஸ்லிம்களை தீவிரவாதிகளாய் முத்திரை குத்தி செய்தி வெளியிடும் புகழ் பெற்ற தமிழ் நாளிதழ் ஒன்று, ஒவ்வோர் ஆண்டும் ரமளானில் முப்பது நாளும் இஸ்லாமியச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த நாளிதழுக்கு எத்தனை முஸ்லிம்கள் நன்றி தெரிவித்து பாராட்டுக் கடிதம் எழுதியிருப்போம் ? இதைத் தெரிந்து கொள்ள அந்த நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றும் என் நண்பரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'ஊஹூம்...! அத்தி பூத்தாற்போல் எப்போதாவது ஒன்றிரண்டு வரும்; அவ்வளவுதான்' என்று சொல்லி வருந்தினார். முஸ்லிம்கள் என்றால் எதற்கடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்துவார்கள்; ஆக்கபூர்வமாகச் செயல்பட மாட்டார்கள்; அப்படிக் கத்துவது கூட அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தானே தவிர மற்றவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்' எனும் ஒரு விமர்சனத்தையும் அந்த நாளிதழின் துணை ஆசிரியர் முன்வைத்தார். விலைவாசி ஏற்றம், குடிநீர்ப் பிரச்னை, மின்வெட்டு போன்ற பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சனைகளுக்காவது எந்த முஸ்லிம் அமைப்பாவது போராடி இருக்கிறதா ? எனும் வினாவையும் தொடுத்தார். இந்த விமர்சனம் சரிதானா ? வாசகர்களின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். - சிராஜுல் ஹஸன் பொறுப்பாசிரியர், சமரசம் www.samarasam.com www.iftchennai.org samarasam12@gmail.com 16-30 செப் 2008 சமரசம் இதழிலிருந்து

No comments:

Post a Comment

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.