Nov 2, 2010

ஜனநாயகம் - சாபமான வரம்


தமிழ் நாட்டில் தேர்தல் அடுப்பு பற்றவைத்தாகிவிட்டது. இனி சூடுபிடித்து கொழுந்துவிட்டு எரியும்.  கருப்புகள் வெளியே வந்து ஓரளவுக்காவது பொதுசன மையத்தில் பணம் புரளும். அண்மையில் நடந்து முடிந்த ஆர்பாட்டங்களில் தலைக்கு 500+பிரியாணி விநியோகம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனில் முத்திரைக்கு இன்னும் அதிகமாகவே பேரம் பேசலாம், பேசுவார்கள். போலி முக்த்திரையுடன் நம் காலில் விழுந்து, காசு கொடுத்து ஓட்டு பெற்றதும், வாய்கரிசி போட்டு செத்த பாம்பாக்கிவிடும் நிலை இங்கே மிகச்சாதாரணம். சாலையோரத்தில் அல்லது 'நடு' சென்டரில் நிற்கவைக்கப்பட்டிருக்கும் இலவச பறவை கழிப்பிடத்திற்கு காட்டப்படும் கரிசனம் கூட மனித மலக்கழிப்பிடத்தின் மீது இருப்பதில்லை. ஆண்டுக்கு ஒரு முறையேனும் பறவை கழிப்பிடத்தை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு தடவி, அதன் பெயரில் ஒரு கலவரத்தையும் நடத்துபவர்களும் சுயகழிவிறக்க முட்டுச்சந்தையே நாடும் அவலம் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும்.

கடந்த மாதத்தில் இரண்டு தினப்பத்திரிக்கை புண்ணியத்தில் இரண்டு பறவை கழிப்பிடங்களுக்கு மீள்வாழ்வு கிடைத்துள்ளது. அதற்கு சிறகில்லா காக்கைகளும் நன்றி செலுத்திதை தினமணி செய்திக்கு கிடைத்த வெற்றி என்று புகைப்படத்துடன் ஆதாரம் செய்துள்ளனர். சிம்மக்கல் பகுதியில் நடுரோட்டில் இருக்கும் அந்த சிலையை சற்றே இடம் மாற்றிவைக்கவும் அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றது இந்தியாவை ஆளும் கட்சியினரே. கட்சத்தீவை இன்னும் மீட்கக்காணோம். காவேரி தண்ணீரை திறந்துவிட வக்கில்லை. சிலையை மீட்டுவிட்டதாய் போட்டோவிற்கு பல்லிளிக்கிறார்கள். அதைவிடக்கொடுமை, மதுரையின் சாலையோர வியாபாரிகளை தகர்த்து கொண்டுபோய் தல்லாகுளம் பகுதியில் ஒருங்கிணைந்த விற்பனைக்கூடத்தில் அடைத்திருக்கிறார்கள், தீபாவளி சிறப்பு விற்பனையாம். அங்கு ஏற்கனவே இருந்த சிலைக்கு அருகில் கடை விரித்தையும் கண்டித்து தினமணி செய்திவெளியிட அதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த கடைகளை அப்புறப்படுத்திவிட்டது மாநகராட்சி. தினமணி செய்திக்கு துரித நடவடிக்கையாம்.

மதுரையில் தொழில் தொடங்குவதாய் இருந்த பன்னாட்டு கணிணி நிறுவனத்தினர் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிடச் செல்ல ரோட்டில் பல சாகசங்களை நிகழ்த்த வேண்டிய நிலை. 'ஐயோ போதும் ஆளை விடுங்க' என்று மேற்கு பக்கம் சென்றுவிட்டனராம். உள்கட்டுமானம் இல்லாத நாட்டில் ஒரு குப்பனும் குப்பை கொட்ட வரமாட்டான் என்பது சுப்பனுக்கு தெரிந்திருந்தும், சுற்றுவட்டாரத்திற்கு தெரியவில்லை. டிவிஎஸ் நகர் பளபளத்தால், மதுரை முழுக்க தங்கத்தால் தார் போட்டிருக்கும் என்ற நினைப்பாயிருக்கும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் வருவதற்கு உள்ளே வரச்சாலையில்லை சரி, குழிகளுக்கிடையில் அறிதாய் இருக்கும் குவிகளினூடே ஊர்ந்து வந்து கடை வைத்திருக்கும் பண முதலைகளையும் ஓடச்செய்யும் வழியை தம்பிகள் இனிதே செய்துவருகிறார்கள். முன்பு நகைக்கடையை எதிர்த்தது போல இப்போதும் ஒரு நகை மற்றும் ஜவுளிக் கடைக்கு தரும் நெருக்கடியில் அவர்கள் மதுரையை விட்டு ஓடும் எண்ணத்தில் இருப்பதாகப் பேச்சு.

இணையதளங்களில் பதிவு செய்யும் போது கேட்கப்படுவதால் என்னுடைய பிறந்த நாள் இன்னும் நினைவிருக்கிறது, ஆனால் எனக்கு எந்தவிதத்திலும் சொந்த/பந்தமில்லாத ஒருவரின் பிறந்தாள் என்றும் என் நினைவிலிருந்து மறப்பதில்லை. இது எனக்கு மட்டுமல்ல, மதுரை வாழ் மரத்தமிழன் ஒருவனுக்கும் மறக்க வாய்ப்பே இல்லை. மறந்துவிடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள், மறந்துவிட்டால் இருக்க மாட்டீர்கள். என்று சொல்லாமல் சொல்லி எங்களை இம்சிக்கிறார்கள். ஜனவரிக்கு ஆறு மாதம் முன்பே சுவரெழுத்துகள் ஆரம்பமாகிவிட்டது. தன் தாய் தந்தை பிறந்தநாளையும் இப்படி செலவுசெய்து விளம்பரப்படுத்த மாட்டார்கள். உடன்பிறந்த அண்ணன் கஞ்சிக்கு வழியில்லாமல் இருப்பான், இவன் ஊருக்கு பிரியாணி பொட்டலம் கொடுத்துக்கொண்டிருப்பான். அதுசரி... இதெல்லாம் நேரடி முதலீடு. சொந்த அண்ணனுக்கு சோறு போட்டால், சொத்தையா எழுதி வைக்கப்போறான்.

இவை நம் நாட்டின் சாபக்கேடு. சாபத்தை சகித்தே வாழ வேண்டும். இத்துர்பாக்கிய நிலை நம்மீது திணிக்கப்பட்டிருப்பதை அறிந்தோ அறியாமலோ நாமும் ஏற்றுக்கொண்டுவிட்டோம். சகித்து வாழ்கிறோம், சந்தோஷமாக!

2 comments:

  1. சொல்லப்படா

    சொல்லிடங்கா கொடுமைகள் இன்னும் எத்தனை எத்தனையோ

    சொரணைன்னு ஒன்னு எனக்கு இருக்கான்னே தெரியலை ...

    ReplyDelete
  2. மதுரையில இருந்துகிட்டே இப்படி ஒரு பதிவா? செம தில்லுதான்!! :-)))

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.