Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Jan 5, 2010

உங்கள் தங்கமணியிடம் உதை வாங்குவது எப்படி?

திருமணம், விருந்து போன்ற நிகழ்வுகளில்...
தங்ஸ்ஸயே சுத்தி சுத்தி வாரீங்க >>> ம்.. பொழச்சு போங்க.
அப்படி சுத்தி வரும்போது சக பதிவரிடம் சீரியஸா பேசறீங்க >>> மூக்கிற்கு மேல் கோபத்தை பார்க்கலாம்.
அப்படி பேசும் போது இடையே ஹாய் சொல்பவருக்குப் பெயர் ரீடா, கீதா, ஜமீலா வாக இருந்துவிட்டால் >>> மூக்கிற்கு கீழேயும் கோபத்தை கேட்கலாம்.
அவர் உண்மையில் அழகி, புத்திசாலியும் கூட >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் பிறந்தநாளின் போது...
வெளியே அழைத்துச் சென்றால் >>> ம்.. பொழச்சு போங்க.
அந்த இடம் உங்கள் விருப்ப இடமாக (மட்டும்) இருந்தால் >>> மூ. மே. கோ.
அங்கு தங்கஸ்க்கு பிடித்த டிஷ்/பொருள் கிடைக்காவிட்டால் >>> மூ. கீ. கோ.
இதையெல்லாம் விட ஆரம்பத்திலேயே பிறந்தநாள் தேதியை மறந்து (நினைவிருந்தாலும்) தொலைத்துவிட்டால் >>> வாழ்த்துக்கள்... உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் சமைத்த உணவை சுவைக்கும்(?) போது...
ஒன்றும் பேசாமல் சாப்பிட்டால் >>> ம்.. பொழச்சு போங்க.
அட.. சுடுதண்ணி நல்லா பண்ணியிருக்கம்மா >>> மூ. மே. கோ.
இன்னிக்கும் அதே சாம்பாரா >>> மூ. கீ. கோ.
எங்க அம்மா சாம்பார் நல்லா வெப்பாங்க >>> வாழ்த்துக்கள்... உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் கூட சினிமாவிற்கு செல்லும் போது...
சினிமா தங்ஸ்க்கு பிடிச்சிருக்கு >>> ம்.. பொழச்சு போங்க.
அதே சினிமா உங்களுக்கு பிடிக்கவில்லை >>> மூ. மே. கோ.
உங்களுக்கு பிடிச்சிருக்கு, தங்ஸ்க்கு பிடிக்கவில்லை >>> மூ. கீ. கோ.
அந்த சினிமா உலகத்தரத்தில் இருந்தால் >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ், உங்களிடம், 'இந்த ட்ரெஸ் எனக்கு எப்பிடியிருக்கு?' என்று கேட்கும் போது...
நீங்கள், 'நீ உடுத்தியிருப்பதால் தான் இந்த உடைக்கே அழகு' >>> ம்... பொழச்சு போங்க.
நல்லாயிருக்கு.. நல்லாயிருக்கு >>> மூ. மே. கோ.
அந்த நீலக்கலர் இதைவிட நல்லாயிருக்குமே >>> மூ. கீ. கோ.
வேறு ஏதாவது ஏடாகூட உண்மை சொல்றீங்க >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ், உங்களிடம் ஏதாவது பிரச்சனை பற்றி பேசும் போது...
லேப்டாப்பை மடித்துவைத்துவிட்டு கேட்டுக் கொண்டிருந்தால் >>> ம்.. பொழச்சு போங்க.
பின்னூட்டமிட்டுக்கொண்டே ம்.. ம்... என்று மட்டும் சொன்னால் >>> மூ. மே. கோ.
நீங்களும் திரும்ப ஏதாவது அறிவுரை சொன்னால் >>> மூ. கீ. கோ.
தங்ஸ் பேசிக்கொண்டிருக்கும் போது, நீங்கள் குறட்டைவிட்டால் >>> வாழ்த்துக்கள்.. உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இனி வரப்போகும் நாட்களில் இன்னும் அதிகமாக டிப்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்கிறது :-)

Oct 16, 2009

அம்மா

எனக்கு நான்கு வயதிருக்கும், பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஆயா வந்தபிறகு தான், அம்மா எனக்கு தலை சீவி விடுவாள். தேங்காய் எண்ணை தேய்த்து, ஏற்றி சீவி, பிறகு நெற்றியிலிருந்து முன்று இன்ஞ் அளவிற்கு விட்டு மீதி முடிகளை வலதிலிருந்து இடது வாகு எடுத்து ஒட்ட வகிர்ந்து விடுவாள். முன்பக்கம் மட்டும் தூக்கலாக பாப் ஆகி இருப்பதால், அதற்கு பெயர் பஃப். அவசரத்திற்கு வேறு மாதிரியாக சீவினாலும், அழுது அடம் பிடிப்பேன். என் ஃபேவரைட் பஃப் ஹேர்ஸ்டைல் தான். எனக்கு பஃப் சீவிவிட்டதிலிருந்து தான் என் அம்மா எனக்கு நினைவிருக்கிறாள். அதற்கு முன்பு, எனக்கு இந்த பூவுலகை காண்பிப்பதற்காக, என்னை பெற்றெடுப்பதற்காக 20 வருடங்களாக கோயில், குளம், தர்கா என்று வேண்டுதலுக்காக சுற்றியிருக்கிறாள். தன்னை வருத்தி எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா.

