சுப்புலட்சுமி தெரியும்ல.. நம்ம கூட படிச்சாளே...
me: ஆமாமா தெரியும். :( ஏன்.. என்னாச்சு?
ஸ்ரீரங்கம் புனித அந்தோனியர் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பில்தான் சுப்புலட்சுமி எனக்கு பழக்கம். அதற்கு முன்பு ஆலங்குடி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் படித்திருக்கிறாள். அவளும் ஆணிமுத்துவும் வயல், தோப்பு, கம்மாய் என ஒன்றாய் சுற்றியிருக்கிறார்கள். பிறகு ஆணிமுத்து கறவை மாடுகளுடன் அதே இடங்களை சுற்ற, கிராம தலையாரி மகளான சுப்புலட்சுமி மேல் படிப்பிற்காக திருச்சி ஸ்ரீநிவாசா நகரிலிருக்கும் தலையாரியின் தங்கை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அதன் பிறகு எப்போதாவது ஆலங்குடி போகும்போது ஆணிமுத்து நேரிட்டால் 'ஹாய் ஆணி.. ஹவ் ஆர் யூ' என்பதோடு சரி. இப்போதெல்லாம் ஆணியை தீர மறந்துவிட்டாள் போலும். அவன் பற்றிய பேச்சே இல்லை.
இரண்டு வருடங்களில் சுப்புலட்சுமி நிறையவே மாறிவிட்டிருந்தாள். கல்லூரியில் சேர்ந்த பிறகு சுப்புலட்சுமி நவமணி என்ற பெயரை சுலக்ஷனா என்பதாக மாற்றிக்கொண்டாள். லைஃப்ஸ்டைல் மாறிவிட்டது. சுப்புலட்சுமியாக இருந்தபோது கண்டுகொள்ளாத கந்தசாமிகள், சுலக்ஷனாவான பிறகு சும்ம்மா பின்னால் அலைந்தனர், அவளும்தான். கந்தசாமிகளில் ஒருவனான ரமேஷிடம் மட்டும் நெருங்கி பழக ஆரம்பிக்க, மற்றவர்கள் ஒதுங்கிவிட்டிருந்தார்கள். அவனோடு சேர்ந்து திருச்சியில் அவள் சுற்றாத இடமில்லை. அடிக்கடி இருவரையும் முக்கொம்பு அணைக்கட்டில் பார்த்ததாக இனியவள் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஸ்ரீரங்கத்திலிருந்து லாங்ஜம்ப் தூரம் என்பதால் முக்கொம்பை தெரிவு செய்திருக்கலாம். இருவருக்கும் அசைவ உணவு பிடித்திருந்தது. புகாரியில் வாரம் இருமுறை மதிய உணவிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ரமேஷ், சுலக்ஷனாவிற்குள் இருந்த சுப்புலட்சுமியை காதலித்தான். அவளுள் இருந்த கிராமத்து அழகை ரசித்தான். ஆனால், சுலக்ஷனா தான் கிராமத்துக்காரி என்று அறியப்படுவதை வெறுத்தாள். அதை வெளிக்காட்டுவதை அவமானமாக உணர்ந்தாள். அவளுக்கு ரமேஷ் என்ற பெரிய இடத்து பையனைத்தான் பிடித்திருந்தது. ஒரு வார விடுமுறையில் ஆலங்குடி சென்றுவந்த சுலக்ஷனாவிடம், ரமேஷ் சுவீடனுக்கு சென்றுவிட்டதாக இனியாள்தான் சொல்லியிருக்கிறாள். ஆத்திரமடைந்த சுலக்ஷனா, ரமேஷ் தன்னை ஏமாற்றவிட்டதாக அவனை மட்டுமல்ல மொத்த ஆண்களையும் வெறுக்க ஆரம்பித்தாள். அதற்கடுத்த மாதமே ஆஸ்திரியாவில் கிடைத்த இரண்டு வருட ஒப்பந்த வேலைக்கு சென்றுவிட்டாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இனியாள் சாட்டில் வந்தாள். சுலக்ஷனா கொலை செய்யப்பட்டுவிட்டாளாம். அவளது சொந்த ஊரான கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடியில் வைத்து ரமேஷ் தான் கொலைசெய்திருக்கிறான் என்றும் சாட்டினாள்.
ரமேஷ் பெரிய இடத்து பையன், பிறந்ததில் இருந்து போஷாக்கானவன். தாய் மற்றும் மூன்று தாதிகளின் பராமரிப்பில் வளர்ந்தவன். இன்று ஒரு MNC வங்கியின் Investment டிவிஷனுக்கு வைஸ் பிரசிடன்ட். எனக்கு ரமேஷ் அவ்வளவாக பழக்கமில்லை என்பதால், அவனைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இனியாளைக் கேளுங்கள்.
இந்தக்கொலையை ரமேஷ் செய்திருக்கமாட்டான் என்று நம்புகிறேன். அவன் அவளை எப்போதும் வெறுத்ததில்லை. கடைசிவரை அவளுடன் நெருக்கமாகவே இருந்திருக்கிறான். ஒரு வேளை ஆணி? விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
இப்படிக்கு,
மணிமேகலை.
ஸ்ரீரங்கம்.