எனக்கு ஆறு வயதிருக்கும், அதிகாலை நான்கு / ஐந்து மணிக்கு, பாண்டி கடையில் வாங்கிவந்த டீ யை டம்ளரில் ஊற்றி ஆற்றியவாறே என்னை மட்டும் மெதுவாக எழுப்புவாள், 'டேய்.. பீரப்பா.. எந்திரிப்பா.. டீ குடிச்சுட்டு படுத்துக்கோ'. எனக்கு டீ குடிப்பதில் அலாதி பிரியம் இருந்தது. அருகில் உறங்கிக்கொண்டிருக்கும் அப்பாவிற்கு சத்தம் கேட்டுவிட்டால், அம்மாவிற்கு திட்டு விழும், 'தூங்கற பையன எழுப்பி டீ குடுக்குறியே.. அறிவிருக்கா உனக்கு, அவன கெடுக்கறது நீ தான்'. இல்லை.. எனக்காகவே என்னை எழுப்புவாள்,  எனக்காக திட்டு வாங்கிய என் அம்மா.

என் பதின் வயதிற்கு முன்பாகவே அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு என் அம்மா தான் என்னை படிக்க வைத்தாள். 'வீட்டுப்பாடம் எழுதிட்டு போய் தூங்குப்பா' என்பாள். நான் எழுதி முடிக்கும்வரை அருகிலேயே அமர்ந்திருப்பாள். பீரப்பா.. குண்டு குண்டா.. அழகா எழுதுவான்.. தெரியுமா' என்று பக்கத்து வீடுகளில் பெருமையாய் பேசுவாள், எந்த மொழி எழுத்தானாலும், கட்டமும் வட்டமுமாக மட்டுமே அறிந்திருந்த, எழுதப்படிக்க தெரியா என் அம்மா.

முதன்முறை நான் வெளிநாடு கிளம்பும்போது, வாசலில் கட்டிபடித்து அழுது வழியனுப்பினாள். அன்றிலிருந்து இன்றுவரை பாசத்திற்காக ஏங்குகிறேன். அன்று அங்கு தொலைத்துவிட்டு இன்றும் எங்கோ தேடுகிறேன். இந்த பதின்இரண்டு ஆண்டுகளில் நான் மனதார மகிழ்ச்சியாய் இருந்த தருணங்களை மணிகளில் எண்ணிவிடலாம்.  பாசம் கிடைக்காத போது ஏங்குவதும், பாசம் காட்ட தருணம் வரும்போது பகிரத்தெரியாதவனாகவும் மாற்றிவிட்டது இந்த பதின்இரண்டு வருட வெளிநாட்டு வாழ்க்கை. அக்கா, தம்பி என கூட்டு ஒரே குடும்பமாக இருந்தாலும், தேவையான பணத்தை அனுப்பிவிட்டால் அம்மா சந்தோசமாக, சுகமாக இருப்பாள் என்றே இருந்துவிட்டேன். 'நீ சந்தோசமா இருக்கியாம்மா' ஒரு முறை கூட கேட்டதில்லை. முன்று முறை உம்ரா* செய்த நான், என் அம்மாவிற்கு ஒருமுறை கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. புழல் சிறையில் இல்லாவிட்டாலும், சூழல்சிறையின் குற்றவாளி நான்.

என்னை ஈன்ற பொழுதினை பெரிதாக உவந்திருப்பாளா தெரியவில்லை, ஆனால் இந்த தாய் வயிற்றில் பிறவி எடுத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

நேற்று அக்காவிடமிருந்து போன், 'அம்மாக்கு சுகர் அதிகமாகி ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்பா'. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் அறியாமல் என் கண்களில் கண்ணீர். ஒன்றும் பேச முடியவில்லை. 'நீங்க வச்சிடுங்க, நான் திரும்ப கால் பண்றேன்' வைத்துவிட்டேன்.

படுப்பதும் திரும்ப எழுந்து அமர்வதுமாய் நேற்று காலையிலிருந்தே ஒரு மாதிரியாக இருந்திருக்கறார். கேட்டதற்கு, 'ஒன்றுமில்லை, தூக்கம் வருவதுமாதிரி இருக்கிறது' என்றாராம். மாலையில் அக்காவுடன் நடந்துதான் சக்கரை அளவு சோதனை செய்ய சென்றிருக்கிறார். மருத்துவனை சென்றதும், 'அல்லாஹ்' என்றவாரே விழுந்துவிட்டாராம். க்வாலிட்டி கேரில் ஈ.ஸி.ஜி எடுத்ததில், பல்ஸ் லோவாக இருப்பதால் உடனடியாக ஐ.சி.யூவில் வைக்க வேண்டும் என்றிருக்கிறார்கள். அங்கிருந்தே அம்புலன்ஸில் செண்பகம் மருத்துவமனை டாக்டர் அண்ணாமலைசாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா உயிர்வாழ செயற்கையாய ஆக்ஸிஜன் சுவாசித்திருக்கிறார்.  எனக்கு தெரிந்த எந்த சொந்தமும் ஐ.சி.யூவில் இருந்ததில்லை. முதலாவதாய் என் அம்மா ஐ.சி.யூவில் இருந்த செய்தி என்னை நடுங்க வைத்தது. அப்போது என்னால் முடிந்தது 'என் அம்மா விரைவில் குணமடைய துஆ** செய்வது' மட்டும்தான்.
இன்று மதியத்திலிருந்து இயற்கை காற்றை சுவாசிக்கிறார். ம்... என் துஆ** ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. என்னிடம் போனிலும் பேசினார், 'நீ எப்டிப்பா இருக்க, உடம்ப பார்த்துக்க' என்று மட்டும்.

உம்ரா* மக்காவிலுள்ள புனித ஆலயம் 'காபா' வை தரிசிப்பது.
துஆ** பிராத்தனை.